பதிவு செய்த நாள்
03 செப்2019
02:28
புதுடில்லி:நாட்டின், தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தில், 15 மாதங்களில் இல்லாத வகையில், சரிவை சந்தித்துள்ளது.விற்பனை, உற்பத்தி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையால், நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தில், சரிவை சந்தித்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களின், ஆகஸ்ட் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:ஆகஸ்ட் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி குறித்த, பி.எம்.ஐ., குறியீடு, 51.4 புள்ளிகளாக சரிந்துள்ளது.
இது, 2018, மே மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட குறைந்த அளவாகும். 2018, மே மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 52.5 புள்ளிகளாக இருந்தது.கடந்த ஜூலை மாதம் முதலாகவே, பெரும்பாலான அளவீட்டுக்கான குறிகாட்டிகள் வீழ்ச்சியடைந்ததால், உற்பத்தி வளர்ச்சி, தன் வேகத்தை இழந்துள்ளது.பி.எம்.ஐ., குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.பி.எம்.ஐ., குறியீடு, தொடர்ந்து, 25வது மாதமாக, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி, வேலைவாய்ப்பு, புதிய ஆர்டர்கள் ஆகிய முக்கியமான, பி.எம்.ஐ., குறியீடுகள் சரிவடைந்து உள்ளன.நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதலாவது காலாண்டில், ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில், 5 சதவீதமாக சரிவை கண்டுள்ளது.
இதற்கு, உலகளாவிய பொருளாதார நிலையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளும், நுகர்வு தேவையில் ஏற்பட்டுள்ள சரிவும், தனியார் முதலீடுகள் குறைந்ததும் காரணமாக அமைந்தது.
இந்நிலையில், பி.எம்.ஐ., குறியீட்டு வளர்ச்சியும் மந்த நிலையை கண்டுள்ளது.ஆகஸ்ட் மாதத்தில், 15 மாதங்களில் இல்லாத வகையில் விற்பனை வளர்ச்சியும் குறைந்துள்ளது. மேலும், உற்பத்தி வளர்ச்சியும், வேலைவாய்ப்பு உருவாக்கமும் குறைந்துள்ளது.இவை எல்லாவற்றையும் விட, 2018 மே மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக, ஆகஸ்ட் மாதத்தில் தொழிற்சாலைகள், உற்பத்திக்கு தேவையான உள்ளீட்டு பொருட்களை வாங்குவதும் குறைந்துஉள்ளது.
தொழிற்சாலைகள், உற்பத்திக்கான உள்ளீட்டு பொருட்களை வாங்குவது குறைந்ததற்கு காரணம், இருப்பை வேண்டுமென்றே குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்ததும், கிடைக்கக்கூடிய நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டதும் தான்.சந்தையில் இருக்கும் போட்டி தரும் அழுத்தங்கள் மற்றும் சவாலான சந்தை நிலைமைகள், உயர்வை கட்டுப்படுத்துவதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் ஆர்டர்களின் வளர்ச்சியும் மெதுவான விகிதத்திலேயே இருந்தது.
உள்நாட்டு, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கான விற்பனை குறைந்தது மட்டுமின்றி, போதுமான நிதி கிடைப்பதிலும் சிக்கல்கள் இருந்துள்ளது, ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் காரணமாக, தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, வரும் மாதங்களில் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கலாம்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் மாதத்தைப் பொறுத்தவரை, பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை மற்றும் தொழில் துறையில் ஏற்பட்ட அதிக விலை பணவீக்க அழுத்தம் ஆகிய இரண்டும் சேர்ந்ததால், இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.– பாலியானா டி லிமா, தலைமை பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்கிட்.
முக்கிய எட்டு துறைகள்நாட்டின், முக்கிய எட்டு தொழில் துறைகளின் வளர்ச்சி, கடந்த ஜூலை மாதத்தில், 2.1 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு, ஜூலையில், 7.3 சதவீதமாக இருந்தது. இருப்பினும், கடந்த, ஜூன் மாதத்தில், 50 மாத குறைவாக இருந்த, 0.2 சதவீதத்தில் இருந்ததை விட இது அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|