பதிவு செய்த நாள்
02 செப்2019
00:21
பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது, வரவேற்பையும், விமர்சனங்களையும் ஒருங்கே பெற்றுள்ளது. இதனால், கிடைக்கப் போகும் நன்மைகள் என்னென்ன?
பொதுத் துறை வங்கிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்து, பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. பெரிய வங்கிகள் தான் வலிமையானவை என்ற எண்ணத்தில் இருந்து இந்தக் கருத்து தொடங்கியது.இதன் தொடர்ச்சியாகத்தான், பாரத ஸ்டேட் வங்கியோடு, ஐந்து துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. அதன் பின், பேங்க் ஆப் பரோடாவுடன், தேனா வங்கியும், விஜயா வங்கியும் இணைக்கப்பட்டன.
இப்போது அடுத்த கட்ட ஒருங்கிணைப்புகளை நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 10 பொதுத் துறை வங்கிகள், 4 வங்கிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.
அர்த்தமென்ன?
இந்த முயற்சியை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? உங்கள் வீட்டில் நீங்கள் மட்டும் சம்பாதிக்கிறீர்கள். நாளைக்கு உங்கள் மகனும், மகளும் கூட வேலைக்குப் போய் சம்பாதிக்கத் தொடங்கும்போது, உங்கள் குடும்ப வருமானம் பன்மடங்குஉயர்ந்துவிடும் அல்லவா?அது மாதிரி தான் இதுவும். ஒரே ஒரு வங்கியின் வரவைக் காட்டிலும், இரண்டு அல்லது மூன்று வங்கிகள் ஒருங்கிணைந்து சம்பாதிக்கும் போது, வரவு அதிகரிக்கத் தொடங்கும் தானே?
வங்கிக் கிளைகள், ஏ.டி.எம்.,கள், பணியாளர் பலம், வசதிகள் ஆகியவை பகிர்ந்துகொள்ளப்படும்போது, ஒருங்கிணைக்கப்பட்ட புதிய வங்கியின் செலவும் கணிசமாகக் குறையும். மொத்த வரவோடு ஒப்பிடும்போது, வாராக்கடன்களின் அளவும் சிறுத்துப் போகும். அது, பெரிய தொகையாகத் தெரியாது. அதுவும் சதவீத கணக்கில் சொன்னால், ஒன்றுமே தெரியாது!
அளவு பெரிதானதால், கூடுதல் கடன் கொடுக்கவும் முடியும். மேலும், அரசாங்கம்மறுமூலதன தொகை கொடுக்கவிருப்பதால், வங்கிகள் புத்துணர்ச்சியோடும் செயல்பட முடியும்.இதுவரைக்கு எல்லாமே சரி. கேள்விகள் இங்கிருந்துதான் தொடங்குகின்றன.
ஏன் இப்போது?
உண்மையில், நம் பொருளாதாரம் பல மட்டங்களில் தத்தளிக்கிறது. நிதி அமைச்சர்ஊடகங்களை சந்திக்கத் தொடங்கியதே, பொருளா தாரச் சீர்திருத்தங்களை அறிவிப்பதற்குத் தான்.இந்நிலையில், வங்கிகள்ஒருங்கிணைப்பு இப்போது எதற்குச் செய்யப்பட வேண்டும்?இப்போது செய்யப்பட வேண்டியது, வங்கிகளுக்கான மறுமுதலீடும், அதன்மூலம், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் தனிநபர்களுக்கான வங்கிக் கடன் வசதி பெருகுவதும் தானே?
சுணங்கிப் போன பொருளாதார சுழற்சியை முடுக்கிவிட வேண்டிய நேரம் இது. வங்கிப் பணியாளர்கள், கடன்களைக் கொடுத்து, சமூகத்தில் பண ஓட்டத்தை அதிகப்படுத்த வேண்டிய தருணம் இது. அதற்கு தற்போது, நன்கு விரிந்து பரந்துள்ள வங்கிக் கிளைகள் தான்அவசியமானவை.
