பதிவு செய்த நாள்
15 மே2019
00:01
புதுடில்லி:‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி வினய் துபேவும், தலைமை நிதி அதிகாரியும், துணை தலைமை செயல் அதிகாரியுமான, அமித் அகர்வாலும் தங்களது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளனர்.
முதலில் அமித் அகர்வால் ராஜினாமா செய்து விட்டதாக, நிறுவனம் சார்பில் தெரிவிக்கப் பட்டது. அடுத்த சில மணி நேரங்களில், தலைமை செயல் அதிகாரி வினய் துபேவும் ராஜினாமா செய்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
கடுமையான கடன் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, ஏப்., 17ம் தேதி முதல், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன. இந்த நிறுவனத்தை, வேறு நிறுவனங்கள் ஏற்று நடத்தும் முயற்சியும் இது வரை கைகூடவில்லை.இதற்கிடையே, ஊழியர்கள் தங்களது ஊதியப் பாக்கிக்காக குரல் கொடுத்து வருகின்றனர். இன்னொரு பக்கம் உயரதிகாரிகளும், நிர்வாகக் குழு உறுப்பினர்களும் ஒருவர் பின் ஒருவராக வெளியேற துவங்கி இருக்கின்றனர்.
கடந்த ஏப்ரலில், இந்நிறுவனத்தின் செயல் சாரா இயக்குனர்களில் ஒருவரான, நஸிம் ஜைதி, தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்து, வெளியேறினார்.அடுத்து, நிறுவனரான நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் பதவி விலகினர். இவர்களை தொடர்ந்து, ராஜ்ஸ்ரீ பதி நிர்வாகக் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார்.
கடந்த வாரம், நரேஷ் கோயலுக்கு நெருக்கமான வராக சொல்லப்படும், கவுரங் ஷெட்டி, செயல் சாரா இயக்குனர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.இந்நிலையில், தற்போது வினய் துபேவும், அமித் அகர்வாலும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்திருப்பதாக, நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தலைமை மனித வள அதிகாரியான, ராகுல் தனேஜாவும் ராஜினாமா செய்து விட்டதாக வரும் செய்திகள், அதிர்ச்சி அலைகளை எழுப்பி உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|