பதிவு செய்த நாள்
02 மே2019
23:40
புதுடில்லி:வங்கிகள், பல்வேறு சேவைகளுக்கு வசூலிக்கும் கட்டணம் அதிகமாக உள்ளதாக, வாடிக்கையாளர்கள், ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்து உள்ளனர்.
மும்பையில், பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்களிடம், ரிசர்வ் வங்கி மாதிரி ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டு உள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான வாடிக்கையாளர்கள், வங்கிகள் பல்வேறு சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக கவலை தெரிவித்து உள்ளனர்.
சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காதது, உள்ளுர், வெளியூர் வங்கி கிளைகளில், ‘டெபாசிட்’ செய்வது, கையெழுத்து சரிபார்ப்பு, காசோலை திரும்புவது போன்றவற்றுக்கு வசூலிக்கும் கட்டணம் அதிகம் என, 25 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.தங்கள் கணக்கில் இருந்து எதற்காக தொகை பிடித்தம் செய்யப்படுகிறது என்பதே தெரிவதில்லை; இது தொடர்பாக, வங்கிக் கிளைகளை அணுகினால் தான் விபரம் தெரிகிறது என, 72 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
வங்கிகள் வசூலிக்கும் சேவை கட்டணம் குறித்த விபரங்களில், போதிய அளவிற்கு வெளிப் படைத் தன்மை இல்லை.வங்கியில் கணக்கு துவக்கும் போது, எந்தெந்த சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது; எவ்வகை பரிவர்த்தனைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்ற விபரங்களை, வங்கிகள் தெரிவிப்பது இல்லை என, 30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். வங்கிகள், சில சேவைகளுக்கு கட்டணத்தை உயர்த்தினாலும், அது குறித்து தெரியப்படுத்துவது இல்லை என்ற புகாரும் உள்ளது.
வாடிக்கையாளர்களின் குறைகளுக்கு, வங்கிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும். வங்கி அலுவலர்கள், குறிப்பாக, கிளைகளில், வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பில் உள்ள அலுவலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வங்கிக் கணக்கில், மாதம் குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காத நகர்ப்புற வாடிக்கையாளர்களிடம், அதிகபட்சமாக, 50 ரூபாய் வசூலித்து வந்தது.இதற்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், அபராதம், 15 ரூபாயாக குறைக்கப்பட்டது. இது, புறநகர் மற்றும் கிராமப்புறங்களில், முறையே, 12 மற்றும் 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அபராதம் வசூல்
கடந்த, 2017 – 18ம் நிதியாண்டில், பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகள், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் 6,000 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளன. இதில், ஏ.டி.எம்., பயன்பாடு உள்ளிட்டவற்றுக்கான கட்டணம் சேர்க்கப்படவில்லை.
வங்கி செயல்பாடுகளில் காணப்படும் குறைகள் குறித்து, வங்கி குறை தீர்ப்பாயத்தில் வாடிக்கையாளர்கள் முறையிடலாம். இந்த வகையில், மதிப்பீட்டு நிதியாண்டில் குவிந்த புகார்களில், 22.1 சதவீதம், வங்கிகளிடம் வெளிப்படையான அணுகு முறை இல்லை என்பதாகும். விதிமுறைகளை பின்பற்றுவதில்லை; உறுதியளித்தபடி நடந்து கொள்வது இல்லை என, 31.3 சதவீத புகார்கள் வந்துள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|