முதலில், இதைச் செய்து, ஓரளவுக்கு பொருளாதார சுழற்சி நிலைபெற்றவுடன், வங்கிகளை ஒருங்கிணைக்கலாமே?இப்போது என்ன நடக்கும் தெரியுமா ? ஒவ்வொரு பணியாளரும் தம்மை வேறு கிளைக்கு மாற்றிவிடுவார்களோ, வேறு ஊருக்கே மாற்றிவிடுவார்களோ என்று யோசிப்பார்கள்.
புதிய ஒருங்கிணைக்கப்பட்ட வங்கியின் காசோலை, கடன் அட்டை இதர வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் முனைப்பில்ஈடுபட்டிருப்பார்கள்.இவர்கள் கடன் கொடுப்பதற்கோ, தொழில் பெருக்கத்துக்கோ துணை நிற்பார்களா என்ன?வேறு சில கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. ஒருங்கிணைப்பதால், வங்கிக் கடன்களின் தரம் உயரப் போகிறதா? சென்ற முறை, பாரத ஸ்டேட் வங்கியோடு, ஐந்து வங்கிகள் இணைக்கப்பட்டன.
அதன் பின்னர், அதன் வாராக்கடனான 1.6 லட்சம் கோடி ரூபாயோடு, இந்த ஜூன் காலாண்டில் இன்னும், 16 ஆயிரத்து, 212 கோடி ரூபாய் கடன் சேர்ந்து கொண்டிருக்கிறது.பேங்க் ஆப் பரோடாவோடு, தேனா வங்கியும், விஜயா வங்கியும் சேர்ந்த பின், அதன் லாபம் ஒன்று உயர்ந்துவிடவில்லை என்பதை முதல் காலாண்டு முடிவு தெரிவிக்கிறது.
மேலும், பெரிய வங்கிகள் என்று பெருமை பேசுகிறோம். அத்தகைய பெரிய வங்கிகளை உருவாக்க, முதலில் வங்கிகளைத் திறம்பட ஒருங்கிணைக்க வேண்டும். எஸ்.பி.ஐ.,க்கு ஒரு அருந்ததி பட்டார்யாவும், பேங்க் ஆப் பரோடாவுக்கு ஒரு பி.எஸ்.ஜெயகுமாரும் கிடைத்தனர்.வங்கித் துறையில் இவ்விருவருக்கும் உள்ள அனுபவத்தாலும் திறனாலும், ஒருங்கிணைப்பு சுமுகமாக முடிவடைந்தது.
அதேபோல், தலைவர்கள் கிடைப்பார்களா? அவர்களைத் தேட என்ன திட்டமிருக்கிறது?வங்கிகள் ஒருங்கிணைப்பை எந்த அடிப்படையில் மேற்கொண்டு இருக்கிறார்கள்?அவர்கள் பயன்படுத்தும், ‘கோர் பேங்கிங் சிஸ்டம்’ ஒன்றானவை என்பதால் இணைக்கப்பட்டிருப்பதாக கருதலாம். ஆனால், ஒவ்வொரு வங்கியும் பெற்றிருக்கும் வாராக்கடன்களை கூட்டிப் பார்க்கும்போது, புதிய பெரிய வங்கிகளும் வழக்கத்தைவிட அதிகமான வாராக்கடன்களோடுதான் இருக்கின்றன.
பொதுத் துறை வங்கிகள் இணைப்பு என்பது நீண்ட நாள் கோரிக்கை. வலுவான வங்கித் துறை நீண்ட நாள் கனவு.அது, இப்போதைக்கு நிறைவேறியிருக்கிறது. ஆனால், இது பொருளாதார சுணக்கத்தை எவ்வளவு துாரம் நீக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி!
ஆர்.வெங்கடேஷ்,பத்திரிகையாளர்
pattamvenkatesh@gmail.com
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|