பதிவு செய்த நாள்
08 மே2019
23:29
புதுடில்லி:கார்ப்பரேட் நிறுவன இயக்குனர் குழுவில் உள்ள தனி இயக்குனர்கள் ஒவ்வொருவரும், இனி, ‘இ – ரிஜிஸ்ட்ரேஷன்’ எனப்படும், மின்னணு பதிவை கட்டாயம் மேற்கொள்ளும் திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:நிறுவனங்களின் நிதி நெருக்கடி விவகாரம் அம்பலமானதும், சட்ட நடவடிக்கைக்கு அஞ்சி, அதன் உயர் அதிகாரிகள், இயக்குனர்கள், தனி இயக்குனர்கள் ஆகியோர் வெளியேறுகின்றனர்.இதற்கு, சமீபத்தில் ஐ.எல்., அண்டு எப்.எஸ்., ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களில் நிகழ்ந்தவற்றை உதாரணமாக கூறலாம்
.இனி, இது போன்ற நிலை ஏற்படுவதை தடுக்க, தனி இயக்குனர்கள் தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்க, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இதையொட்டி, நிறுவனங்களின் தனி இயக்குனர்கள், மின்னணு பதிவு செய்வதை கட்டாயமாக்கும் திட்டம், அமலுக்கு வர உள்ளது.
ஒரு நிறுவனத்தின் நிறுவனராக இருந்தாலும், அவர், வேறு நிறுவனத்தில் தனி இயக்குனராக இருந்தால், கட்டாயம் மின்னணு பதிவு செய்ய வேண்டும்.மத்திய நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் நிறுவனத்தின் அனைத்து இயக்குனர்களுக்கும், டி.ஐ.என்., எனப்படும், இயக்குனர் அடையாள எண் வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்கள், கே.ஒய்.சி., எனும், சுயவிபரக் குறிப்பையும் வழங்க வேண்டும்.
இந்த வழக்கமான நடைமுறையுடன், தனி இயக்குனர்கள், கூடுதலாக மின்னணு பதிவும் செய்ய வேண்டும்.இதன் மூலம், நிறுவனங்களில், தனி இயக்குனரின் பொறுப்பும், கடமையும் அதிகமாகும்.அவர்கள், நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கேள்வி கேட்பர் என்பதால், முறைகேடுகள் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நிபுணத்துவம்
நிறுவனங்கள் நியமிக்கும் தனி இயக்குனர்கள், கணக்குகளை ஆய்வு செய்வதில் போதிய நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். நிர்வாகவியல் குறித்த அடிப்படை விதிமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.எனினும், தகுதியற்ற பலர், தனி இயக்குனர்களாக நியமிக்கப் படுகின்றனர். அவர்கள், ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெறுவதில் காட்டும் அக்கறையை, நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆராய்வதில் காட்டுவதில்லை.
இத்தகைய பொறுப்பற்ற தன்மையை முடிவுக்கு கொண்டு வர, மின்னணு பதிவு முறை உதவும்.மேலும், நிறுவன பதிவாளர் துறை வலைதளத்தில் பதிவு செய்யப்படும் தனி இயக்குனர்கள் குறித்த தகவல்களை, பலரும் அறிய வாய்ப்பு கிடைக்கும்.இதன் மூலம், நிறுவனங்கள், அவற்றுக்கேற்ற தகுதியுள்ள நபர்களை சுலபமாக அடையாளம் கண்டு, தனி இயக்குனர்களாக நியமிக்க முடியும்.
அவர்கள், நிறுவனத்தின் முறைகேடுகளை துவக்க நிலையிலேயே சுட்டிக் காட்டி, சரி செய்ய முனைவர். இது, நிறுவன முறைகேட்டில், பொறுப்பை தட்டிக் கழிக்கும் தற்போதைய தனி இயக்குனர்களின் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சி திட்டம்
தனி இயக்குனர்கள், நிறுவனங்களின் அன்றாட செயல்பாடுகளில் தலையிடுவது இல்லை. எனினும், அவர்கள், ஒட்டு மொத்த நிர்வாக நடைமுறையில், நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் விரும்புகிறது.
இதற்காக, வலைதளம் மூலம், நிறுவனங்களின் செயல்பாடுகள், பிரச்னைக்கான தீர்வுகள் தொடர்பாக பயிற்சி அளிக்கும் திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதில், விருப்பமுள்ள தனி இயக்குனர்கள் பயிற்சி பெற்று, நிறுவன நிர்வாக நடவடிக்கைகளில், நிபுணத்துவத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|