பதிவு செய்த நாள்
13 மே2019
00:01
நிறுவன பங்கு வெளியீடுகள், சந்தையில் பெரும் வரவேற்பை பெறுவது என்பது உலகளாவிய போக்கு. புதியன தேடலும், அதில் இருக்கும் வாய்ப்பை அடையவும் முதலீட்டாளர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
உலகளவில், புதிய பங்கு வெளியீடுகள் அதிகம் வரவேற்கப்படுவது, முதலீட்டாளர்களின் ஆர்வத்தின் வெளிப்பாட்டினால் மட்டும் அல்ல; பங்கேற்பு ஆர்வம் கடந்து, இந்த போக்கில் பேராசையும் அடக்கம்.சந்தைக்கு வரப்போகும் புதிய பங்கை தான் முதலில் வாங்கி விட வேண்டும் என்பதே, இந்த பேராசையின் மைய காரணம்.இத்தகைய பேராசையின் உந்துதல் தான், முதலீட்டாளர்களை புதிய பங்கு விற்பனையில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்கச் செய்கிறது.
சந்தை உச்சத்திற்கு அருகில் இருக்கும் போது, இந்த ஆர்வம் மிக அதிகமாக தென்படுவது வழக்கம்.இந்த சமயங்களில், புதிய பங்கு வெளியீடுகள் திருவிழா போல வரவேற்பும், பங்கேற்பும் பெறுவது வழக்கம்.இத்தகைய சூழலை, இந்திய சந்தையில் கடந்த ஆண்டில் நாம் பார்த்தோம். இப்போது, இதே சூழல் உலக சந்தையில் தென்படுகிறது.நடப்பாண்டில், இந்த புதிய பங்கு வெளியீடுகளுக்கான வரவேற்பு, பல நாடுகளில் தென்படலாம் என்ற பரவலான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சவுதி அரேபியாவில் கூட, புதிய பங்கு விற்பனை சார்ந்த ஆர்வம் உச்சத்தில் இருக்கிறது என்றால், இது, ஒரு உலகளாவிய போக்கு என்பது உறுதியாகிறது.சவுதி நாட்டை பொறுத்த வரை, சொத்துகளை பெருக்கி, அந்த பண வளத்தை, நாட்டின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் முதலீடு செய்யும் நோக்கம் அரசுக்கு இருக்கிறது. ஆகவே, சவுதி அரசு இதற்கு ஆதரவாக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
அமெரிக்கா புதிய பங்கு வெளியீடுகளில் பங்கேற்பது என்பது, அந்த நோக்கம் சார்ந்த முக்கிய நகர்வே. சவுதியைச் சேர்ந்த, கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான, அராம்கோவின் புதிய பங்குகளை, உலக முதலீட்டாளர் பங்கேற்பிற்கு வழிவகுப்பது இன்னொரு நகர்வு.இந்த பதிவில், சவுதி அரசு நிதி செய்த ஒரு முக்கிய முதலீட்டை பற்றி ஆராய்வோம். ஊபர் நிறுவனம் நம் அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று. இதன் நிறுவனர்களுக்கு அதிக முதலீடு தந்து, நிறுவனத்தை உலகம் முழுவதும் பரவச் செய்தது
ஜப்பானிய முதலீட்டு நிறுவனமான, சாப்ட் பேங்க் மற்றும் சர்வதேச தனியார் முதலீட்டு குழுமங்கள்.இவர்கள் பன்மடங்கு லாபம் ஈட்டிய சூழலில், தங்கள் பங்குகளை விற்று லாபத்தை அனுபவிக்க விரும்பினர். அதன் வெளிப்பாடு தான், வெள்ளியன்று நடந்த ஊபர் நிறுவனத்தின் புதிய பங்கு விற்பனை.ஐ.பி.ஓ., என்று அழைக்கப்படும் இந்த புதிய பங்கு விற்பனை நடக்கும் முன்னரே, ஐ.பி.ஓ., விலையை விட அதிக விலை கொடுத்து, சவுதி அரசு, இந்தப் பங்குகளை வாங்கி உள்ளது.
இருப்பினும், ஊபர் பங்கு விற்பனையில் முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் இருந்தபோதும், அது சந்தைக்கு வந்த நேரம், சரிந்து விட்டது. இது சந்தைக்கும், சவுதி முதலீட்டிற்கும் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. அடுத்து என்ன நடக்குமென்ற அச்சம், அமெரிக்க சந்தையில் இருக்கிறது.சவுதி முதலீடுகளில் வரப்போகும் மிக முக்கிய பங்கு விற்பனை, சவுதி அராம்கோ நிறுவனத்தின் புதிய பங்கு விற்பனை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
உலக பங்குகளில், அரசு பணம் புழங்குவது தொடர, அந்தந்த அரசுகளுக்கும், அவர்களின் நிதி குவியலுக்கும் எந்த பங்கமும் ஏற்படக் கூடாது. அந்த வகையில், ஊபர் பங்கு வெளியீடு நஷ்டம் ஏற்படுத்தியது ஒரு பெரும் பின்னடைவு. இனி தொடர்ந்து அராம்கோ, ஐ.பி.ஓ.,வில் என்ன நடக்கிறது என்று, உலக சந்தை கூர்ந்து கவனிக்கும்.
ஷ்யாம் சேகர்,
முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|