பதிவு செய்த நாள்
06 ஜூன்2019
23:59
மும்பை:வாராக் கடன் தொடர்பாக திருத்தப்பட்ட, புதிய அறிக்கை, இன்னும் மூன்று, நான்கு நாட்களில் வெளியிடப்படும் என, ரிசர்வ் வங்கியின் கவர்னர், சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
கடந்த, 2018, பிப்ரவரி, 12ல், அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல், வாராக் கடன் தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டார்.அதில், வசதி இருந்தும் கடனை திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள் மீது, வங்கிகள் கடும் நடவடிக்கை எடுக்க, வழி வகை செய்யப்பட்டிருந்தது. அதில், ஒரு நிறுவனம், கடன் தவணையை செலுத்த, ஒரு நாள் தவறினாலும், வங்கிகள், அக்கடனை, இடர்ப்பாட்டு கடன் பிரிவில் சேர்த்து, 180 நாட்களுக்குள், மறுசீரமைக்க வேண்டும்.தவறினால், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மூலம், திவால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், வங்கிகள், காலதாமதமின்றி வாராக் கடனை கண்டறிந்து வசூலிக்க முடியும். திவால் நடவடிக்கைக்கு அஞ்சி, நிறுவனங்களும் கடனை திரும்பச் செலுத்தும் என, ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தது.ஆனால், ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு, வங்கிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. திவால் நடவடிக்கையில், பல தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாகக் கூறி, மத்திய அரசும், விதிமுறையை தளர்த்தக் கோரியது. அதை ஏற்க, ரிசர்வ் வங்கி மறுத்து விட்டது.
இதையடுத்து, பல நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியின் உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் இறுதியில், ‘ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவு, அரசியல் சாசன சட்டத்தில், தொழில் புரிவோருக்கு வழங்கியுள்ள உரிமையை மீறுவதாக உள்ளதால், அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என, தெரிவித்தது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி வாராக் கடன் குறித்த அறிக்கையை திரும்பப் பெற்றது.
இந்நிலையில், புதிய அறிக்கை, இன்னும் மூன்று, நான்கு நாட்களில் வெளியிடப்படும் என, ரிசர்வ் வங்கியின் கவர்னர், சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|