பதிவு செய்த நாள்
11 ஜூலை2019
23:47
மும்பை:கடந்த
நிதியாண்டில் மட்டும், 1,701 வங்கி சாரா நிதி நிறுவனங்களின்
உரிமங்களை, ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
இந்நிறுவனங்கள்,
தங்களது குறைந்தபட்ச மூலதன தேவையை பூர்த்தி செய்ய தவறிய
காரணத்தால், உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு,
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டும், 779 நிறுவனங்களின்
உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2017 – -18ம் நிதியாண்டில், 26
நிறுவனங்களின் உரிமங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.
அவகாசம்
ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனம்,
பெரும் நிதி சிக்கலில் மாட்டி உள்ளதால், அதன் விளைவாக, வங்கியல்லாத
நிறுவனங்கள் துறையில் பணப்புழக்கம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, பல நிறுவனங்கள் நிதித் தேவையை பூர்த்தி செய்ய முடியாத
நிலைக்கு தள்ளப்பட்டன.
மேலும், கடந்த காலங்களில், வங்கி சாரா நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில், அதிக அக்கறை காட்டப்படவில்லை. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது.
இப்போது,
இவற்றின் நிதிச் செயல்பாடுகள் உன்னிப்பாக
கண்காணிக்கப்படுகின்றன. ரிசர்வ் வங்கி சாட்டையை சுழற்ற
ஆரம்பித்துள்ளது.ஒரு வங்கி சாரா நிதி நிறுவனமானது, நிகர சொந்த
நிதியாக, 25 லட்சம் ரூபாய் வைத்திருக்க வேண்டும் என்று, 1997ம்
ஆண்டில், ரிசர்வ் வங்கி ஆணையிட்டது.இதன் பின், 1999ல், புதிய
பதிவுகளுக்கு, சொந்த நிதி, 2 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் என,
உயர்த்தி அறிவித்தது. ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்கள்,
அவற்றின் சொந்த நிதியை படிப்படியாக அதிகரித்துக் கொள்ள, அவகாசம் வழங்கப்பட்டது.
இதற்கான
கெடு தேதியான, 2017 மார்ச், 31ம் தேதிக்குப் பிறகும், இந்த மூலதன
தேவையை பூர்த்தி செய்யாத நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து
செய்யப்பட்டுள்ளன.வங்கி சாரா நிதி நிறுவனங்களைப் பொறுத்தவரை, உரிமத்தை இழந்தாலும், அவை தொடர்ந்து செயல்பட முடியும்.
வங்கி கடன்
ஆனாலும்,
அவை வங்கிகளிலிருந்தோ அல்லது நிதிச் சந்தைகளிலிருந்தோ, நிதி
திரட்ட இயலாமல் போய் விடும்; அவற்றின் கையிலிருந்து மட்டுமே கடன்
வழங்க முடியும்.உரிமம் ரத்தானால், இந்நிறுவனங்களுக்கு,
வங்கிகள் கடனுதவி வழங்காது. இதனால், ஒருகட்டத்தில் இழுத்து
மூடப்படும் நிலைக்கு சென்றுவிடும்.இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரிசர்வ் வங்கி நினைத்தால், வங்கி சாரா நிதி நிறுவன சொந்த நிதியின் வரம்பை, 100 கோடி ரூபாய் வரை உயர்த்த முடியும்.அப்படி ஒரு முடிவை, ரிசர்வ் வங்கி எடுத்துவிட்டால், படிப்படியாக அதை நிறைவேற்றும் முயற்சியில் நிச்சயமாக இறங்கும்.அதே சமயம், இந்நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்வதை, நிறுவனங்களின் தவறான நிர்வாக செயல்பாடுகளுடன் இணைத்து பார்க்கக்கூடாது. அதற்கும், இந்த முடிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
வங்கி
சாரா நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியால்
கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட, அவை, நிறுவனங்கள்
சட்டத்தால் தான் நிர்வகிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
நிறுவனங்கள் எண்ணிக்கை
மார்ச், 31ம் தேதி நிலவரப்படி, 9,659 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியில்
பதிவு செய்யப்பட்டுள்ளன. வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
பெரும்பாலும் வங்கி கடன், கடன் பத்திரங்கள் மற்றும் வணிக ஆவணங்கள்
மூலமாக நிதி திரட்டுகின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|