பதிவு செய்த நாள்
09 ஜூலை2019
04:42
புதுடில்லி, ஜூலை 9–கடந்த, வெள்ளிக்கிழமையன்று, பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, திங்கள் அன்றும் தொடர்ந்தது. இதனால், இந்த இரு வர்த்தக நாட்களிலும் சேர்த்து, 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல், முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்துள்ளனர்.
இதில், நேற்று மட்டும், 3.39 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.நேற்று, மும்பை பங்குச் சந்தை குறியீடான, சென்செக்ஸ், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 792.82 புள்ளிகள் சரிவினை சந்தித்து, 38720.57 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, அதற்கு முந்தைய வர்த்தக நாளுடன் ஒப்பிடும்போது, 2.01 சதவீத சரிவாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீடான, நிப்டி, 252.55 புள்ளிகள் சரிவடைந்து, 11558.60 புள்ளிகளில் நிலை பெற்றது.
நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், எச்.டி.எப்.சி., பேங்க், எல் அண்டு டி., பஜாஜ் பைனான்ஸ், ஆகிய பங்குகள் அதிக அளவில் சரிவினை சந்தித்தன. அதன் தாக்கம், சந்தைகளில் அதிகம் பிரதிபலித்தது.சென்செக்ஸ் தொகுப்பில், பஜாஜ் பைனான்ஸ், ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசூகி, பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகிய நிறுவனங்கள், 11 சதவீதம் வரை சரிவினை சந்தித்தன.மேலும், யெஸ் பேங்க், எச்.சி.எல்., டெக், டி.சி.எஸ்., ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை, சந்தையின் சரிவினை மீறி, 5.90 சதவீதம் வரை உயர்ந்தது.
மத்திய பட்ஜெட்டில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், பொதுமக்களின் பங்கு, குறைந்தபட்சம் 35 சதவீதமாக உயர்த்தப்பட்டது.சூப்பர் பணக்காரர்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரிவிதிப்பு, உள்ளிட்ட பல அம்சங்களால், சந்தையில் பாதிப்பு உணரப்பட்டுள்ளது என, பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும், உலகளவிலான சந்தைகளில் ஏற்பட்ட தாக்கம், உள்நாட்டு சந்தையிலும் பிரதிபலித்து உள்ளது.ஓராண்டில் இல்லாத சரிவுமாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் பங்குகள், வர்த்தகத்தின் இடையே 6 சதவீதம் அளவுக்கு, நேற்று சரிவினை சந்தித்தது. தொடர்ந்து ஐந்து மாதங்களாக, ஜூன் மாதத்திலும் உற்பத்தி குறைப்பில் ஈடுபட்டதாக வந்த அறிவிப்பினால், மாருதி பங்குகள் விலை சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையில், ஒரு பங்கின் துவக்க விலை 6,287 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகத்தின் இடையே 5,985.55 ரூபாயாக சரிந்தது.இது, 52 வாரங்களில் இல்லாத குறைவாகும். 2017ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குப் பின், முதன் முறையாக, 6 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் மாருதி நிறுவனப் பங்கின் விலை சரிவை சந்தித்தது. வர்த்தகத்தின் முடிவில் ஒரு பங்கின் விலை, 6,053 ரூபாயாக நிலைபெற்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|