பதிவு செய்த நாள்
02 செப்2019
00:15
முதல் காலாண்டில், இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம், எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாகவே அமைந்துள்ளது. இதைப் பற்றி பல விதமான கருத்துகளை, நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள்.
இப்போதெல்லாம், செய்தி வந்ததும் தீர்ப்புகள் சரமாரியாக வந்து விடுகின்றன. செய்தியை உள்வாங்குவதற்குள் கருத்து சொல்லி முடித்து விடுவது தான் தற்காலநடைமுறை.இத்தகைய கருத்துகள் வெளிவர, பல சமூக மற்றும் அரசியல் காரணங்கள் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், இது தான் எதார்த்தம். டேட்டா அதாவது தரவு தான் தற்கால அரசியலின் புதிய ஆயுதம்.
தரவுகள் ஆய்வுக்கு உகந்த கருவியாக இருப்பதை கடந்து, கருத்து உருவாக்க கருவியாக மாறி விட்டன. தரவுகள் வெளியான நிமிடங்களில், எதிர்வினைகள் வெளிவருவதும், அவற்றின் மீது விவாதம் நடப்பதும் தான் இன்றைய நிலைமை.அரசுகள் சார்ந்த நம் பொது அபிப்ராயங்களைக் கொண்டு, அவற்றை வடிவமைக்க பலரும் தீவிரமாக முயற்சிக்கின்றனர். குறுகிய காலகட்டத்தில், இது வெற்றிகரமாக நடக்கவும் செய்கிறது. முதலீட்டு உலகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
இது சரியா, தவறா என்பது நமக்கு அவசியம் இல்லை. இது, முதலீட்டுப் பார்வைகளை எப்படி மாற்றுகிறது என்பது தான் நம் புரிதலுக்கு மிக தேவையான ஒன்று.ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்... முதலீட்டாளர்களுக்கு தரவுகள் ஆய்வுப் பொருள் மட்டுமே ஒழியஆயுதம் அல்ல.மேலும், ஒரு சில முக்கிய புரிதல்களுக்கு இப்போது வருவோம். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே, முதலீடு சார்ந்த வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் நம் நாட்டில் இல்லை. நுகர்வு சார்ந்த வளர்ச்சி மட்டுமே கண்டோம்.
இதற்கு தோதாக, பணவீக்கத்திற்கு எதிரான போரிலும், வாராக்கடன்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் நாம் அதிக நேரம் செலவிட்டு விட்டோம்.இப்போது பண வீக்கம் சார்ந்த கவலைகள் வெகுவாக குறைந்துள்ளன. அதே சமயம், நுகர்வு சார்ந்த நம்பிக்கையும் குறைந்து விட்டது. நுகர்வு தொடர்ந்து வளர்ச்சி அடைய தேவையான முதலீடுகள் தான் இப்போதைய அவசர தேவை.
ஆனால், பெருமுதலீடுகள் செய்யக்கூடிய நிலையில், இந்திய நிறுவனங்கள் இல்லை. இதற்கு அவர்களின் தவறான வர்த்தக முடிவுகளும், முன்நடத்தையும் மட்டுமே காரணம். அவர்கள் செய்யத் தவறிய முதலீடுகளை, மற்றவர்களைக் கொண்டு நடத்திக் கொள்ள வேண்டிய இடத்தில் தான் அரசு இருக்கிறது.
இதற்கு அரசு என்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்கிறதா என்பதை தான் ஒவ்வொரு முதலீட்டாளரும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.உற்பத்தி சார்ந்த தொழில்களில் பெரும் முதலீடுகள் அமைய வேண்டும். அன்னிய முதலீடுகள் முன்பு இருந்ததை விட, பல மடங்கு பெருக வேண்டும். உள்நாட்டு சேமிப்புகள், வருங்கால வளர்ச்சிக்கு வழி செய்யும் முதலீடுகளில் செலுத்தப்பட வேண்டும்.
முதலீட்டு தைரியம் பெருக வேண்டும். நுகர்வு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு விரைவாக திரும்ப வேண்டும். அதை ஏற்படுத்தக்கூடிய பொருளாதார முடிவுகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும்.தரவுகள் இது பற்றி நமக்கு தகவல் சொல்லுவதற்குள், சந்தை அதை கடந்து சென்று விடும். நாம் இப்போதைய கொள்கை நடப்புகளை தெளிவாக புரிந்து கொண்டு, சந்தையில் முன்னோடியாக இருக்க வேண்டும்; மெதுவாக சிந்திக்கும் தொண்டராக மாறிவிடக் கூடாது.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
shyamsek@ithought.co.in
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|