பதிவு செய்த நாள்
07 ஜூன்2019
00:10
மும்பை:வங்கிகளுக்கு வழங்கும், குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, ரிசர்வ் வங்கி மீண்டும் குறைத்துள்ளது.
நிதிக் கொள்கை குழு கூட்டத்திற்கு பின், நேற்று, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான, ரெப்போ வட்டியை, 0.25 சதவீதம் குறைத்துள்ளதாக, ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. இதையடுத்து, ரெப்போ வட்டி விகிதம், இதற்கு முன் இருந்த, 6 சதவீதத்திலிருந்து, 0.25 சதவீதம் குறைந்து, 5.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால், வாகன கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட, கடன்கள் மீதான வட்டி குறைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.நிதிக் கொள்கை குழு உறுப்பினர்கள் ஆறு பேரும், ஒருமனதாக வட்டி விகித குறைப்புக்கு ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனியார் முதலீடுகளை அதிகரிக்கவும், தேவைகள்அதிகரிப்புக்கு ஊக்கம் கொடுக்கும் வகை யிலும், வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவுக்கு வந்திருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னராக, சக்திகாந்த தாஸ் பதவியேற்ற பின், மூன்றாவது முறையாக, ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, டிசம்பர் மாதத்தில் சக்திகாந்த தாஸ் கவர்னராக பொறுப்பேற்றார். அவர் பதவி ஏற்ற பின், பிப்ரவரியில் நடந்த முதல் நிதி கொள்கை கூட்டத்தில், ரெப்போ விகிதம், 6.50 சதவீதத்திலிருந்து, 6.25 சதவீதமாகக் குறைக்கப் பட்டது.அடுத்து, ஏப்ரலில் நடைபெற்ற கூட்டத்தில், மேலும், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது, மூன்றாவது முறையாக, மீண்டும், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, ரெப்போ வட்டி விகிதம், 5.75 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போதுள்ள பொருளாதார மந்த நிலையை மாற்றும் முயற்சியில், ரிசர்வ் வங்கி, தீவிரமாக இறங்கி இருப்பது, இந்த வட்டி குறைப்பில் இருந்து அறிய முடிவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகளில் சில:
* நிதியாண்டு, 2019 – -20க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி, இதற்கு முன், 7.2 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது. இது தற்போது, 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது
* நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, அரையாண்டு காலகட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்ப்பு, இதற்கு முன்பிருந்த, 6.8 -– 7.1 சதவீதம் என்ற நிலையிலிருந்து, 6.4 –- 6.7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
*நடப்பு, 2019 செப்டம்பர் முதல், 2020 மார்ச் வரையிலான காலகட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்ப்பு, 7.3 -– 7.4 சதவீதத்திலிருந்து, 7.2 –- 7.5 சதவீதமாக திருத்தியமைக்கப்பட்டு உள்ளது
* நடப்பு நிதியாண்டின், முதல் அரையாண்டுக்கான, நுகர்வோர் பணவீக்கம், 2.9 –- 3.0 சதவீதம் என்பதிலிருந்து, 3.0 – 3.1 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது
* சிறு வங்கிகளுக்கான அனுமதியை, விரைவாக வழங்குவதற்கான வரைவு, ஆகஸ்ட் மாதத்துக்குள் தயாரிக்கப்படும்
* வங்கி வாடிக்கையாளர்கள், ஆர்.டி.ஜி.எஸ்., மற்றும் என்.இ.எப்.டி.,மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான கட்டணம் நீக்கப்படுகிறது
* டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அதிகரிப்பதற்காக எடுக்கப்படும் இந்த நடவடிக்கையின் பயனை, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்
* ஏ.டி.எம்., சேவைக்கான கட்டணங்கள் உள்ளிட்டவற்றை ஆராய, ஒரு குழு அமைக்கப்படும்
* நிதிக் கொள்கை குழுவின் அடுத்த கூட்டத்தின் முடிவுகள், ஆகஸ்ட், 7ம் தேதி அறிவிக்கப்படும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|