பதிவு செய்த நாள்
18 மே2019
05:28
புதுடில்லி: நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள நிறுவனங்களை மூட, மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரமளிக்கும், புதிய சட்டம் அறிமுகமாக உள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேசப் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையில் செயல்படும் நிறுவனங்களை மூட, மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம் இயற்றப்பட உள்ளது. இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. அடுத்த சில மாதங்களில், புதிய சட்ட விதிமுறைகள் உருவாக்கப்படும்.
கடந்த, 1956ம் ஆண்டு, நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை, மூன்று வழிகளில் முடிவிற்கு கொண்டு வரலாம். முதலாவதாக, ஒரு நிறுவனம் பல்வேறு காரணங்களால், தன்னிச்சையாக மூட முடிவெடுக்கலாம் அல்லது நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்படலாம். நீதிமன்ற மேற்பார்வையிலும், ஒரு நிறுவனத்தை மூட, சட்டம் வழி வகை செய்கிறது.
கடந்த, 2013ல், இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில், பங்குச் சந்தை பட்டியலில் உள்ள மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்களின் நிர்வாகத்தில் ஒழுங்கு முறை, இயக்குனர்களின் அதிகாரம் உள்ளிட்ட அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அத்துடன், தனி நபர் நிறுவனம் தொடர்பான விதிகளும், பங்கு முதலீட்டாளர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் ஷரத்துகளும், அதில் இடம் பெற்றன. இந்த சட்டம், 2013, செப்., 13ல், அமலுக்கு வந்தது. எனினும், புதிய தொழில்களை பதிவு செய்வது அல்லது மூடுவதில், நிறுவனங்கள் சிரமங்களை சந்தித்தன.
இந்நிலையில், 2014ல், மத்தியில் அமைந்த, பா.ஜ., அரசு, நிறுவனங்களை சுலபமாக துவக்கவும், செயல்படாத நிறுவனங்களின் பதிவை நீக்கவும், கடனை திரும்பச் செலுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், திவால் சட்டத்தை உருவாக்கியது.இந்த சட்டம், 2016, மே, 28ல் அமலுக்கு வந்தது. ஆண்டு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யாத நிறுவனத்தின் பதிவை நீக்க, இந்த சட்டம் வழி வகை செய்கிறது.ஒரு நிறுவனம், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள், நிதி நிலை அறிக்கையை, மத்திய நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் அளிக்கத் தவறினால், அதன் பதிவு நீக்கப்படும். மேலும், ஒரு நிறுவனத்தின் வாராக் கடன் தொடர்பாக, 270 நாட்களில் நடவடிக்கை எடுத்து, தீர்வு காணவும், திவால் சட்டம் உதவுகிறது.
இந்த வகையில், 60 ஆண்டு கால நிறுவனங்கள் சட்டத்தில், தற்போது, மேலும் சில சட்டப் பிரிவுகளை இணைக்க, மத்திய நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தேசப் பாதுகாப்பு, இறையாண்மை, நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களை இழுத்து மூடுவதற்கு, மத்திய, மாநில அரசுகளுக்கு, புதிய சட்டம் அதிகாரமளிக்கும். மேலும், ஒரு நிறுவனம், பிற நாடுகளுடன் வைத்துள்ள தொடர்பு, நம் நாட்டை பாதிக்கும் வகையில் இருக்கும்பட்சத்தில், அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய சட்டத்தில் வழி வகை செய்யப்படும்.
ஏற்கனவே உள்ள நிறுவன சட்டங்களுடன், புதிய சட்டமும் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகள் முடிவுக்கு வரும். அடுத்த சில மாதங்களில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு, அவர் கூறினார்.தேசப் பாதுகாப்பு, இறையாண்மை, நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களை இழுத்து மூடுவதற்கு, மத்திய, மாநில அரசுகளுக்கு, புதிய சட்டம் அதிகாரமளிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|