பதிவு செய்த நாள்
08 ஜூலை2019
00:12
கச்சா எண்ணெய்
கச்சா
எண்ணெய் விலை, சர்வதேச சந்தையில், கடந்த வாரம் சரிந்து
வர்த்தகமாகி வந்தது. முந்தைய இரு வாரங்களில், விலை உயர்ந்து,
வர்த்தகம் ஆகி வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன்
மாதத்தில், ஒபெக் எனும், எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா
நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில், உற்பத்தி, முந்தைய
மாதத்தைக் காட்டிலும் கடுமையாக சரிந்துள்ளது, ‘ராய்ட்டர்ஸ்’
நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
சவுதி
அரேபியாவின் உற்பத்தி அதிகரித்திருந்த போதிலும், ஈரான் மற்றும்
வெனிசுலா நாடுகளின் மீது, அமெரிக்க அரசு கொண்டு வந்த பொருளாதார தடை
காரணமாக, அந்நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. மேலும்,
உள்நாட்டு கலவரங்களால், உற்பத்தியும் பாதிப்படைந்தது.
ஜூன்
மாதத்தின் தினசரி உற்பத்தி, 29.60 மில்லியன் பேரல்களாக இருந்தது.
இது, முந்தைய மே மாதத்தை காட்டிலும், 1.7 மில்லியன் பேரல்கள்
குறைவாகும். 2014ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள, குறைந்தபட்ச
உற்பத்தி இதுவே ஆகும்.
கடந்த வாரம் வெளியான அமெரிக்காவின் எண்ணெய்
இருப்பு விபரம், எதிர்பார்த்ததைக் காட்டிலும் 1.1 மில்லியன்
பேரல்கள் குறைவாக இருந்தது. இதுவும் விலை அதிகரிப்புக்கு ஒரு
காரணமாக அமைந்தது.மேலும், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு
இடையே நடந்து வரும் மோதல் போக்கும், கச்சா எண்ணெய் விலை உயர ஒரு
காரணமாக அமைந்தது.கடந்த, 2018 டிசம்பரில், வளைகுடா எண்ணெய்
உற்பத்தி நாடுகள் மற்றும் ரஷ்யா ஆகியவை இணைந்து, எண்ணெய் உற்பத்தி
குறைப்பு முடிவை எடுத்தன.
இம்முடிவின்படி, 2019லிருந்து முதல் ஆறு மாத காலத்துக்கு, எண்ணெய் உற்பத்தியை குறைத்து, விலையை உயர்த்த திட்டமிட்டன.இதன்படி,
உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடான சவுதி அரேபியாவும், தன்
உற்பத்தியை குறைத்தது. இதன் காரணமாக, விலை சரிவு ஓரளவு
மீட்கப்பட்டது.வெனிசுலா நாட்டின் மீது, அமெரிக்கா கொண்டு
வந்துள்ள பொருளாதார தடை காரணமாக, அந்நாட்டின் எண்ணெய்
ஏற்றுமதிக்கு தடை ஏற்பட்டது. இதன்
காரணமாகவும் விலை அதிகரித்தது.
அடுத்து,
அமெரிக்கா – சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் வர்த்தக
மோதல் குறித்து, இரு நாட்டு தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேச
இருப்பதாக தகவல்கள் வெளியாகின.இதனால் சூழல் சுமுகமாகி, அதன்
தொடர்ச்சியாக பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்;
கச்சா எண்ணெய் தேவை உயரும் என்ற அனுமானத்திலும் கச்சா எண்ணெய் விலை
உயர்ந்தது.
எண்ணெய் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையை மேலும் ஆறு
மாதங்களுக்கு நீட்டிக்கும் முடிவுக்கு, ஈரான் உட்பட பல நாடுகளும்
சம்மதம் தெரிவித்துள்ளன. இதுவும் விலை அதிகரிப்புக்கு சாதகமான
நிலையை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் வெள்ளி
கடந்த
ஜூன் மாதத்தில், சர்வதேச சந்தையில், தங்கம் விலை, ஆறு ஆண்டுகள்
காணாத உயர்வை எட்டியது. ஜூன் மாதத்தில் மட்டும், 50 அமெரிக்க டாலர்
அளவுக்கு விலை அதிகரித்தது. கடந்த மாதம் நடைபெற்ற, அமெரிக்க வட்டி
விகித கூட்டத்தில், வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என,
எதிர்பார்க்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சி மந்தம், சீனாவுடனான
வர்த்தக போரால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் போன்ற காரணங்களால்,
வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக
இருந்தது.
வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு,
மேலோங்கி இருந்த காரணத்தால், தங்கம் விலை மளமளவென உயர்ந்தது. மேலும்,
அமெரிக்கா – ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அசாதாரண
சூழல் காரணமாகவும், தங்கம் விலை உயர்வு பெற்றது.
அமெரிக்காவின்
மத்திய வங்கி கூட்டத்தில், வட்டி விகிதம் உயர்த்தப்படாமல், அடுத்த
கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என, அறிவிப்பு வெளியானது.
