பதிவு செய்த நாள்
29 மே2019
04:08
புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்க உள்ள புதிய அரசு, நடப்பு, 2019 -– 20ம் முழு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, ஜூலை, 10ல், தாக்கல் செய்யும் எனத் தெரிகிறது.
இந்தாண்டு பிப்ரவரியில், மத்திய நிதியமைச்சராக பொறுப்பு வகித்த, பியுஷ் கோயல், நடப்பு நிதியாண்டிற்கான, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது, பார்லிமென்ட் ஒப்புதலுடன், புதிய அரசு அமையும் வரை, தேவையான நிதிச் செலவினங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. இதை அடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு, நாளை பதவியேற்க உள்ளது. கடந்த ஆட்சியில் நிதி, விமான போக்குவரத்து துறைகளில், துணை அமைச்சராக பணியாற்றிய, ஜெயந்த் சின்ஹாவுக்கு, புதிய அரசில், நிதியமைச்சர் பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது.
இது குறித்து, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாளை பதவியேற்க உள்ளது. அதில் நிதியமைச்சர் பொறுப்பேற்ற பின், பட்ஜெட் தாக்கல் செய்யும் நாள் முடிவு செய்யப்படும். பட்ஜெட் பணிகள் அனைத்தும், ஜூலை, 15க்குள் முடிக்கப்படுவது வழக்கம்; இம்முறையும், அது பின்பற்றப்படும். பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான, ஆலோசனை கூட்டங்கள் துவங்கி விட்டன. நிதியமைச்சக அதிகாரிகள், பல்வேறு துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். அதனால், பட்ஜெட் தேதி விரைவில் இறுதி செய்யப்படும். ஜூலை, 10ல், மத்திய பட்ஜெட் தாக்கல் ஆக வாய்ப்பு உள்ளது.
விவசாயி:
இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகள் மற்றும் ஏழைகள் நலன் உட்பட, ஆறு முக்கிய சமூக முன்னேற்றத் திட்டங்களுக்கு, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. அத்துடன், கிராமப்புற முன்னேற்றத்திற்கான மூன்று திட்டங்களுக்கும், அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இரண்டு ஹெக்டேர் நிலம் வைத்துள்ள சிறிய விவசாயிகளுக்கு, ஓராண்டில், மூன்று தவணைகளில், 6,000 ரூபாய் வழங்கும், ‘பிரதமர் விவசாயி பாதுகாப்பு நிதியுதவி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக, 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
புதிய அரசின் பட்ஜெட்டிலும், விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கிராமப்புறங்களில் நுகர்வு குறைந்துள்ளதை சமாளிக்கும் அம்சங்கள், புதிய பட்ஜெட்டில் இடம் பெறும் எனத் தெரிகிறது. இடைக்கால பட்ஜெட்டில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, மாதம், 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும், ‘பிரதமர் தொழிலாளர் ஓய்வூதிய’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட, அமைப்பு சாரா தொழிலாளர்கள், மாதம், குறைந்தபட்சம், 100 ரூபாய் செலுத்தி வந்தால், 60 வயதிற்குப் பின், மாதம், 3,000 ரூபாய் ஓய்வூதியம் பெறலாம்.
வருமான வரி:
நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், வருமான வரி வரம்பு, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என, இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நிறுவன ஊழியர்களின், நிலையான வரிக் கழிவிற்கான வரம்பு, 40 ஆயிரத்தில் இருந்து, 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்த இரு அம்சங்களும், முழு நிதியாண்டு பட்ஜெட்டில் இடம் பெறும். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், விவசாயிகள் முன்னேற்றத்திற்கும் அவசியமான, நதி நீர் இணைப்பு திட்ட அறிவிப்பும் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது போல, நாட்டு மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில், புதிய திட்டம் குறித்த அறிவிப்பையும், நிதியமைச்சர் வெளியிட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|