பதிவு செய்த நாள்
04 ஆக2019
23:54
கச்சா எண்ணெய்
கடந்த வாரம், கச்சா எண்ணெய் விலை, வாரத்தின் முதல் மூன்று நாட்கள் அதிகரித்து, வர்த்தகமாகி வந்தது. இருப்பினும், கடந்த வியாழனன்று, கச்சா எண்ணெய் விலை, கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர், டிரம்பின் அறிக்கையே இதற்கு காரணமாக அமைந்தது.
அமெரிக்க அதிபர், டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரியை, 10 சதவீதம் அதிகரித்து அறிவித்தார். இதன் மொத்த மதிப்பு, 300 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.டிரம்பின் இந்த அறிவிப்பு காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே, மீண்டும் வர்த்தக மோதல் ஆரம்பிக்கும் என்ற கண்ணோட்டத்திலும், இது பொருளாதார வளர்ச்சியை, கடுமையாகப் பாதிக்கும் என்ற எண்ணத்தினாலும், கச்சா எண்ணெய் விலை சரிந்தது.
இருப்பினும், கடந்த வார இறுதியில், சர்வதேச எரிசக்தி அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவர அடிப்படையில், உலக நாடுகளின் கச்சா எண்ணெய் தேவை குறைந்து, அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி அதிகரித்து வருவது தெரியவருகிறது.
இத்தகைய சூழலில், அடுத்த ஒன்பது மாதங்களில், தேவைக்கு அதிகமான உற்பத்தி ஏற்பட்டு, நாடுகளின் இருப்பு அதிகமாகும் என்று அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது. எண்ணெய் உற்பத்தி நாடுகள், இதனை கருத்தில் கொண்டு, உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சந்தையில், சீரான போக்கிற்கு வழிவகுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓபெக் நாடுகளின் எண்ணெய் தேவையானது, 2020ம் ஆண்டில் குறைந்து, 28 மில்லியன் பேரல்களாக இருக்கும் என்றும், தற்போதைய தினசரி மொத்த உற்பத்தி, சுமார் 30 மில்லியன் பேரல்கள் ஆகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக அளவில் எண்ணெய் உற்பத்தியில், அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இரண்டாவதாக, சவுதி அரேபியாவும், மூன்றாவதாக, ரஷ்யாவும் உள்ளது.
அமெரிக்காவில் இயங்கிவரும் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது, 892 குழாய்கள் செயல்பட்டு வருகின்றன. 2015ம் ஆண்டு, மார்ச் மாதத்துக்குப் பிறகு இதுவே அதிகமாகும்.சவுதி அரேபியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் மொத்த உற்பத்தி, ஒட்டுமொத்த உலகின், நுகர்வுத் தேவையில், 60 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.
தங்கம் வெள்ளி
கடந்த வாரம், தங்கம் விலையில், அதிகப்படியான ஏற்ற _ இறக்கங்கள் காணப்பட்டன. ஜூலை 30 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெற்ற அமெரிக்க மத்திய வங்கியின், வட்டி விகித கொள்கை கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதம், எதிர்பார்த்தபடி, 25 புள்ளிகள் குறைக்கப்பட்டன. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக, வட்டிவிகிதம் இப்போது குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தங்கம் விலை சரிய ஆரம்பித்தது.
கடந்த வியாழனன்று, அமெரிக்க அதிபர், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான, இறக்குமதி வரியை அதிகரிப்பதாக அறிவித்தார். இதையடுத்து, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில், தங்கத்தின் விலை அதிகரித்து வர்த்தகமானது.
மேலும், டிரம்பின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக, சந்தையில், அமெரிக்க நாணய குறியீடான, டாலர் இண்டெக்ஸ் குறைந்தது. இதன் காரணமாகவும், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்தது.அமெரிக்காவில், மாதம் ஒரு முறை, முதல் வெள்ளிக்கிழமை அன்று விவசாயம் சாராத அரசு துறைகளில், புதிதாக வேலையில் அமர்த்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
கடந்த ஜூன் மாதத்தில், ஒரு லட்சத்து, 93 ஆயிரம் நபர்கள் வேலையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், ஜூலை மாதத்தில், ஒரு லட்சத்து, 64 ஆயிரம் நபர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், வேலையில்லாதோர் எண்ணிக்கை, எதிர்பார்த்ததைவிட, 3.7 சதவிகிதம் உயர்ந்து இருந்ததால், சந்தையில் அமெரிக்க நாணய குறியீடு வலுவிழந்து, தங்கம் மற்றும் வெள்ளி விலை உயரக் காரணமாக அமைந்தது.
பொதுவாக, வட்டி விகிதமும் தங்கமும் எதிர்மறையான போக்கினை கொண்டவை. வட்டி விகிதம் உயரும்போது, அரசு மற்றும் அரசு சார்ந்த முதலீடுகளில் ஆதாயம் அதிகரிக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் அவற்றில் அதிகம் முதலீடு செய்வார்கள். மாறாக, வட்டி விகிதம் குறையும்போது, முதலீட்டாளர்கள் அதிக லாபமீட்டும் பிறவற்றின் மீது முதலீடு செய்வர். இதில், தங்கத்தின் மீதான முதலீடு முதலிடம் வகிக்கிறது.
செம்பு
செம்பு விலையானது, தொடர்ந்து சரிந்து, வர்த்தகமாகி வருகிறது. சீனாவின் பொருளாதார காரணிகள், எதிர்பார்த்ததை விட குறைவாக வந்துள்ளது. சீனாவின் தொழில்துறை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாகவும், இதன் தொடர்ச்சியாக, தேவை குறையும் என்ற கண்ணோட்டத்தினாலும், விலை சரிவு நிகழ்ந்தது.
நவம்பர் மாதத்தின் தொழில்துறை வளர்ச்சி, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சிறிய அளவிலான உயர்வை கண்டுள்ளது. இந்த ஆண்டைப் பொருத்தவரை, இதுவரை, 14 சதவீதம் அளவுக்கு விலை சரிந்துள்ளது.செம்பு விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான, வர்த்தக மோதலே, முழு காரணமாக இருக்கிறது. காரணம், உலக அளவில், அதிக அளவில் கனிமங்கள் மற்றும் தொழிற்சாலை மூலதனப் பொருட்களை உபயோகிப்பதில், சீனா முதல் இடம் பிடிக்கிறது.
மேலும், இந்நாட்டின் ஏற்றுமதியில் ஏற்படும் ஏற்ற _இறக்கங்களும், கனிமங்களின் விலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|