பதிவு செய்த நாள்
03 ஜூன்2019
00:19
இந்திய பங்குச் சந்தைகள், கடந்த மூன்று மாதங்களாக உச்சத்தில் வர்த்தகமாகி வருகின்றன. மார்ச் மாதம், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், ‘நிப்டி’ 800 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகமானது.
ஆரம்பத்தில், லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு சாதகமான முடிவுகள் வரும் என்ற எதிர்பார்ப்பில், பங்குச் சந்தைகள் உயர ஆரம்பித்தன. அதன் பின், தேர்தல்கள் நடைபெற்ற ஏப்ரல் மாதத்தில், பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இல்லாமல், 400 புள்ளிகள் ஏற்ற இறக்கங்களுடன், அப்போதைய வர்த்தகம் முடிவு பெற்றது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்ததை போலவே அமைந்ததும், அதன் காரணமாக, நிப்டி, 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, வரலாற்று உச்சத்தை அதாவது, 12 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.இதைப் போலவே, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ 40 ஆயிரம் புள்ளிகளை தாண்டி, வரலாற்று உயர்வு அடைந்தது.சர்வதேச சந்தையில், கடந்த மாதம் கச்சா எண்ணெய் விலை, கடுமையாக சரிந்தது. இது, இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமாக அமைந்தது.
இதனால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும்; பெட்ரோலிய பொருட்களின் மீதான பணவீக்கம் குறையும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. இது, சந்தையில் பங்குகள் விலை உயர, ஒரு வகையில் காரணமாக அமைந்தது. மேலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பும், இந்த உயர்வுக்கு சாதகமாக அமைந்தது.
கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டான, ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின், ஜி.டி.பி., வளர்ச்சி, 5.8 சதவீதமாக இருந்ததாக, மத்திய அரசின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இது, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத குறைவாகும்.மேலும், நடப்பு நிதியாண்டில், ஜி.டி.பி., வளர்ச்சி, 7.1 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில், 7.2 சதவீதமாகவும் இருக்கும் என்று, கருத்துக் கணிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
பணவீக்க விகிதம் மற்றும் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பு ஆகியவற்றை, ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. முந்தைய நிதியாண்டின் நான்காம் காலாண்டில், பணவீக்க விகிதம், 2.4 சதவீதமாகவும், நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு, பணவீக்க விகிதம், 3.2 சதவீதமாகவும் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு முன் இது, 3.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்தியில், புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, இம்மாத மத்தியில், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட உள்ளது. அடுத்த மாதம், 5ம் தேதி, நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படலாம் எனத் தெரிகிறது.இம்மாதம், தென் மேற்கு பருவ மழை ஆரம்பிக்க உள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு பருவ மழை சற்று குறைவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இது போன்ற காரணங்களை முன்னிறுத்தியே, இந்த வார பங்குச் சந்தைகளின் போக்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வாரம் நிப்டியை பொறுத்தவரை, அதன் சப்போர்ட், 11860 மற்றும் 11800; ரெசிஸ்டென்ஸ், 12010 மற்றும் 12135.
முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|