பதிவு செய்த நாள்
28 ஜூன்2019
06:34
புதுடில்லி: ‘‘அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், 28 பொருட்களுக்கான சுங்க வரியை, இந்தியா ரத்து செய்ய வேண்டும்,’’ என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த, ‘வர்த்தக முன்னுரிமை நாடு’ எனும் அந்தஸ்தை, அமெரிக்கா சமீபத்தில் நீக்கியதாக அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், 28 பொருட்களுக்கான வரியை, இந்தியாவும் அதிகரித்தது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், வரியை ரத்து செய்ய வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து, டிரம்ப் கூறியதாவது: பல ஆண்டுகளாக, அமெரிக்க பொருட்களுக்கு மிக அதிக வரியை, இந்தியா விதித்து வருகிறது; தற்போது, வரியை மேலும் அதிகரித்துள்ளது.இது குறித்து, பிரதமர்மோடியுடன் பேச உள்ளேன். இந்த வரி விதிப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்தியா, இதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
ஜப்பானில் இன்று துவங்கவிருக்கும், ‘ஜி20’ மாநாட்டில், பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது, இரு நாட்டு தலைவர்களும், இறக்குமதி வரி விதிப்புகள் குறித்து பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்பின் இந்த கருத்தையடுத்து, மத்திய அரசின் நிலை என்ன என்பது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவின் வரி விதிப்பு, மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில், அதிகம் கிடையாது. இந்தியாவின் வரி விதிப்பு, உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்பவே அமைந்துள்ளது. அது மட்டுமல்ல, சில பொருட்களுக்கு, இந்தியாவை விட, அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.
இதற்கிடையே, டிரம்பின் இந்த கருத்துகள், வர்த்தக உரசல் போக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என, நிபுணர்கள் கருதுகின்றனர். சமீபத்தில், டில்லி வந்த, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர், போம்பியோ, இரு நாடுகளுக்கும் இடையே சமீப காலமாக நிலவி வரும் வர்த்தக பதற்றத்தை குறைப்பதற்கான முயற்சிகளை எடுத்தார்.மேலும், பாதுகாப்பு, வர்த்தகம் குறித்து, பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர், ஜெய்சங்கர் ஆகியோருடன் கலந்தாலோசித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|