பதிவு செய்த நாள்
26 ஜூலை2019
07:01
மும்பை: இந்திய பங்குச் சந்தைகள், தொடர்ந்து, ஆறாவது நாளாக சரிவடைந்து வருகின்றன. கடந்த ஐந்து வர்த்தக நாட்களில், பங்குச் சந்தைகள் தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், நேற்று மிதமான சரிவை சந்தித்தன.
துவக்கத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்தது. இருப்பினும், பங்குகள் விற்பனை காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால், சரிவை நோக்கி திரும்பியது. மும்பை பங்குச் சந்தையின், வர்த்தக முடிவில், சென்செக்ஸ், 0.04 சதவீதம் குறைந்து, அதாவது, 16.67 புள்ளிகள் குறைந்து, 37830.98 புள்ளிகளில் நிலைபெற்றது.இதே நிலை, தேசிய பங்குச் சந்தைக்கும் ஏற்பட்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’ 19.15 புள்ளிகள் அல்லது, 0.17 சதவீதம் சரிந்து, வர்த்தகத்தின் இறுதியில், 11252.15 புள்ளிகளில் நிலைபெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில், ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், மும்பை பங்குச் சந்தையில், 4.56 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டது.டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், முதல் காலாண்டு நிதி நிலை அறிக்கை, நேற்று வெளியானதை முன்னிட்டு, அந் நிறுவனப் பங்குகள் அதிக இழப்பைச் சந்தித்தன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 3,679 கோடி ரூபாய், நிகர இழப்பை சந்தித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்த வாகன விற்பனையை விட, மதிப்பீட்டு காலத்தில், 22.7 சதவீதம் அளவுக்கு விற்பனை குறைந்துவிட்டது, இந்த நஷ்டத்துக்கு முக்கிய காரணம்.டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தையடுத்து, ‘பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யெஸ் பேங்க், என்.ஐ.பி.சி., டாடா ஸ்டீல்’ ஆகியவையும், 3.95 சதவீதம் வரையிலான சரிவைக் கண்டன. இருப்பினும், இந்நிலைக்கு மாறாக, ‘வேதாந்தா, சன் பார்மா, இண்டஸ்ட்இண்ட் பேங்க், ஆக்சிஸ் பேங்க், பவர் கிரிட், டி.சி.எஸ்., டெக்மகிந்திரா, இன்போசிஸ்’ ஆகியன, 3.82 சதவீதம் வரையிலான லாபத்தைக் கண்டன.
ஜூலை மாத, ‘எப் அண்டு ஓ’ ஒப்பந்தங்கள் காலாவதியை முன்னிட்டு, சந்தை அதிக ஏற்ற, இறக்கங்களை சந்தித்ததாக, பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். முதலிடம் பிடித்த டி.சி.எஸ்.,சந்தை மதிப்பு அடிப்படையில், டி.சி.எஸ்., நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தை மீண்டும் பிடித்தது. நேற்றைய பங்குச் சந்தை வர்த்தக முடிவில், டி.சி.எஸ்., நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 7 லட்சத்து, 98 ஆயிரத்து, 620.04 கோடி ரூபாயாக இருந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 7 லட்சத்து, 81 ஆயிரத்து, 164.46 கோடி ரூபாயாக இருந்தது.
ரிலையன்ஸ் நிறுவனத்தை விட, டி.சி.எஸ்., நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 17 ஆயிரத்து, 455.58 கோடி ரூபாய் அதிகரித்ததை அடுத்து, நாட்டில் அதிக சந்தை மதிப்புள்ள நிறுவனமாக, முதலிடத்தைப் பிடித்தது, டி.சி.எஸ்.இழப்புபங்குச் சந்தை, ஆறாவது நாளாக, நேற்றும் சரிவை சந்தித்த நிலையில், கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் மட்டும், முதலீட்டாளர்கள், 5.86 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|