பதிவு செய்த நாள்
03 ஜூன்2019
00:42
மத்தியில் அரசு அமைந்து, அமைச்சரவை பதவி ஏற்று, இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு, அனைவரும் சுமுகமாக தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டு விட்டனர்.
பொதுவாக, புதிய அரசு பதவி ஏற்கும் போது, அதற்கு ஒரு தேனிலவு அவகாசம் கொடுப்பது பத்திரிகை உலகின் மரபு. ஆனால், தே.ஜ., கூட்டணி அரசுக்கு அந்த சலுகை இல்லை என்றே தோன்றுகிறது.இலாகா ஒதுக்கிய அறிவிப்பு வெளிவந்த அன்றே, கடந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி சார்ந்த தகவல்கள் வெளிவந்தன.
பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது.முதலீட்டு சூழலை மேம்படுத்துவதற்கு, முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. தொழில்களை வளர்க்கவும், புதிய தொழில்கள் துவங்க வழிவகுக்கவும், சூழல் சார்ந்த எல்லா மாற்றங்களையும் அரசு தொடர்ந்து விரைவுபடுத்த வேண்டும்.
வரும் ஆண்டில், அரசு எதிர்கொள்ளப் போகும் பொருளாதார சவால்கள், கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. இச்சூழலில், அடுத்து செய்ய வேண்டிய பொருளாதார நடவடிக்கைகள் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும்.ஒருவேளை பருவ மழை பொய்க்கும் பட்சத்தில், அதற்கும் சேர்த்து அரசு தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
விவசாய வளர்ச்சி குறைந்தால், அதன் தொடர் தாக்கம் நுகர்வு, வங்கி கடன் இயக்கம், வாகன விற்பனை, கட்டுமான வளர்ச்சி ஆகியவற்றில், பல வகையில் பொருளாதாரத்தை பாதிக்கும். ஆகவே, இருக்கும் சவால்களையும் வரப்போகும் சவால்களையும் ஒருங்கே எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது.
இந்த சூழலில் என்ன எதிர்பார்க்கலாம்? அரசு எத்தகைய எதிர்வினைகளை கையெடுக்கும்? வளர்ச்சி மீண்டும் வேகம் பிடிக்க உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
வரும் வாரங்களில் நாம் அரசிடம் இருந்து தெளிவான கொள்கை அறிவிப்புகளை எதிர் பார்க்கலாம். வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும். சிறு மற்றும் குறுந் தொழில்களுக்கு ஊக்க சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.வரும், ஜூலை 5ல் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட், இந்திய தொழில் துறை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்ப தேவையான கொள்கை ஊக்கத்தை கொடுக்க வேண்டும்.
அன்னிய முதலீடு அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். தொழில், ஊழியர் கொள்கைகள் சீரமைக்க வேண்டிய அவசரத்தை உணர்ந்து, அரசு உரிய மாற்றங்களை உடனடியாக கொண்டு வர வேண்டும். இந்திய பொருளாதாரத்தின் வருங்கால வளர்ச்சியில் பங்கேற்க, உலக முதலீட்டாளர்கள் முனைப்பாக இருக்கின்றனர்.
அவர்களின் ஆர்வத்தை முதலீடுகளாக மாற்ற வேண்டிய தேவை அரசுக்கு இருக்கிறது. பட்ஜெட், தெளிவான முன்னகர்வுகளை எடுக்கும் வகையில் இருக்க வேண்டும். அரசுகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை எளிதில் பெறுவதில்லை. முந்தைய அரசுகள் பெரிதும் தடுமாறியதை, நாம் பலமுறை பார்த்து இருக்கிறோம்.
மாறாக, இந்த அரசு அப்படிப்பட்ட சிக்கல்களை அதிகம் சந்திக்கவில்லை.இருந்தும், முதலீட்டாளர்களை கவரும் வண்ணம், அரசு பன்முக நடவடிக்கை எடுத்து, புதிய கொள்கை களை அமல்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.வரும் வாரங்கள் இந்திய பொருளா தாரத்திற்கு மிக முக்கியமான காலகட்டம். புதிய அரசும், அதிகார வர்க்கமும் உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து, உலக முதலீட்டாளர்களும், உள்நாட்டு தொழில் அதிபர்களும், புதிய உற்சாகத்தோடு பெருமுதலீடுகள் செய்ய வழிவகுக்க வேண்டும்.
ஷியாம் சேகர் முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|