பதிவு செய்த நாள்
15 ஜூலை2019
00:45
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை சமர்ப்பித்தபோது, ரயில்வே துறையில், தனியாரின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என்று, ஒரு வரி சொன்னார். இது, அரசுத் துறையை தனியார்மயமாக்குவதற்கான ஆரம்பப் புள்ளி என்று ரயில்வே தொழிற்சங்கங்கள் போர்க்கொடி துாக்கின.
ரயில்வே துறை அமைச்சரோ, இந்தத் துறை தனியார்மயமாகாது என்று பார்லிமென்டிலேயே உறுதி கூறினார். ஆனாலும், சர்ச்சை அடங்கவில்லை.
ரயில்வே துறையில் என்ன பிரச்னை?ரயில்வே துறை லாபகரமாக இயங்கவில்லை என்பது ஊரறிந்த செய்தி.அதை லாப நோக்கமற்றதாக நடத்த வேண்டும், சேவையே அதன் நோக்கமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனைகள், பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால், அதன் வளர்ச்சித் திட்டங்களுக்கும், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கான கூடுதல் வசதிகளுக்கும் முதலீடு தேவை.
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள திட்டங்களை, 2030க்குள் நிறைவேற்றுவதற்கே, 50 லட்சம் கோடி ரூபாய் தேவை என்று தெரிவித்திருக்கிறார், நிதி அமைச்சர். இதை மனதில் வைத்தே, பட்ஜெட்டில் தனியார் துறையினரின் பங்களிப்பை எடுத்துப் பேசினார்.நாடெங்கும் எழுந்த எதிர்ப்பை பார்த்து, உடனே ரயில்வே துறை அமைச்சர் லேசாக பின்வாங்கி உள்ளார்.ஆனால், இன்னொரு செய்தியும், இதே சமயத்தில் வெளியாகியுள்ளது.
இந்தப் புதிய அரசின் முதல், 100 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டிய திட்டப்பணிகளில், இரண்டு ரயில்கள் தனியார் நிர்வாகத்தின் கீழ் விடப்படும் என்று தெரிகிறது.டில்லி – லக்னோ இடையே ஓடவிருக்கிற, ‘தேஜஸ் எக்ஸ்பிரஸ்’ ரயிலை தனியார்வசம் ஒப்படைக்கப் போகின்றனர். வழக்கத்தை விட வித்தியாசமான வசதிகளை கொண்டுள்ள இந்த ரயிலை, தனியார் நடத்துவதற்கான ஒப்பந்தப் புள்ளி வெளியாகப் போகிறது.
இதேபோல், தனியார் நடத்துவதற்கு, இன்னொரு ரயிலையும் வழங்கப் போகிறது ரயில்வே துறை.மேலும், ரேபரேலியில் இருக்கும், ‘மார்டர்ன் கோச் பாக்டரி’யை நடத்துவதற்கான பொறுப்பும் தனியார் வசம் ஒப்படைப்பக்கப்படலாம் என, சொல்லப்படுகிறது.ஒருபக்கம், ரயில்வே துறை அமைச்சர், தனியார் மயம் கிடையாது என்று தெளிவாக தெரிவிக்கிறார். மறுபுறமோ, தனியாரிடம் ரயில்களையும், உற்பத்தி வசதிகளையும் ஒப்படைப்பதற்கான முயற்சி நடைபெறுவதாக செய்திகள் சொல்கின்றன.
இதேபோன்று தான், முன்பு, ‘ஏர் இந்தியா’வும், பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் தடுமாறின. ஏர் இந்தியாவை தனியாரிடம் விற்பனை செய்யலாமா, வேண்டாமா என்று பல ஆண்டுகளாக குழப்பம். கடைசியில், இன்றைக்கு அதன் நிலைமை என்ன?எந்த சர்வதேச முதலீட்டாளரும் சரி, உள்ளூர் விமான சேவை நிறுவனமும் சரி, ஏர் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வரவில்லை; அதன் கடன்களை ஏற்கவில்லை.இதுவரையான கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்துவிட்டு, நிகர அடிப்படையில், விற்பனை செய்தால் மட்டுமே வாங்கிக் கொள்ள நிறுவனங்கள் விரும்புகின்றன.
