பதிவு செய்த நாள்
07 மே2019
00:26
புதுடில்லி:விவசாயிகளை தொடர்ந்து, குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த, தனி நபர்களும், 60 ஆயிரம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி பெற உள்ளனர். இந்த திட்டம், லோக்சபா தேர்தலுக்கு பின், அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:திவால் சட்டத்தில், தனி நபர் மற்றும் கூட்டு நிறுவனங்களுக்கான சட்டப் பிரிவுகளை ஆராய்ந்து, அவற்றின் அடிப்படையில் திவால் நடவடிக்கை எடுப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் புதிய கடன் நிவாரண திட்டத்தை திவால் சட்டக் குழு உருவாக்கியுள்ளது.தேர்தல் முடிந்து, மத்தியில் அமையும் புதிய அரசிடம் இந்த பரிந்துரைகள் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில், கடனை திரும்பச் செலுத்த இயலாத தனி நபர், திவால் சட்டத்தின் கீழ், தன்னை திவால் ஆனவராக அறிவிக்குமாறு கோரலாம். இதன் மூலம் அவர், 60 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன் நிலுவைக்கு தள்ளுபடி பெறலாம்.கடனை செலுத்த முடியாத விவசாயிகள், கைவினைஞர்கள், வீடு வாங்கியோர் உள்ளிட்ட அனைவரும், தனி நபர் பிரிவின் கீழ் பயன் பெறுவர்.
வாராக் கடனுக்காக, 10 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை எடுக்கும் வங்கிகள், 1 லட்சம் கோடி ரூபாய் வரை, இழப்பை தாங்கிக் கொள்கின்றன.அவ்வாறு இருக்கையில், வறுமை காரணமாக, கடனை திரும்பச் செலுத்த முடியாதோருக்கும், கடனை தள்ளுபடி செய்து, புது வாழ்வு அளிக்க இத்திட்டம் உதவும்.இது, காங்கிரஸ் அறிவித்த, ‘நியாய்’ திட்டம் போன்றது தான். இது அமலுக்கு வந்தால், பல கோடி பேர் பயனடைவர்.இவ்வாறு அவர் கூறினார்.சீரமைப்புகடந்த, 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட, திவால் சட்டத்தின் கீழ், கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன், வசூலிக்கப்படுகிறது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டால் மட்டுமே, ஒரு நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கை எடுக்க முடியும்.
அதேசமயம், தனி நபர் அல்லது கூட்டு நிறுவனங்களின் வாராக் கடன் வசூல், கடன் மீட்பு தீர்ப்பாயங்களின் உத்தரவின்படி நடைபெறுகிறது.இதற்கு, தனி நபர் மற்றும் கூட்டு நிறுவனங்களுக்கான திவால் சட்டம், பிரிவு, 3ன் கீழ் உள்ள விதிமுறைகள் இன்னும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளதே காரணம்.எனவே, திவால் சட்ட அமலாக்கத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட, திவால் சட்டக் குழுவை, மத்திய அரசு சமீபத்தில் சீரமைத்தது.மத்திய நிறுவன விவகாரங்கள் துறை செயலர், இன்ஜெட்டி சீனிவாஸ் தலைமையில், 14 உறுப்பினர்கள் அடங்கிய புதிய குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவிடம், தனிநபர் மற்றும் கூட்டு நிறுவனங்களுக்கான திவால் சட்ட நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும் பணி வழங்கப்பட்டது.இக்குழு, குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த, தனி நபர்களுக்கு, தனி நபர் திவால் சட்டப் பிரிவின் கீழ், புதிய கடன் நிவாரணத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
வறுமை காரணமாக, கடனை திரும்பச் செலுத்த முடியாதோருக்கும், கடனை தள்ளுபடி செய்து, புது வாழ்வு அளிக்க இத்திட்டம் உதவும்.தனி நபர் கடன்இந்திய வங்கித் துறை, 80 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, பலதரப்பட்ட கடன்களை வழங்கியுள்ளது. அவற்றில், தனி நபர் கடன், 19 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், வேளாண், வாகனம், தனி நபர், ‘கிரெடிட் கார்டு’ உள்ளிட்ட கடன்களும் அடங்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|