பதிவு செய்த நாள்
26 ஜூலை2019
07:00
புதுடில்லி: மத்திய நிதித் துறை செயலராக இருந்த, சுபாஷ் சந்திர கார்க், கடந்த புதன் கிழமை, எரிசக்தி துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அடுத்த நாளே, அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற, கார்க் அனுமதி கோரி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இடமாற்றலில் அதிருப்தி அடைந்தே, அவர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அரசின் முடிவு தெரியும் வரை, புதிய பொறுப்பை ஏற்று, பணியில் தொடர்வார் என்கின்றனர்.
இது குறித்து, சில உயரதிகாரிகள் கூறியதாவது: இதுவரை இருந்த பொருளாதாரத் துறை செயலர்களில், மிகவும் சக்தி வாய்ந்தவராக கார்க் சமீபத்தில் காணப்பட்டார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதியவர் என்ற நிலையில், நிதித் துறையின் பல முடிவுகளுக்கு, கார்க் காரணமாக இருந்தார். குறிப்பாக, வெளிநாட்டில் அரசு கடன் பத்திரங்கள் வெளியிடுவது, நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாகக் குறைத்தல் மற்றும் அந்த இலக்கை அடைய, பட்ஜெட்டுக்கு வெளியே கடன் வாங்குவது போன்ற பல விஷயங்களில், அவர் தன்னை முன் நிறுத்தினார்.
ஆனால், இந்த விஷயங்கள், நிதியமைச்சகத்துக்கு பெரிய எதிர்ப்புகளை உருவாக்கின. பல பொருளாதார அறிஞர்கள், இந்த முடிவுகள் குறித்து கடுமையாக விமர்சித்தனர். இது ஒருபுறமிருக்க, ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த, உர்ஜித் படேல், செபி அதிகாரிகள் என, பலருடன் அவர் முரண்பட்டு வந்தார். அடுத்து, பிமல் ஜலான் கமிட்டி குழுவுடனும் முரண்பட்டுள்ளார். கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ளாதது; தன் கருத்தை கடைசி வரை மாற்றிக் கொள்ள மறுத்தது என, பல விதங்களில், எதிர்நிலையில் இருந்தார். இந்நிலையில் தான், அவர், ‘சக்தி’ வாய்ந்த துறையிலிருந்து மாற்றப்பட்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சுபாஷ் சந்திர கார்கின் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள, அதானு சக்ரவர்த்தி, பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்வராக பணியாற்றிய காலத்தில், அவருடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|