அமெரிக்காவில்,
அரசு துறையில், புதிதாக பணியில் அமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை
ஒவ்வொரு மாதமும் அறிவிக்கப்படும். கடந்த வாரம்
வெள்ளிக்கிழமையன்று வெளியான அறிவிப்பில், எதிர்பார்ப்பை விட,
பணியில் அமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை
அதிகரித்திருந்தது.இது,
இந்த ஆண்டில், ஐந்து மாதங்களில் இல்லாத உயர்வாகும். அமெரிக்காவில்
பொருளாதாரம் வளர்ச்சி பெற்று வருவதற்கான அடையாளமாக இது
கருதப்படுகிறது.
இதன் காரணமாக, அமெரிக்க நாணய குறியீடு, அதன்
முந்தைய வாரங்களில் இருந்த சரிவிலிருந்து சற்று மீண்டது. இதன்
விளைவாக, பொருள் வாணிப சந்தையில், அனைத்து கமாடிட்டி பொருட்களின்
விலையும் சரிந்தது. இது போன்ற காரணங்களால், தங்கம் மற்றும் வெள்ளி
விலை, வார இறுதி நாளில், 1 சதவீதத்துக்கும் மேல் சரிவை சந்தித்தது.
கடந்த
வாரம் வெளியான, மத்திய அரசு பட்ஜெட்டில், நாட்டின் நடப்புக் கணக்கு
பற்றாக்குறை, 3.3 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்ற இலக்கை
நிர்ணயித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில்,
அத்தியாவசிய பொருட்கள் அல்லாத ஆடம்பரப் பொருட்களின்
இறக்குமதிக்கு, வரியை அதிகரித்து அறிவிக்கப்பட்டது.இதன் காரணமாக, தங்கம் மீதான இறக்குமதி வரி, 10 சதவீதத்திலிருந்து, 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டு, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது.அறிவிப்பு வெளிவந்த உடனே, நாட்டின் பொருள் வாணிப சந்தையில், தங்கம் விலை உயர்ந்தது.
ஒரு
கிராம், 24 காரட் தங்கம், 3,500 ரூபாய்க்கு மேல் வர்த்தகம் ஆனது. ஆபரண
தங்கம், 1 கிராம், 3,200 ரூபாயை தாண்டியது. சர்வதேச அளவில், தங்கம்
இறக்குமதியில், இரண்டாவது மிகப் பெரிய நாடு இந்தியா.கடந்த
வெள்ளியன்று, பட்ஜெட்டின் போது, தங்கம் விலை உயர்ந்து இருந்த
போதிலும், மாலை நேரம், அமெரிக்க வர்த்தகத்தில், விலை சரிந்து, அதிக
ஏற்றத் தாழ்வுகளுடன் வர்த்தகம் நடைபெற்று முடிவுற்றது.
ஜி.எப்.எம்.எஸ்.,
நிறுவனத்தின் கருத்துப்படி, 2018ம் ஆண்டில், உலக நாடுகளின் மொத்த
தங்கம் உற்பத்தி, 3,332 டன். இதில், 400 டன் தங்கத்தை உற்பத்தி செய்து,
சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில்,
ஆஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில், ரஷ்யாவும் உள்ளன. தென்
ஆப்ரிக்காவை பொறுத்தவரை, கடந்த, 10 ஆண்டுகளில், அந்நாட்டின்
தங்கம் உற்பத்தி சரிந்து, தற்போது எட்டாம் இடத்திற்கு
தள்ளப்பட்டுள்ளது.
செம்பு
செம்பு விலையை முந்தைய
வாரத்தோடு ஒப்பிடும்போது, கடந்த வாரம் விலை சிறிதளவு உயர்ந்து
வர்த்தகம் ஆனது. இருந்தபோதிலும், வார இறுதி நாட்களில், விலை சற்று
சரிந்து வர்த்தகம் நடைபெற்றது.
பங்குச் சந்தைகள் உயர்வு விலைக்கு
சாதகமாக அமைந்த போதிலும், கடந்த வியாழன் அன்று வெளியான சீனாவின்
தொழில் துறை உற்பத்தி குறியீட்டின் வளர்ச்சி சரிவை கண்டது. இவ்வாண்டு
துவக்கம் முதலே, உற்பத்தி சரிந்து வரும் சூழலால், உலகளவில் செம்பு
தேவை மற்றும் நுகர்வு குறைந்து, விலை ஏற்றம் கட்டுக்குள் கொண்டு
வரப்பட்டது.லண்டன் பொருள் வாணிப சந்தையில், செம்பு இருப்பானது,
கடந்த வாரம், 34 ஆயிரத்து, 900 டன் அதிகரித்து, மொத்த இருப்பு, 66
ஆயிரத்து, 325 டன்களாக உயர்ந்தது.
அமெரிக்கா – சீனா இடையே நடந்து வரும் வர்த்தக மோதல் குறித்து, தற்போது இரு நாடுகளுக்கு இடையே பேச்சு நடைபெற்று வருகிறது. இந்த பேச்சில் சுமுக முடிவு ஏற்படும் என்று கருதப்படுகிறது. இதனால், பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழிற்சாலை தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து,
முக்கிய தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருளான செம்பின் தேவை
அதிகரிக்கும் என்ற கணிப்பில், விலை ஏற்றம் காணப்பட்டது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|