பதிவு செய்த நாள்
03 செப்2019
23:33
புதுடில்லி:மும்பை பங்குச் சந்தை குறியிட்டு எண், ‘சென்செக்ஸ்’ நேற்று, 770 புள்ளிகள் சரிவடைந்தது.
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ 770 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண், ‘நிப்டி’, 225 புள்ளிகளும் சரிந்தன.
அதிகம் பாதிப்பு
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்தது, முக்கியமான துறைகளின் வளர்ச்சி சரிந்தது, வாகன விற்பனையில் சரிவு ஏற்பட்டது போன்ற நிலைமைகள், நேற்று சந்தையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின.வர்த்தகத்தின் இடையே, 867 புள்ளிகள் வரை சரிந்த, ‘சென்செக்ஸ்’, வர்த்தக இறுதியில், 769.88 புள்ளிகளாக குறைந்து, 36,592.91 புள்ளிகளில் நிலைபெற்றது.
இதேபோல, ‘நிப்டி’யும், 2.04 சதவீதம் சரிவு கண்டு, 225.35 புள்ளிகளை இழந்து, வர்த்தக முடிவில், 10,797.90 புள்ளிகளில் நிலைபெற்றது.நேற்றைய பங்கு வர்த்தகத்தில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, டாடா ஸ்டீல், வேதாந்தா, எச்.டி.எப்.சி., இண்டஸ் இண்ட் பேங்க், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட நிறுவனங்கள், அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின. இவை, 4.45 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.
டெக் மகிந்திரா, எச்.சி.எல்., டெக் ஆகிய இரு தகவல் தொழில்நுட்ப துறை பங்குகள் மட்டும், ரூபாயின் மதிப்பு குறைந்ததை அடுத்து, ஓரளவு விலை அதிகரித்தன.ரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிராக, 97 பைசா குறைந்து, 9 மாதங்களில் இல்லாத வகையில், 72.39 ரூபாயாக ஆனது.கிட்டத்தட்ட அனைத்து துறை பங்குகளுமே நேற்று சரிவைச் சந்தித்தன.
மாறாக, ஐ.டி.பி.ஐ., வங்கி பங்குகள் மட்டும், 8 சதவீதம் அளவுக்கு விலை அதிகரித்தது. ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு, மத்திய அரசும், எல்.ஐ.சி., நிறுவனமும் இணைந்து, 9,300 கோடி ரூபாய் மூலதன உதவி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.இதனையடுத்து, இந்நிறுவன பங்குகள் விலை, 7.66 சதவீதம் அதிகரித்து, மும்பை பங்குச் சந்தையில், 28.80 ரூபாயாக நிலைபெற்றது.
வர்த்தக மோதல்
முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5 சதவீதமாக குறைந்தது, வாகன விற்பனை, ஆகஸ்ட் மாதத்தில் சரிந்தது, முக்கியமான தொழில்துறைகளில், ஜூலை மாதத்தில் ஏற்பட்ட சரிவு, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட உள்நாட்டு காரணங்களாலும், உலக வர்த்தக மோதல் போக்கு காரணமாகவும், முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்றனர். இதன் காரணமாக சந்தையில் சரிவு ஏற்பட்டது.
மேலும், வங்கிகள் இணைப்பு குறித்த அரசின் அறிவிப்பால் அத்துறையை சேர்ந்த பங்குகளும் சரிவை சந்தித்தன. இணைப்பு அறிவிப்பால், பொதுத்துறை வங்கிகளின் பங்குகள், 10.6 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டன.குறிப்பாக, கனரா வங்கி, 1.59 சதவீதமும், இந்திய யூனியன் வங்கி, 9.08 சதவீதமும், பஞ்சாப் நேஷனல் வங்கி, 8.55 சதவீதமும் சரிவைக் கண்டன.
ஒரே நாளில்...
இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவினால், முதலீட்டாளர்கள், நேற்று ஒருநாளில் மட்டும், 2.25 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர். ‘சென்செக்ஸ்’ தொகுப்பில் உள்ள, 30 பங்குகளில், 27 பங்குகள் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள, 1,613 பங்குகள் சரிவையும், 817 பங்குகள் லாபத்தையும் சந்தித்தன. 178 பங்குகள் எந்த மாற்றமில்லாமல் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|