பதிவு செய்த நாள்
03 ஜூன்2019
01:12
ஒரு சவாலான காலகட்டத்தில், இந்தியாவின் நிதி அமைச்சராக, நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றுள்ளார். இந்தியாவின், முதல் முழுநேரப் பெண் நிதி அமைச்சர், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என, பல சிறப்புகள் இவருக்கு உண்டு. நிதித் துறையில் இவர் செய்ய வேண்டியவை என்னென்ன?
அவர் பதவியேற்ற நாளில் தான், இரண்டு முக்கியமான புள்ளிவிபரங்கள் வெளிவந்துள்ளன. சென்ற நிதியாண்டின், ’மொத்த உள்நாட்டு உற்பத்தி’ என்று சொல்லப்படும், ஜி.டி.பி., மதிப்பீடுகள் வெளியாகின.
கடந்த ஆண்டு, 6.8 சதவீத அளவுக்கு நாம் வளர்ந்திருக்க, கடைசி காலாண்டில் நம் வளர்ச்சி, 5.8 சதவீதம் தான்.முதலில், 7.2 சதவீதம் வளருவோம் என, எதிர்பார்த்த நிலையில், வளர்ச்சி, 0.4 புள்ளிகள் சரிவு அடைந்திருப்பது, நம் நாட்டில், மெல்ல மெல்ல பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு வருவதையே சுட்டிக் காட்டுகிறது.
இரண்டாவது, வேலைவாய்ப்பின்மை தொடர்பான மதிப்பீடு. 2017 -– -18ல் நம் நாட்டில் வேலை வாய்ப்பின்மை, 6.1 சதவீதமாக இருப்பதாக, மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. இது கடந்த, 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை பற்றாக்குறை.நம் பொருளாதாரம் அடைந்துள்ள பின்னடைவுகளுக்கான சமிக்ஞைகளே இந்தப் புள்ளிவிபரங்கள்.
இவற்றைக் களைந்து, இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கான சுக்கான் தற்போது நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது.அவர் இதைச் செய்யவேண்டும், அதை செய்யவேண்டும் என்று, ஏராளமான இலவச ஆலோசனைகள். இவற்றில் எண்ணற்ற அபாயங்கள் உள்ளன.உதாரணமாக, நஷ்டமடைந்துள்ள அத்தனை பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்றுவிட வேண்டும் என்பது, ஒரு கருத்
தனியார் மயம் ஒன்றே, பொருளாதாரப் பிரச்னைக்குத் தீர்வு என்ற கருத்தின் விளைவு இது. ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலங்களை, பொது ஏலத்துக்குக் கொண்டு வந்து விற்றால், பெருமளவு லாபம் ஈட்டலாம் என்பது இன்னொரு, ‘புத்திசாலித்தனமான’ யோசனை. தொழிலாளர் சட்டங்களை எளிமையாக்க வேண்டும்; நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மீண்டும் அறிமுகம் செய்து, அதை நிறைவேற்ற வேண்டும் என்பதெல்லாம் இத்தகைய, ‘திறந்த பொருளாதார புத்திஜீவி’களின் பொன்னெழுத்து கருத்துகள்.எல்லாவற்றையும் தனியாருக்குத் தாரை வார்த்துவிடுவது தான் ஒரே தீர்வு என்றால், அதை இந்திரா காந்தி காலத்திலேயே செய்திருப்பர். அது முழுமையான தீர்வு அல்ல என்பது தான் யதார்த்தம்.
இன்றைக்கு நாம் சந்திக்கும் பொருளாதாரத் தேக்கத்தை உடைத்தெறிய, மூன்று முனைகளில் செயல்பட வேண்டும்.முதலில், அரசு முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும். தன்னிடம் உள்ள, உபரித் தொகையை ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு வழங்கப் போவது உறுதி. இதன் மூலம், ஏற்றுமதி சார்ந்த உற்பத்தித் துறைக்கு கூடுதல் நிதியளிக்க முடியும்.
ஏற்கனவே அமெரிக்கா– சீனா இடையேயுள்ள வர்த்தகப் போரை நாம் சாதகமாகப் பயன் படுத்தி, வெளிநாட்டு ஏற்றுமதிக்கான திட்டங்களை வலிமைப்படுத்த வேண்டும். மற்றொரு புறம், இறக்குமதிகளைக் குறைத்து, நுகர்வோருக்குத் தேவையான பொருட்களை உள்நாட்டிலேயே தயாரித்து விற்பனை செய்வதற்கான, சுதேசி சந்தையை விரிவாக்க வேண்டும்.
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப உதவி, சந்தை வசதி, வங்கிக் கடன் வசதி என்று அத்தனையையும் மேம்படுத்த வேண்டும்.அடுத்து, உள்நாட்டு நுகர்வை அதிகப்படுத்த, மக்கள் கையில் பணத்தை வழங்க வேண்டும். அதற்குத்தான் தற்போது, 6,000 ரூபாய் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என்ற முடிவை, மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.இது நிச்சயம் ஊரகப் பகுதிகளில், நிதிச் சுழற்சியை அதிகப் படுத்தும். அதன்மூலம், பொருளாதாரம் வலுவடையும்.
கடந்த, 2008 பெருமந்தத்தின் போது, அமெரிக்காவில் இதுபோல், 600 டாலர்களை இரண்டு முறை, அந்நாட்டு அரசு, மக்களுக்கு வழங்கியது. அதன் பலன் தான், ௧௦ ஆண்டுகளில் தற்போது அமெரிக்கா வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக்கொண்டு இருக்கிறது.மூன்றாவது, அன்னிய முதலீடுகளை ஈர்ப்பது. அதற்காக வருகிற முதலீட்டாளர்களுக்கு கைகட்டி, வாய் பொத்தி, சேவகம் செய்யவேண்டும் என்று அவசியமில்லை.
நம் நாட்டில் என்ன நில உச்சவரம்பு சட்டம் இருக்கிறதோ, தொழிலாளர் சட்டங்கள் இருக்கின்றனவோ, வசதி வாய்ப்புகள் இருக்கின்றனவோ, அதைக் கொண்டு உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் ஈடுபட, அன்னிய முதலீட்டாளர்களை அனுமதிக்க வேண்டும்.மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இங்கேயுள்ள வளமும், வளர்ச்சியும் நிச்சயம் அன்னிய முதலீட்டாளர்களுக்குத் தெரியும்.
இங்கே கிடைக்கும், 7 சதவீத ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதுகூட, வேறு எந்த நாட்டிலும் கிடைக்காது. முடிந்தவரை பிழிந்து எடுத்துவிட வேண்டும் என்ற அவர்களது பேராசைக்கும், சுரண்டல் மனப்பான்மைக்கும் இடம்கொடாமல், நியாயமான முதலீடுகளை அனுமதிக்க வேண்டும்.நிர்மலாவைப் பார்த்தாலேயே எல்லாருக்கும் ஒருவித மரியாதை கலந்த அச்சம் உண்டு. அவரது ஆளுமைப்பண்பு அப்படிப் பட்டது.
ஒரு பக்கம் தாய்மையின் கருணை, மறுபக்கம், தலைமையாசிரியைக்கான கண்டிப்பு. நிதித் துறைக்கு இப்படிப்பட்டவர் தான் தேவை என, பிரதமர் மோடி கருதியதாலேயே அவரைத் தேர்வு செய்திருக்கிறார். கருணையும் கண்டிப்பும் நம்மை வாழ வைக்க வேண்டும்.வெல்கம், நிர்மலா!
– ஆர்.வெங்கடேஷ்
பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|