பதிவு செய்த நாள்
15 ஜூலை2019
00:41
மார்க்கெட் என்ன ஆகும்? பட்ஜெட் வெளிவந்த பிறகு, மார்க்கெட் இறங்க அதிக வாய்ப்பு உள்ளதா? இந்த பட்ஜெட்டில், முதலீட்டாளர்களுக்கு பாதகமான பல அம்சங்கள் இருப்பது, சந்தையை தொடர்ந்து எப்படி பாதிக்கும்?கவலைக்குறிகள் சந்தையில் பரவிக் கிடப்பது தெளிவாக தெரிகிறது.
இந்த கவலைக்குறிகள், பட்ஜெட்டின் அம்சங்களால் இல்லை. அதை, முதலில் புரிந்து கொண்டு, ஏற்போம்.கவலைக்கான காரணம், நம் பொதுத் துறை வங்கிகளும், நிதித் துறை நிறுவனங்களும், வீட்டுக் கடன் நிறுவனங்களும், மொத்த கடன் தரும் சில கார்ப்பரேட் வங்கிகளும், ஒரே சமயத்தில் தவிப்பது தான்.இன்னும் என்னென்ன சந்திக்க வேண்டி வருமோ என்பது தான் சந்தையின் சந்தேகமும், கவலையும்.
இதோ, எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடுமென்று நம்ப துவங்கும் ஒவ்வொரு தருணத்திலும், புதிதாக ஏதாவது கிளம்பி விடுகிறது.இப்போதெல்லாம், கெட்ட செய்தி ஏதும் வராவிட்டால், முதலீட்டாளர்கள் நிம்மதி அடைவதில்லை. மாறாக, இன்னும் சிறிது நேரத்தில், ஏதோ பெரிய கவலை வரப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்க துவங்கி விட்டனர்.
உண்மையில், அப்படி ஒரு காலகட்டத்திலா நாம் இருக்கிறோம்? பொருளாதாரம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது?நம் பொருளாதாரத்தின் முக்கிய பிரச்னை, வளர்ச்சி. பணவீக்கம் கூடி, விலைவாசி உயர்ந்துவிடக் கூடாது என்ற நோக்கம் மிகச் சிறந்தது. ஆனால், வளர்ச்சி ஏற்படும் வண்ணம் இதை நிறைவேற்ற வேண்டும்.கடந்த இரண்டு ஆண்டுகளில், விலைவாசி, மிகச் சிறப்பாக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளது.
இனி வரும் காலங்களில், விலைவாசியை கட்டுப்படுத்த தேவையான எல்லா முடிவுகளையும், அரசால், ரிசர்வ் வங்கி ஒத்துழைப்புடன் எடுக்க முடியும்.ஆனால், வளர்ச்சிக்கு மீண்டும் திரும்ப தேவையான நடவடிக்கைகளை வேகமாக அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து எடுக்க வேண்டும். அத்தகைய முயற்சிகள், இந்த பட்ஜெட் மூலம் இன்னும் வேகம் பிடிக்கும் என்ற தெளிவு ஏற்பட்டுள்ளது. வட்டி விகிதம் மேலும் குறையும்.
பொதுத் துறை வங்கிகள் உரிய பாதுகாப்போடு, மீண்டும் கடன் வளர்ச்சியை ஏற்படுத்த துவங்கி விட்டன. புதிய தொழில்கள் துவங்க, அரசு பல நடவடிக்கைகள் எடுக்கிறது.அன்னிய முதலீடு மேலும் வளரும் சூழல் தெரிகிறது. வங்கிகள் வாராக் கடன்களை திரும்பப் பெற ஆரம்பித்து விட்டன. புதிய வாராக் கடன்களின் வேகம், இனி நிச்சயம் குறைய துவங்கும். பொருளாதாரம் சீராக ஆவது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.
இப்போது குறைவாக இருப்பது, உள்நாட்டு முதலீடு மற்றும் நுகர்வு சார்ந்த நம்பிக்கை. அதை ஏற்படுத்த வேண்டிய இடத்தில் அரசு இருக்கிறது. தொடர்ந்து இந்த அழுத்தம் இருக்கும்.வட்டியை மேலும் குறைத்து, பணத்தை புழங்கச் செய்து, நுகர்வை அதிகரித்து, மக்களை சந்தோஷமாக செலவு செய்ய வைக்க வேண்டியது தான் இப்போதைய அவசர தேவை.இதுவும் நடக்கும் என்றே தோன்றுகிறது. சந்தை இதை மெதுவாக உணரும்.
சந்தையை முந்திக் கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். உலக சந்தை சார்ந்த அபாயங்கள் தான் நமக்கு முக்கிய அச்சம்.அதை கடப்பது எளிது அல்ல. ஆனால், குறைவான வட்டி விகித சூழல் இருக்கும் வரை, பங்கு முதலீடு, பிற முதலீடுகளை விட அதிக லாபம் ஈட்டும் இடத்தில் தொடரும். கவனமான தேர்வுகளுடன் பயணிக்க வேண்டும்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
shyamsek@ithought.co.in
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|