பதிவு செய்த நாள்
09 மே2019
23:54
கோவை:அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளதால், நடப்பு நிதியாண்டில், இந்திய பின்னலாடை துறைக்கான ஏற்றுமதி, ‘ஆர்டர்’ அதிகம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் இறக்குமதி வரியை, அமெரிக்கா உயர்த்தியது. அத்துடன், சீனப் பொருட்களுக்கு அதிக வரி விதித்ததுடன், அந்நாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இதற்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை சீனா உயர்த்தியது.
அதிரடி
இது தொடர்பாக, ஓராண்டாக, அமெரிக்கா – சீனா இடையே, பேச்சு நடைபெற்று வந்தது. இந்நிலையில், ‘சீனா உறுதி அளித்தபடி நடந்து கொள்ளவில்லை என்பதால், அந்நாட்டு பொருட்களின் இறக்குமதிக்கு, 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிற்கு, வரி உயர்த்தப்படும்’ என, அமெரிக்க அதிபர் டிரம்ப் சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.
இதனால், அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளது.இது, பின்னலாடை துறைக்கு சிறந்த வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.இது குறித்து, இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சி அமைப்பின் தலைவரும், ஏற்றுமதியாளருமான, சக்திவேல் கூறியதாவது:பின்னலாடை தயாரிப்புக்கு புகழ் பெற்று விளங்கும் திருப்பூர், கடந்த ஏப்ரலில், 4,400 கோடி ரூபாய்க்கும் அதிகமான பின்னலாடைகளை ஏற்றுமதி செய்துள்ளது.
கடந்த, 2018- – 19ம் நிதியாண்டில், 26 ஆயிரத்து, 300 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள், ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.இது, நடப்பு, 2019 -– 20ம் நிதியாண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, சீனப் பொருட்களுக்கு அதிக வரி விதித்திருப்பது, இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது.அமெரிக்கா உட்பட பல நாடுகள், இந்திய ஜவுளி வகைகளை, அதிக அளவில் இறக்குமதி செய்ய, ஆர்வம் காட்டி வருகின்றன.இதனால், பின்னலாடை துறையின் ஏற்றுமதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
உயரும்
இந்தியா, ஜவுளித் துறையின் மூலப் பொருட்களான, பருத்தி, பாலியஸ்டர் உள்ளிட்ட செயற்கை நுாலிழை உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. இது, இந்திய ஜவுளி துறை, சர்வதேச போட்டியை சமாளித்து வர்த்தகம் புரிய துணை புரிகிறது.ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன், தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என, நீண்ட காலமாக, ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கோரி வருகின்றனர்.
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், ஐரோப்பிய நாடுகளுக்கான ஜவுளி ஏற்றுமதி, அடுத்த மூன்று ஆண்டுகளில், இரு மடங்கு உயரும். அதுபோல, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனும், ஒப்பந்தம் மேற்கொள்ளும் பட்சத்தில், ஜவுளித் துறையின் ஏற்றுமதி, சிறப்பான முறையில் வளர்ச்சி காணும்.இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூரில் சர்வதேச கண்காட்சி
திருப்பூரில், 46வது சர்வதேச பின்னலாடை கண்காட்சி, வரும், 15ம் தேதி துவங்குகிறது. இதில், சர்வதேச அளவில், 90 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பருத்தி ஆடைகள், ஆயத்த ஆடைகள், பின்னலாடைகள் உள்ளிட்ட பல்வேறு ஜவுளிகள், இக்கண்காட்சியில் இடம் பெறும்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|