பதிவு செய்த நாள்
29 ஏப்2019
23:22
மும்பை : ஒரு வங்கியில் கடன் பெற்ற நிறுவனம், அவ்வங்கிக்கு தெரியாமல் வேறொரு வங்கி கணக்கு மூலம், நிதி பரிவர்த்தனையில் ஈடுபடுவதை தடுக்க, நடப்பு கணக்கு தொடர்பான விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி கடுமையாக்க உள்ளது.
புதிய விதிமுறைகள் தொடர்பான வரைவறிக்கையை, ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ளது. பல நிறுவனங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நடப்பு கணக்கு துவக்குகின்றன. அவற்றில், வங்கியில் கடன் பெறுவதற்கு ஒரு கணக்கையும், விற்பனை உள்ளிட்ட வருவாய் இனங்களுக்கு பிற கணக்குகளையும் பயன்படுத்துகின்றன.பல நிறுவனங்கள், கடன் வாங்கிய வங்கிக்கு, வட்டி செலுத்தாமல், பிற வங்கி கணக்குகளில் வரவு, செலவுகளை கையாள்கின்றன.
குறிப்பாக, வங்கிகளின் இடர்ப்பாட்டு கடன் பிரிவில் உள்ள நிறுவனங்கள், இத்தகைய முறையை பின்பற்றுகின்றன.அதனால், இது போன்ற நிறுவனங்களின் அனைத்து வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளையும், கடன் கொடுத்த வங்கி அறியும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது.
கூட்டமைப்பு:
இது குறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள, வரைவறிக்கையில், கடன் வழங்கிய வங்கிகள் கூட்டமைப்பில் உள்ள, முதன்மை வங்கியிடம் தான், நிறுவனம் நடப்பு கணக்கு துவக்க வேண்டும்.அந்நிறுவனம், இதர வங்கிகளில் வைத்துள்ள கணக்குகளில் உள்ள பணம், தினமும் அலுவல் நேர முடிவில், முதன்மை வங்கிக்கு மாற்றப்பட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நடைமுறைக்கு வந்தால், ஒரு நிறுவனத்திற்கு, பிற வங்கிகள் வாயிலாக கிடைக்கும் வருவாய் விபரங்களை, கடன் வழங்கிய வங்கி அறியும் வாய்ப்பு கிடைக்கும்.அதன் மூலம், வட்டி செலுத்த தவறும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கவோ அல்லது வட்டியை கழித்துக் கொள்ளவோ முடியும். எனினும், இந்த நடைமுறை, 50 கோடி ரூபாய்க்கு மேல் வங்கியில் கடன் பெற்ற நிறுவனங்களுக்குத் தான் பொருந்தும் என்பதால், இது குறு, சிறு நிறுவனங்களை பாதிக்காது.
ஒரு நிறுவனம், வருவாய் இனங்களை பராமரிக்க, கடன் வழங்கிய வங்கிகள் கூட்டமைப்பைச் சாராத வங்கிகளில், பல கணக்குகளை துவக்கலாம்.ஆனால், அந்த வருவாயில் இருந்து செய்யும் செலவுகள், கடன் வழங்கிய வங்கிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த, முதன்மை வங்கி மூலமாகவே நடைபெறும்.அதனால், கடன் வழங்கிய வங்கிகள் கூட்டமைப்பின் முதன்மை வங்கியை தவிர்த்து, பிற வங்கிகளில் ஒரு நிறுவனம் வைத்துள்ள நடப்பு கணக்குகள் அனைத்தையும், வருவாய் கணக்காக மாற்ற வேண்டும் அல்லது அக்கணக்குகளை மூட வேண்டும்.
அந்த நிறுவனங்களுக்கு, புதிய விதிமுறைகள் தொடர்பான இறுதி அறிக்கை வெளியான மூன்று மாதங்களுக்குள், ‘நோட்டீஸ்’ அளித்து, கணக்குகளை மாற்ற வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
நிறுவனங்கள் கையாளும் வங்கி நடப்பு கணக்கில், ஒழுக்கத்தை கொண்டு வர, ரிசர்வ் வங்கி விரும்புகிறது. அதேசமயம், புதிய விதிமுறை அமலுக்கு வந்தால், கடன் வழங்கிய வங்கிகள் கூட்டமைப்பைச் சாராத பல சிறிய, நடுத்தர வங்கிகளின் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகள் குறையும் ஆபத்தும் உள்ளது.
-வங்கி துறை
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|