பதிவு செய்த நாள்
03 செப்2019
02:24
புதுடில்லி, செப். 3–ஆகஸ்ட் மாதத்தில், வாகன விற்பனை சரிந்துள்ளது. நாட்டின் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனையில் சரிவை கண்டுள்ளன.முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களான, ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், மகிந்திரா அண்டு மகிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஹோண்டா’ உள்ளிட்ட நிறுவனங்கள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இரட்டை இலக்க விற்பனை சரிவை கண்டுள்ளன.
மாருதி சுசூகி நிறுவனம், 32.7 சதவீதம் அளவுக்கு விற்பனையில் சரிவை கண்டுள்ளது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இந்நிறுவனம், 1.58 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஆகஸ்டில், 1.06 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.இதே போல் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும், 58 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது.ஹோண்டா கார்ஸ் இந்தியா மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் ஆகிய நிறுவனங்களின் விற்பனையும் முறையே, 51 சதவீதம் மற்றும் 21 சதவீதம் சரிவை சந்தித்துஉள்ளன.‘‘சந்தை நிலைமை, தொடர்ந்து சவாலாகவே இருந்து வருகிறது.
இருப்பினும், நிறுவனம், சில்லரை விற்பனையில் அதிக கவனம் செலுத்துகிறது,’’ என, விற்பனை நிலை குறித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், பயணியர் வாகன வணிகத்தின் தலைவர், மயாங் பரீக் தெரிவித்து உள்ளார்.மாருதி சுசூகி நிறுவனம், ஆகஸ்ட் மாதத்தில், 32.7 சதவீதம் அளவுக்கு விற்பனை சரிவை சந்தித்திருப்பதாகவும், உள்நாட்டு விற்பனை, 34.3 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மகிந்திரா அண்டு மகிந்திராவின், உள்நாட்டு விற்பனை, 26 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது.இந்நிறுவனத்தின் பயணியர் வாகன விற்பனை, 32 சதவீத சரிவை கண்டுள்ளது. வர்த்தக வாகன பிரிவும், 28 சதவீத சரிவை சந்தித்துள்ளது.‘வாடிக்கையாளர்களிடம் வாங்கும் எண்ணம் குறைந்துவிட்டதால், வாகனங்கள் துறை, அதிகளவிலான விற்பனை சரிவை தொடர்ந்து சந்தித்து வருகிறது’ என கருத்து தெரிவித்துள்ளார், ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் துணைத் தலைவர், ராஜேஷ் கோயல்.ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் விற்பனையும், 16.58 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. டொயோட்டா காரின் உள்நாட்டு விற்பனை, 24 சதவீதம் குறைந்துவிட்டது.
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜா, ‘‘நுகர்வோர் வாங்கும் எண்ணம் குறைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் வாகனங்களை வாங்குவதை தள்ளிப் போடுகின்றனர்.‘‘இருப்பினும், கார் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கும், ஒரு முறை பதிவுக் கட்டணத்தை ஒத்தி வைக்கவும், புதிய வாகனங்களை அரசு துறைகள் வாங்கவும் தேவையான நடவடிக்கைகளை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்திருக்கிறார். இது, துறைக்கு தற்போது தேவையான நிவாரணமாகும்,’’ என, தெரிவித்துஉள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|