பதிவு செய்த நாள்
02 ஆக2019
23:46
புதுடில்லி:ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல், ஓரளவு அதிகரித்து, 1.02 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின், மொத்த ஜி.எஸ்.டி., வசூல், 1.02 லட்சம் கோடி ரூபாய் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, 5.8 சதவீதம் அளவுக்கு, வரி வசூல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், மொத்தம், 96 ஆயிரத்து, 483 கோடி ரூபாய் வசூல் ஆகியிருந்தது.
நடப்பு நிதியாண்டில், கடந்த ஜூன் மாதத்தில் தான், வரி வசூல், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. இந்த மாதத்தில், மொத்தம் வசூலான தொகை, 99 ஆயிரத்து, 939 கோடி ரூபாய் ஆகும்.ஜூலை மாதத்தில், 17 ஆயிரத்து, 912 கோடி ரூபாய், மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாகவும், மாநில வரியாக, 25 ஆயிரத்து, 8 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த, ஜி.எஸ்.டி.,யாக, 50 ஆயிரத்து, 612 கோடி ரூபாயும் வசூலாகி உள்ளது.
இதில் இறக்குமதியின் போது வசூலிக்கப்பட்டது, 24 ஆயிரத்து, 246 கோடி ரூபாய் ஆகும்.கூடுதல் வரியாக, 8 ஆயிரத்து, 551 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இதில், 797 கோடி ரூபாய், இறக்குமதியின் போது வசூல் செய்யப்பட்டதாகும்.அரசின் அறிக்கையின்படி, ஏப்ரல், மே ஆகிய மாதங்களில், மாநில அரசுகளுக்கு, 17 ஆயிரத்து, 789 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை வசூலான மொத்த ஜி.எஸ்.டி., 4 லட்சத்து, 16 ஆயிரத்து, 176 கோடி ரூபாய் ஆகும்.கடந்த நிதியாண்டில், இதே காலகட்டத்தில், மொத்தம், 3 லட்சத்து, 89 ஆயிரத்து, 568 கோடி ரூபாய் மட்டுமே வசூலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|