பதிவு செய்த நாள்
29 ஏப்2019
07:02
இந்திய சந்தையின் மதிப்பீடுகள் குறித்து, தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டிருக்கின்றன. இந்த பிரச்னை நிப்டியின் தொடர் உயர்வால் மேலும் பெரிதாகி, மதிப்பீடுகள் சார்ந்த ஆய்வாளர்களை கவலைப்பட வைத்துள்ளது.
சந்தை குறியீட்டின் ஒருமித்த மதிப்பு, அதிகமாக உள்ளது என்பது, பல முதலீட்டாளர்களின் அச்சம். நிப்டியின் ஒரு பங்கு லாபம் காட்டும் வளர்ச்சி வேகத்தை விட, அதன் மதிப்பின் வளர்ச்சி மிக அதிகம் என்பதே இந்த அச்சத்தின் மூலகாரணம்.இதற்கு, நிப்டியில் தனிப்பட்ட பங்குகளுக்கு வெயிட்டேஜ் வழங்கும் அடிப்படையே முக்கியகாரணம். நிறுவனர்களின் பங்கீட்டளவு அதிகம் உள்ள பங்குகளுக்கு வெயிட்டேஜ் குறைவாகவும், பொது முதலீட்டாளர்களின் பங்கீட்டளவு அதிகம் உள்ள நிறுவனங்களுக்கு வெயிட்டேஜ் அதிகமாகவும் வழங்கும் முறை அமல் படுத்தப்பட்டதே நிப்டி சார்ந்த மதிப்பீட்டு சிக்கல்களுக்கு அடிப்படை காரணம்.
ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., ஐ.டி.சி., மற்றும் எல்., அண்டு டி., போன்ற குழுமங்களில் யாரும் நிறுவனராக தற்போது அடையாளப்படுத்தப்படவில்லை. ஆகவே, இந்த குழும பங்குகள் மதிப்பு கூடும் போது, நிப்டி அதிக வளர்ச்சி காணும். இதனால், அதன் மதிப்பும் மிகைப்படுத்தப்பட்டு தோன்றும்.சில குறிப்பிட்ட பங்குகளின் வளர்ச்சி சார்ந்தே அதன் எழுச்சி அமைந்து இருப்பது நிப்டிக்கே கட்டமைப்பு சார்ந்த பெரும் பலவீனம்.இதை மாற்ற தேசிய பங்குச் சந்தை தடுமாறி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
காரணம் அரசு சார்ந்த பெரு நிறுவனங்கள் கடந்த பல ஆண்டுகளாக லாப வளர்ச்சி காண தடுமாறி உள்ளன. பொதுத்துறை வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற நிறுவனங்கள் நஷ்ட சூழலில் சிக்கித் தவித்தன.மேலும் மின் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களும் லாபம் பெருக்க தடுமாறின.இந்த சூழலில், குறியீடுகள் வெகு சில நிறுவனங்களின் லாப வளர்ச்சியை மட்டுமே நம்பி இருந்தது. இந்த சூழல் அந்த சில நிறுவனங்களின் மதிப்பீடு பெருக பெரிதும் உதவியது. இதுவே, நிப்டிக்கு ஒருவித சங்கடமாகி விட்டது.
இதை சரி செய்ய, புதிய நிறுவனங்களை நிப்டியில் சேர்ப்பதே தீர்வு என்பது ஒரு தரப்பின் சிந்தனை. இதையடுத்து, போதிய லாபம் காணாத தனியார் நிறுவனங்கள் களையப்பட்டு, புதிய நிறுவனங்கள் நிப்டிக்குள் புகுத்தப்படுவது வழக்கமாகி விட்டது.ஆனாலும், மதிப்பீடு சார்ந்த பிரச்னைகள் குறையவில்லை. அனைத்து நிறுவனங்களும் தொடர்ந்து சீரான லாப பெருக்கு காட்டும் சூழல் தான் சந்தைக்கு அவசியம்.கடந்த, இரண்டு ஆண்டுகளாக நிப்டிக்குள் கொண்டு வரப்பட்ட நிறுவனங்களின் மதிப்பீடுகள் மிக அதிகமாக அமைந்ததே இந்த பிரச்னை மேலும் வளரக் காரணம் ஆகி விட்டது.
இவை தீர ஒரே வழி, பொதுத் துறை சார்ந்த பெருநிறுவனங்கள் மீண்டும் துரித லாப வளர்ச்சி பாதைக்கு திரும்புவது மட்டுமே. இது வரும் ஆண்டில் நடந்தேற வேண்டும்.அப்படி நடந்தால், நிப்டி சார்ந்த மதிப்பீட்டு சந்தேகங்கள் விலகி விடுவது உறுதி. ஆனால், அந்த நிகழ்வை ஊகிக்க சந்தை இன்னமும் தயாராக இல்லை என்பது கண்கூடு.
–ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|