பதிவு செய்த நாள்
29 ஏப்2019
23:18
புதுடில்லி: ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழும கணக்கு தணிக்கையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, அக்குழுமத்தின் கணக்குகளை தணிக்கை செய்த, ‘டெலாய்ட்’ நிறுவனத்திற்கு, மத்திய அரசு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமம், 90 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதற்கு, இக்குழுமத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் காரணம் என, தெரிய வந்துள்ளது. இதைஅடுத்து, இக்குழுமத்தின் உயரதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், புதிய இயக்குனர் குழு தலைமையில், குழுமத்தின் செயல்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழும கணக்கு தணிக்கையில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதையடுத்து, அக்கணக்குகளை தணிக்கை செய்த, டெலாய்ட் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு, நிறுவன சட்டம், 140, பிரிவு, 5ன் கீழ், தடை விதிப்பது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
ஒரு நிறுவனம் அல்லது அதன் இயக்குனர்களுடன் கூட்டு சேர்ந்து, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, முறைகேடுகளில் ஈடுபடும் தணிக்கை நிறுவனத்தை தடை செய்ய, இந்த சட்டம் வழி வகுக்கிறது.
இந்நிலையில், டெலாய்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது: ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழும செயல்பாடுகள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்கு, முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம்.நாங்கள் அக்குழுமத்தின் கணக்குகளை, அதற்கான சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு, தணிக்கை செய்துள்ளோம் என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.பல ஆண்டுகளாக, இக்குழுமத்தின் கணக்கு தணிக்கையை மேற்கொண்டு வருகிறோம். கடன்களுக்கு ஈடான பிணை பெறப்பட்டுள்ளது. இதை, ‘நைட் பிராங்க்’ போன்ற நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே, ‘சத்யம் கம்ப்யூட்டர்ஸ்’ முறைகேடு வழக்கில், அந்நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்த, ‘பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்’ நிறுவனத்திற்கு, இரண்டு ஆண்டுகள், கணக்கு தணிக்கை செய்ய தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|