பி.எஸ்.என்.எல்.,லிலும் இதே பிரச்னை தான். மற்ற தனியார் சேவைதாரர்களுக்கெல்லாம், ‘4ஜி’ சேவைக்கான அனுமதி வழங்கப்பட்டு, அவர்கள் ஓஹோவென்று கல்லா கட்டிவிட்டனர். பி.எஸ்.என்.எல்., பின்தங்கிப் போய்விட்டது.அந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதா, என்ன செய்வது என்று தெரியாமல், ஒருவித தள்ளாட்டம் தெரிகிறது.
இந்நிலையில், மத்திய அரசு இரண்டு, மூன்று விஷயங்களை தெளிவுபடுத்துவது மிகவும் நல்லது.உண்மையில், மத்திய அரசு, இது போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் விஷயத்தில் துணிச்சலோடு பேச வேண்டும்.நிதி நிலைமையும், எதிர்கால செலவுகளும் நிச்சயம் பொதுமக்கள் உட்பட எல்லாருக்கும் தெரியும். லாபம் வேண்டாம், குறைந்தபட்சம் உள்ளது உள்ளபடி நடத்தவே, பொதுத் துறை நிறுவனங்களுக்கு நிதியாதாரம் வேண்டும்.மத்திய அரசு, பணத்தைக் கொட்டிக்கொண்டே இருக்க முடியாது.
ஒவ்வொரு பொதுத்துறையும் தன்னளவில் தற்சார்புடன் இருக்க வேண்டியது அவசியம். இதை, பொதுமக்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றனர்.அதனால், தனியார்களுக்கு இந்நிறுவனங்களை வழங்கிவிட்டு, அரசு விலகி நிற்கவே விரும்புகிறது என்றால், அதை தெளிவுபடுத்தி விடலாம்.அப்படியானால், அதற்கான நியாயங்களை முன்வைத்து, அடுத்த கட்ட நகர்வுகள் என்ன என்பதையும் பொதுமக்கள் முன்பு தெளிவுபடுத்திவிட வேண்டும். இல்லை, அரசே மேன்மேலும் முதலீடு செய்து, இத்துறைகளை மீட்டெடுக்கப் போகிறது என்றால், அதற்கான எதிர்காலத் திட்டம் என்ன என்பதையும் விளக்கிவிட வேண்டும்.
எதைச் செய்தாலும் நிச்சயம் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யப் போகின்றன; அரசியலாக்கப் போகின்றன; தொழிலாளர்களைத் துாண்டிவிட்டு, குளிர்காயத் தான் போகின்றன.அவர்களைப் பற்றி கவலைப்படாமல், மக்களுக்கும், பணியாளர்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை.இல்லையென்றால் என்ன நடக்கும் தெரியுமா? வீண் குழப்பம் மட்டுமே மிஞ்சும்.
அரசால் தொடர்ச்சியாக முதலீடு செய்ய முடியாது. இந்தத் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளுக்குள்ளேயே உளுத்துப் போய், எந்தவிதமான மதிப்பும் இல்லாமல் போய்விடும். இன்னொரு, ஏர் இந்தியா போன்ற நிலைமை கண்ணெதிரே தெரிகிறது.அதுவரை நிலைமை கைவிட்டுப் போக அனுமதிக்காமல், தெளிவான எதிர்காலத் திட்டங்களை முன்வைத்து முன்னே நகர்வது ஒன்றே, அரசுக்கு நல்லது. அது மக்களுக்கும், அவர்களது வரிப்பணத்துக்கும் கூட நல்லது. இந்தியாவுக்கும் நல்லது.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|