பதிவு செய்த நாள்
10 ஜூன்2019
00:17
ரிசர்வ் வங்கியின், வட்டி விகித குறைப்பு எதிர்பார்த்தது போல நடந்து விட்டது. ஆனால், அறிவிப்பை கடந்து, வங்கியின் கவர்னர், பல முக்கிய குறியீடுகளை நமக்கு கொடுத்துள்ளார்.
இனி வரும் மாதங்களில், வட்டி விகிதம் கூட வாய்ப்பில்லை என்ற, தெளிவான புரிதல் நமக்கு கிடைத்துள்ளது. கவர்னர், தேவைப்பட்டால் வட்டியை குறைக்க தயாராக இருப்பதாக தெளிவுபடுத்தியுள்ளார். இது, தொழில் முனைவோருக்கும், நுகர்வு சார்ந்த சேவைகளில் ஈடுபடுவோருக்கும், ஒரு நற்செய்தி என்றே சொல்ல வேண்டும்.
ஒருவேளை, பொருளாதார வளர்ச்சி தொய்வை சந்தித்தால், அந்த சூழலிலிருந்து பொருளாதாரம் மீண்டு வரத் தேவையான எல்லா முடிவுகளையும், ரிசர்வ் வங்கி எடுக்கத் தயாராக இருப்பது, நமக்கு தெளிவாக தெரிவிக்கப்பட்டு விட்டது.புதிய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து, வரும் மாதங்களில், வளர்ச்சி திரும்ப, தேவையான முடிவுகளை எடுக்கும் என்ற நம்பிக்கை, நமக்கு கிடைக்கிறது.
இதில், பணவீக்கம் சார்ந்த அணுகுமுறை மிக முக்கியம். பணவீக்கம் சார்ந்த அச்சங்கள் விலகி, அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையில், பணவீக்கம் சார்ந்த ஒருமித்த கருத்து தெரிகிறது. பணவீக்க கவலைகள் குறைவது, பொருளாதார வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்.முதலீட்டாளர்கள், இந்த அறிவிப்புகளிலிருந்து பல முக்கிய புரிதல்களை வளர்க்க வேண்டும்.
முக்கியமாக, உங்கள் வங்கி வைப்பு கணக்குகள், குறிப்பாக, நிரந்த வைப்புத் தொகை பெறும் வட்டி வகிதம், மேலும் குறையக்கூடும். ஆகவே, ஏற்கனவே முதலீடு செய்த வைப்பு கணக்குகளை புதுப்பிக்கும் நேரத்தில், அவற்றில் இருந்து வரும் வருவாய் குறைவது உறுதி.மேலும், தொடர்ந்து புதிய முதலீடு செய்ய முன்வருவோர், அவற்றில் இருந்து வரும் வருமானத்தில், பற்றாக்குறையை சந்திக்கக்கூடும்.
முதலீட்டாளர்களின் வருவாய் எதிர்ப்பார்ப்புகள், அதிகம் இருக்கும் சூழ்நிலையில், முதலீட்டு தேர்வுகளை மாற்றிக்கொள்ள, பல முதலீட்டாளர்கள் தள்ளப்படலாம். மாற்று முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில், பங்குச் சந்தையில், முதலீடுகள் குவிய வாய்ப்பு உண்டு.மத்திய அரசின் பட்ஜெட் ஏற்படுத்தும் தாக்கத்தை பொறுத்து, இந்த முடிவுகள் அமையலாம்.அதேசமயம், கடன் வாங்குவோருக்கு, வரும் காலங்களில் குறைந்த வட்டியில் கடன்கள் கிடைக்கும்.
வாகனக் கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான வட்டி குறையும் சூழல் ஏற்படும். கடன் வாங்கி நுகர்வில் ஈடுபட, இது நல்ல சந்தர்ப்பம். நிறுவன, கடன் வட்டியும் குறைவது உறுதி.வங்கிகள் மீண்டும் கடன் வளர்ச்சி காணும் சூழலில், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன் வளர்ச்சி, பாதிக்கப்படக்கூடும். இந்நிறுவனங்கள், நிதி திரட்ட மிகவும் சிரமப்படக்கூடிய நிலையில் உள்ளதால், அவர்களால் கடன் வளர்ச்சி காண முடியாது.
இவர்களிடம் கடன் வாங்கி இயங்கி வரும் நிறுவனங்கள், வங்கிகளை நோக்கி, நகர வேண்டி வரும். ஆனால், வங்கிகளின் கடனை பெறும் நிதி நிலையில், அந்த நிறுவனங்கள் இருக்க வேண்டும்.எல்லா நிறுவனங்களாலும், வங்கி சாரா நிதி நிறுவன கடன்களை வங்கிக் கடன்களாக மாற்ற இயலாது. குறைந்த வட்டி விகிதமும், பணவீக்கமும், நல்ல நிதி நிலையில் உள்ள நிறுவனங்கள்,பயனடைய உதவும்.மற்ற நிறுவனங்கள், தங்கள் நிதி நிலை சீர் அடைந்தால் மட்டுமே, கொள்கை முடிவு களின் முழுப் பலன்களை அடைய முடியும்.
ஷியாம் சேகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|