பதிவு செய்த நாள்
02 ஆக2019
23:52
புதுடில்லி:பயணியர் வாகன விற்பனை, நடப்பு மாதத்திலும் பாதிப்புக்கு உள்ளாகும் என தர மதிப்பீட்டு நிறுவனமான, கிரிசில் ரீசர்ச் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பயணியர் வாகன விற்பனை, கடந்த ஜூலை மாதத்தில், சரிவைக் கண்டுள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதத்திலும், விற்பனையில் சரிவு இருக்கும்.சில்லரை விற்பனையில் உள்ள மந்தமான சூழல், வாகன இருப்பு நிலவரம் ஆகியவை வாகன தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை உருவாக்கும்.
மாருதி சுசூகி, ஹூண்டாய் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்கள், கடந்த ஜூலை மாதத்தில், இரட்டை இலக்க வீழ்ச்சியை சந்தித்துள்ளன.வாடிக்கையாளர்களி டம் வாங்கும் ஆர்வம் குறைந்த காரணத்தினால் இத்தகைய சரிவு ஏற்பட்டுள்ளது.ஜூலை மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, கடந்த ஆண்டு ஜூலை மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, 27 சதவீதம் முதல், 31 சதவீதம் வரை சரிவைக் காணும் என கணிக்கப்பட்டிருந்தது.
இந்த கணிப்பானது, முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களான, மாருதி சுசூகி, ஹூண்டாய், மகிந்திரா ஆகிய நிறுவனங்களின் விற்பனை செயல்திறன் அடிப்படையில் உருவானதாகும். மாருதி சுசூகி, ஹூண்டாய், மகிந்திரா அண்டு மகிந்திரா ஆகிய நிறுவனங்கள், நாட்டில், மொத்தம் தயாராகும் வாகனங்களில், 75 முதல் 77 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டு உள்ளன.
இருப்பை சரிசெய்வதற்காக, உற்பத்திக் குறைப்பை இந்நிறுவனங்கள் மேற்கொண்டன. வாகன விற்பனை சரிந்ததால், வாகன தயாரிப்பு நிறுவனங்கள், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், 11 சதவீதம் அளவுக்கு, உற்பத்தியை குறைத்துவிட்டன.இதன் தொடர்ச்சியாக, ஜூலை மாதத்திலும் உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கின. ஆகஸ்ட் மாத விற்பனையும் குறையும் என்பதால், சரக்கு இருப்பு நாட்கள், இயல்பு நிலையான, 30 – 35 நாட்கள் என்ற நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணியர் வாகன பிரிவில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஜூலை 31ம் தேதி நிலவரப் படி, 15 சதவீத அளவுக்கு உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.எஸ்.யு.வி., எனும் பயன்பாட்டு வாகனங்களைப் பொருத்தவரை, உற்பத்தி குறைப்பு, 2 சதவீதமாக இருக்கிறது.நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் தேவையும் குறைந்துள்ளது. இத்தகைய வாகனங்களை வாங்குவதற்கான கடனுதவி கிடைப்பது குறைந்து விட்டது இதற்கு முக்கிய காரணமாகும்.
இலகு ரக வர்த்தக வாகனங்களின் தேவை குறைந்ததற்கு, கிராமப்புறங்களில் தேவை மற்றும் கடனுதவி ஆகியவை குறைந்தது முக்கிய காரணங்களாகும்.இருசக்கர வாகன விற்பனையை பொருத்தவரை, தொடர்ந்து ஆறு மாதங்களாக, சரிவு ஏற்பட்டு வருகிறது. ஜூலை மாதத்தில், பஜாஜ், டி.வி.எஸ்., ஆகியவை, 13 மற்றும் 15 சதவீத சரிவை கண்டுள்ளன.புதிய வாகனங்களுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு, பணப்புழக்கம் குறைவு உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திலும் வாகன விற்பனை பாதிக்கப்படும். இருப்பினும், புதிய, ’பாரத் ஸ்டேஜ் 6’ வாகன அறிமுகங்கள், செப்டம்பரில் துவங்கும் பண்டிகை காலம் ஆகியவை காரணமாக, முந்தைய மாதங்களை விட முன்னேற்றம் காண வாய்ப்புள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|