பதிவு செய்த நாள்
19 ஜூலை2019
05:08
புதுடில்லி: ‘‘முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களில், 2 சதவீத கடன்கள், வாராக் கடனாக மாறியுள்ளன,’’ என, நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணை அமைச்சர், அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது: ‘பிரதான் மந்திரி முத்ரா யோஜனா’ திட்டத்தின் கீழ், வங்கியிலிருந்து வழங்கப்பட்ட கடன்களில், 2 சதவீதம் மட்டுமே, வாராக் கடனாக மாறியுள்ளது. சில காரணங்களால், கடனுதவி பெற்றவர்கள், கடனை திருப்பிச் செலுத்தாமல் விட்டுவிட்டனர். குறிப்பாக, ‘சிசு’ பிரிவில், முதல் முறையாக கடன் பெற்றவர்கள், அவசர தேவைகளுக்கு முன்னுரிமை தந்ததன் காரணமாக, அவர்களால் கடனை அடைக்க முடியாமல் போயுள்ளது.
அதேபோல், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது, கடன் விவகாரங்களில் போதிய அனுபவங்கள் இல்லாதது போன்ற காரணங்களாலும், சிலர் கடனை அடைக்கவில்லை. இதனால், இதுநாள் வரை வழங்கப்பட்ட கடன்களில், 2 சதவீதம் வாராக் கடனாக மாறியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை திட்டங்களில் ஒன்று, ‘பிரதான் மந்திரி முத்ரா யோஜனா’ திட்டம். இத்திட்டமானது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை, பிரதமர் மோடி, 2015 ஏப்., 8ம் தேதி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான கடன் தேவைப்படும் நிறுவனங்களுக்கு, கடன் வழங்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, இத்திட்டம் வெற்றிகரமாக அதன் இலக்கை நிறைவேற்றி வருகிறது. கடந்த நிதியாண்டில், இதன் இலக்கு, 3 லட்சம் கோடி ரூபாய் என, அரசால் நிர்ணயிக்கப் பட்டது.
இந்நிலையில், கடந்த நிதியாண்டில், இலக்கை தாண்டி, 3.21 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, கடன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டான, 2017- – 18ல், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, கடந்த நிதியாண்டில், 23 சதவீதம் அளவுக்கு அதிகமாக கடன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில், சராசரியாக, வேலை நாள் ஒன்றுக்கு, 970 கோடி ரூபாய் என்ற அளவில் கடன் கொடுப்பதற்கு, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
முத்ரா திட்டத்தின் கீழ், 2018 மார்ச் மாத முடிவில், வாராக்கடனாக, 7,277 கோடி ரூபாய் இருப்பதாக பார்லிமென்டில் அறிவிக்கப்பட்டது. முத்ரா திட்டத்தின் கீழ், மூன்று வகைகளில், கடன் வழங்கப்படுகிறது. சிசு திட்டத்தில், 50 ஆயிரம் ரூபாய் வரை; கிஷோர் திட்டத்தில், 50 ஆயிரம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை; தருண் திட்டத்தில், 5 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை, கடன் வழங்கப்படுகிறது. வங்கிகளின் மூலம் இக்கடன்கள் வழங்கப்படுகின்றன.
முத்ரா வாராக் கடன் ரூபாய் கோடிகளில்மொத்த வாராக் கடன் 17,651.74எஸ்.பி.ஐ., 2,694.22ஜனா ஸ்மால் பேங்க் 2,193.43பஞ்சாப் நேஷனல் பேங்க் 1,605.13பேங்க் ஆப் இந்தியா 965.77கனரா பேங்க் 921.46
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|