பதிவு செய்த நாள்
07 ஆக2019
23:24
மும்பை:வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான, ரெப்போ வட்டி விகிதத்தை, 0.35 சதவீதம் குறைத்துள்ளதாக, ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது.இந்த ஆண்டில், நான்காவது முறையாக வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி குறைத்து அறிவித்துள்ளது.இதையடுத்து, வட்டி விகிதமானது, 5.4 சதவீதமாக குறைந்துள்ளது.கடந்த, 2010 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, இது தான் மிகக் குறைவான வட்டி விகிதம்.
ஆதரவு
இதே போல் ரிசர்வ் வங்கி, வங்கிகளிடமிருந்து பெறும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வட்டி விகிதமான, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம், 5.15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில், மொத்தம் உள்ள, ஆறு உறுப்பினர்களில், நான்கு பேர், 0.35 சதவீதத்திற்கு ஆதரவளித்த நிலையில், மீதி இருவர், 0.25 சதவீத வட்டி குறைப்புக்கு ஆதரவளித்தனர்.நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.9 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்து உள்ளது.ஜூன் மாதத்தில், இதுவே, 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து, ரிசர்வ் வங்கியின் கவர்னர், சக்திகாந்த தாஸ் கூறியதாவது:நிதி கொள்கை குழுவானது, வட்டி குறைப்பை பொறுத்தவரை, 0.25 சதவீதம் என்பது போதாது என்றும், 0.50 சதவீதம் என்பது அதிகம் என்றும் கருதியது.எனவே, 0.35 சதவீதமானது சரியாக இருக்கும் என, முடிவு செய்யப்பட்டது.ரிசர்வ் வங்கி, 2006லிருந்து, வட்டி விகிதத்தை, 0.25 சதவீதம் அல்லது, 0.50 சதவீதம் என்பதாகவே மாற்றம் செய்து அறிவித்து வந்தது.
எதிர்பார்ப்பு
தேவை மற்றும் முதலீட்டு மந்தநிலை ஆகியவை வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்து கின்றன.இருப்பினும், இந்த சமயத்தில் ஏற்பட்டிருக்கும் மந்தநிலை என்பது, சுழற்சியில் ஏற்படும் ஒன்று தானே தவிர, வளர்ச்சியை பாதிக்கும் ஆழமான மந்தநிலை அல்ல. பொருளாதார கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. நடப்பு நிதியாண்டின், நான்காவது காலாண்டில், வளர்ச்சி அதிகரிக்கும்.உள்நாட்டு பொருளாதார செயல்பாடுகள் தொடர்ந்து பலவீனமாக உள்ளன.
உலகளவில், பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மற்றும் அதிகரித்து வரும் வர்த்தக பதற்றங்கள், வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.ஒட்டுமொத்த தேவையை அதிகரிப்பதன் மூலம், குறிப்பாக, தனியார் முதலீடுகளுக்கு அதிக முன்னுரிமை வழங்குவதன் வாயிலாக, பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகளை குறைக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலகட்டத்தில், 5.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து உள்ளது.இதையடுத்து, வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட வங்கி கடன்களுக்கான வட்டி, குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ரிசர்வ் வங்கியின், அடுத்த நிதி கொள்கை குழுவின் கூட்டம், அக்டோபர், 1, 3, 4 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
முக்கிய அம்சங்கள்
* ரெப்போ வட்டி விகிதம், 0.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வட்டி விகிதம், 5.40 சதவீதமாக குறைந்துள்ளது
* ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம், 5.15 சதவீதமாக குறைக்கப்பட்டுஉள்ளது நான்கு உறுப்பினர்கள், 0.35 சதவீத குறைப்புக்கும், இரண்டு உறுப்பினர்கள், 0.25 சதவீத குறைப்புக்கும் ஆதரவாக ஓட்டளித்தனர்
* நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பு, 6.9 சதவீதமாக குறைக்கப்பட்டுஉள்ளது
* ஜூன் மாதத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பு, 7 சதவீதமாக இருந்தது நடப்பு நிதியாண்டின், இரண்டாவது அரையாண்டில், சில்லரை விலை பணவீக்கம், 3.5 – 3.7 சதவீதமாக இருக்கும் என்ற இலக்கு அப்படியே தொடர்கிறது
* தேவையை அதிகரிக்கும் பொருட்டு, தனியார் முதலீட்டுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும்
* அடுத்த நிதி கொள்கை குழு கூட்ட முடிவு, அக்டோபர், 4ல் அறிவிக்கப்படும்.
வட்டியை குறைத்தது எஸ்.பி.ஐ.,
ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை, 0.35 சதவீதம் குறைத்து அறிவித்த சில மணி நேரத்திலேயே, நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ., அதன் கடன்களுக்கான வட்டி விகிதத்தில், 0.15 சதவீத குறைப்பை அறிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பு, ஆகஸ்ட், 10ம் தேதி முதல் அமலுக்கு வரும் என, தெரிவித்துள்ளது.
சரிவை சந்தித்த சந்தை
ரிசர்வ் வங்கியின், நிதி கொள்கை குழு கூட்டம் முடிவுற்று, அது குறித்த அறிவிப்புகள் வெளிவந்த நிலையில், பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது.ரிசர்வ் வங்கி, முக்கிய கடன் விகிதங்களை குறைத்த போதிலும், நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்து அறிவித்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ வர்த்தகத்தின் இடையே, 494 புள்ளிகள் அளவுக்கு சரிவை சந்தித்தது.
இறுதியில், 286.35 புள்ளிகள் சரிவுடன், 36690.50 புள்ளிகளில் நிலை பெற்றது.இதே போல், தேசிய பங்குச் சந்தையில், ‘நிப்டி’யும், 92.75 புள்ளிகள் சரிவடைந்து, 10855.50 புள்ளிகளில் நிலை பெற்றது.வாகனம், நிதி, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த பங்குகள், 2.10 சதவீதம் வரை சரிவு கண்டன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|