பதிவு செய்த நாள்
15 ஜூலை2019
00:28
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம், 4 சதவீதம் உயர்ந்து, 1 பேரல், 60 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.அமெரிக்காவின், எண்ணெய் உற்பத்தி பகுதிகளில், கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சூறாவளி காற்று, கச்சா எண்ணெய் உற்பத்தியை கடுமையாகப் பாதித்துள்ளது.
‘பேரி’ என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி காற்று, தொடர்ந்து அச்சுறுத்தி வரும் சூழலில், எண்ணெய் உற்பத்தி, 60 சதவீதம் சரிந்து, தற்போது, தினசரி உற்பத்தி, 1.1 மில்லியன் பேரல் ஆக உள்ளது.ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகள் மீது, அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள பொருளாதார தடையால், அந்நாடுகளின் எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியைப் பொறுத்தவரை, கடந்த, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தற்போது சரிந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இந்நாடுகளுக்கு இடையேயான அசாதாரண சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் விலை, கடந்த வாரம் உயர்ந்தது.இருப்பினும், உலக நாடுகளின் கச்சா எண்ணெய் தேவை குறைந்து, அமெரிக்காவின் உற்பத்தி அதிகரித்து வருகிறது.இந்த சூழலில், அடுத்த ஒன்பது மாதங்களில், தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு, இருப்பு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது, சர்வதேச எரிபொருள் கழகம்.
எண்ணெய் உற்பத்தி நாடுகள், இதை கருத்தில் கொண்டு, உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சந்தையில் சீரான போக்கிற்கு வழிவகுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒபெக் நாடுகளின் எண்ணெய் உற்பத்தி, 2020ம் ஆண்டில் குறைந்து, தினசரி தேவை, 28 மில்லியன் பேரல் ஆக இருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போது, இந்நாடுகளின் தினசரி மொத்த உற்பத்தி, 30 மில்லியன் பேரல்கள்.
இதற்கிடையே, அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி அதிகரித்து வருகிறது. உலக அளவில், தினசரி உற்பத்தியில், அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இரண்டாவதாக, சவுதி அரேபியாவும், மூன்றாவதாக, ரஷ்யாவும் உள்ளன.அமெரிக்காவில் இயங்கி வரும், ஆழ்குழாய் கிணறு
களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது, 892 குழாய்கள் செயல்பட்டு வருகின்றன. 2015, மார்ச் மாதத்துக்குப் பிறகு, இதுவே அதிகமாகும்.
சவுதி அரேபியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மொத்த உற்பத்தி, ஒட்டுமொத்த உலகின் நுகர்வு தேவையில், 60 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வெள்ளி
சர்வதேச சந்தையில், கடந்த வார ஆரம்ப நாட்களில், தங்கத்தின் விலை, சரிந்து வர்த்தகம் ஆன போதிலும், புதன் கிழமை அன்று விலை அதிகரித்தது. வட்டி விகிதம் குறித்த, அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பே, இந்த விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது.
பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு, இம்மாதம் நடைபெற இருக்கும் வட்டி விகித கொள்கை கூட்டத்தில், வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என, அமெரிக்காவின், மத்திய வங்கி தலைவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக, அமெரிக்க நாணயத்தின் மதிப்பில் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, பொருள் வாணிப சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை அதிகரித்தது.மேலும், வார இறுதி நாளான வெள்ளியன்று, அமெரிக்காவில் வெளியான, பணவீக்க விகிதம், எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் இருந்தது. கடந்த ஆண்டு, ஜனவரி மாதத்துக்கு பிறகு, தற்போது தான் பணவீக்க விகிதம் மிகவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில், வரும், 30, 31ம் தேதிகளில் நடைபெற உள்ள, மத்திய வங்கியின் கூட்டத்தில், வட்டி விகிதம் குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பணவீக்க விகிதத்தை குறைக்கும் பொருட்டு, வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கிடையே, அமெரிக்க அரசு பணியில் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றத்தையும், மத்திய வங்கி செய்யாது என மாற்றுக் கருத்தும் உள்ளது.
பொதுவாக, வட்டி விகிதம் குறைக்கப்படும்போது, அரசு கருவூலங்களின் ஆதாயம் குறையும். இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்களது முதலீட்டை அதிகரிப்பர்.
அதேசமயம், வட்டிவிகிதம் அதிகரிக்கப்பட்டால், தங்கத்தில் செய்திருக்கும் முதலீட்டை திரும்ப பெற்று, அரசு கருவூலங்கள் போன்றவற்றில் முதலீடு செய்வர்.எனவே, வட்டி விகித மாற்றங்கள், பொருள் வாணிப சந்தையில், அமெரிக்க நாணய குறியீட்டின் மதிப்பு உயரவும், சரியவும் காரணமாக அமைந்து விடுகிறது. இதனால், இதை சார்ந்துள்ள, அனைத்து கமாடிட்டி பொருட்களின் விலையிலும் கடுமையான தாக்கம் ஏற்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே, சர்வதேச சந்தையில், 1 அவுன்ஸ் தங்கம், 1,400 அமெரிக்க டாலருக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. உள்நாட்டை பொறுத்தவரை ஆபரண சந்தையில், தங்கம் விலை உயர்ந்துள்ளது.உள்நாட்டில், ஆபரண சந்தையில், இரண்டு முக்கியமான காரணங்களால் தங்கம் விலை அதிகரித்தது.
மத்திய பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி, 10 சதவீதத்தில் இருந்து, 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது, ஒரு முக்கியமான காரணமாகும்.அடுத்ததாக, டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்து உள்ளதால், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.நாட்டின் மொத்த தேவையில் பெரும்பகுதி, இறக்குமதி மூலமாகவே ஈடுகட்டப்படுகிறது.
செம்பு
செம்பு விலை, கடந்த மூன்று மாதங்களாகவே, தொடர்ந்து, சரிவில் வர்த்தகமாகி வருகிறது. உலகின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி சரிவு, செம்பு விலை குறைய மிகவும் முக்கியமான காரணமாகி உள்ளது.செம்பு, அதிக அளவில் நுகரப்படும் நாடு, சீனா. இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி மந்தம், செம்பு விலையை கடுமையாக பாதித்து வருகிறது.
அத்துடன், சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடைபெற்று வரும் வர்த்தக மோதல் போக்கால், இரு நாடுகளின் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழில் துறை வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது. தொழில் துறை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவு, செம்பு நுகர்வை கடுமையாக பாதித்துள்ளது.
செம்பு உலோகத்தை, உலகளவில், தொழிற்சாலைக்கு அதிகம் பயன்படுத்தும் நாடு, சீனா. எனவே, இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்வைத்து, கமாடிட்டி பொருட்களின் விலை மதிப்பு, நிர்ணயம் செய்யப்படுகிறது.தற்போதைய சூழலில், சீனாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறையும் என்ற அச்சம் காரணமாகவும், செம்பு விலை சரிந்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|