பதிவு செய்த நாள்
18 ஜூன்2019
06:36
புதுடில்லி: அமரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போர், இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வாய்ப்பை வழங்கி உள்ளதாக, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, வர்த்தக துறை அமைச்சகம், மேலும் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மோதலின் விளைவாக, இந்தியாவின், 350க்கும் மேற்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, அமைச்சகத்தின் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தர்ப்பம்:
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, எந்தெந்த பொருட்களை, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்ய வாய்ப்பிருக்கிறது என்பது,அடையாளம் காணப்பட்டது. டீசல், எக்ஸ்ரே டியூப் உள்ளிட்ட சுமார், 151 உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுக்கு, சீனாவில் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இத்தகைய பொருட்களை, சீனா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. ஆனால், வர்த்தக மோதல் காரணமாக, இந்த அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை, சீனா அதிகரித்துள்ளது.
அதே போல், சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த ரப்பர், கிராபைட் எலக்ட்ரோட் உள்ளிட்ட வற்றுக்கான இறக்குமதிக்கு, அதிக வரியை அமெரிக்கா விதித்துள்ளது. சீனாவின் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சுமார், 203 பொருட்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவை பொறுத்தவரை, குறிப்பிட்ட சில பொருட்களை உடனே நம்மால் ஏற்றுமதி செய்ய இயலும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சீனாவுக்கான ஏற்றுமதி வாய்ப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என, ஆய்வு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான இந்த வர்த்தக மோதல், உலகளவிலான வர்த்தகத்தின் போக்கில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தி வருகிறது.
செம்புத் தாது, ரப்பர், காகிதம், காகித அட்டை, குரல் மற்றும் தரவுகளை பகிர்வதற்கான சாதனங்கள் ஆகியவற்றுக்கு, சீன சந்தையில் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை வால்வு கள், ரப்பர், கார்பன், கிராபைட் எலக்ட்ரோடு உள்ளிட்ட வேறு சில பொருட்களுக்கு, அமெரிக்க சந்தையில் வாய்ப்பு உருவாகி உள்ளது.
பற்றாக்குறை:
எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம், சீனாவுடனான, இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்கலாம். கடந்த நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை, 5,012 கோடி அமெரிக்க டாலர் ஆகும். இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|