பதிவு செய்த நாள்
09 ஆக2019
00:16
சென்னை:‘‘நடப்பு 2019 – 20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், சிட்டி யூனியன் வங்கியின், நிகர லாபம், 15 சதவீதம் உயர்ந்து, 186 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,’’ என, வங்கியின் நிர்வாக இயக்குனர், என்.காமகோடி தெரிவித்தார்.
வைப்புத் தொகை
இது குறித்து, சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:நடப்பு, 2019 – 20ம் நிதியாண்டில், சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வணிகம், 15 சதவீதம் உயர்ந்து, 71 ஆயிரத்து, 306 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, 2018 – 19ம் நிதியாண்டில், 61 ஆயிரத்து, 812 கோடி ரூபாயாக இருந்தது.வங்கியின் வைப்புத் தொகை, 16 சதவீதம் உயர்ந்து, 39 ஆயிரத்து, 77 கோடியாக அதிகரித்துள்ளது.
இது, கடந்த ஆண்டில், 33 ஆயிரத்து, 597 கோடி ரூபாயாக இருந்தது. இதே போல, வங்கி வழங்கிய கடன் தொகை, 14 சதவீதம் வளர்ச்சி கண்டு, 32 ஆயிரத்து, 229 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்த ஆண்டில், 28 ஆயிரத்து, 215 கோடி ரூபாயாக இருந்தது.நிகர வட்டி வருவாய், 375 கோடியிலிருந்து, 417 கோடி ரூபாயாக அதிகரித்து, 11 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நிகர லாபம் 162 கோடி ரூபாயிலிருந்து, 186 கோடி ரூபாயாக அதிகரித்து, 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
வாராக்கடன்
‘காசா’ என்ற நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வைப்புத் தொகை, 14 சதவீதம் உயர்ந்து, 9,161 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டில், 8,038 கோடி ரூபாயாக இருந்தது.
மொத்த வராக் கடன், 3.02 சதவீதத்திலிருந்து, 3.34 சதவீதமாக அதிகரித்துள்ளது.நிகர வராக் கடன், 1.70 சதவீதத்திலிருந்து, 1.89 சதவீதமாக அதிகரித்துள்ளது.
முதல் காலாண்டில், வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்காக, தானாக பணம் செலுத்தும் வசதி, சில நாட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இந்த வசதியை வாடிக்கையாளர்கள் தங்களது, மொபைல் வங்கி மற்றும் இணையதள வங்கி சேவை வாயிலாக, செயல்படுத்தி கொள்ள முடியும்.இவ்வாறு, காமகோடி கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|