பதிவு செய்த நாள்
08 செப்2019
23:57
சொத்து ஒதுக்கீடு என்பது, ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை நிதிக் கட்டுப்பாடு. இதுவே, ஒவ்வொரு சொத்து வகையையும், நாம் நேர்த்தியாக கையாள உதவும் சிறந்த முதலீட்டு வழிமுறை. இதன் மூலம், நம் சேமிப்பை சிறந்த வழியில் முதலீடு செய்து, எந்த ஒரு சொத்து வகையும், மொத்த சொத்து வளர்ச்சியை பாதிக்காத வண்ணம், ஒதுக்கீடு செய்ய நம்மால் முடியும்.
பொதுவாக, இந்திய முதலீட்டு முறையில் மிகவும் கவலைக்கிடமான அம்சமே, இந்த சொத்து ஒதுக்கீடு தான். லாப வளர்ச்சி தரும் சொத்து வகை எதுவோ, அதில் மட்டுமே பெரும் பகுதியை முதலீடு செய்வதே, பலரின் நிதி பிரச்னைகளுக்கு முக்கிய காரணம்.இதனால், மற்ற சொத்து வகைகளில் போதிய முதலீடு செய்ய, நம்மில் பெரும்பாலானோர் தவறி விடுகிறோம். எதிர்காலத்தில், அந்த இதர சொத்துக்கள், நல்ல வளர்ச்சி காணும் போது, நம்மிடம் போதிய அளவு முதலீடு இல்லாமல் போய் விடும்.
அப்படி நடக்காமல் இருக்க, நமக்கு இருக்கும் முக்கிய கருவி தான் நிதி ஒதுக்கீடு. இந்த வழிமுறை மட்டுமே, நம் சொத்து ஒதுக்கீடுகள் தொடர்ந்து சரியாக அமைய உதவும்.இந்த கட்டுப்பாடு, வெவ்வேறு சொத்துக்களையும் வகைப்படுத்தி, ஒவ்வொரு சொத்து வகைக்கும் அளவுகோல் கொண்டு, நிதி ஒதுக்கீடு செய்து, நம் நிதி மேலாண்மை சிறக்க உதவும்.வீடு, நிலம், தங்கம், வைப்பு கணக்கு, நேரடி பங்கு முதலீடு, மியூச்சுவல் பண்டு முதலீடு, காப்பீடு முதலீடு ஆகியவை, நாம் முதலீடு செய்யும் முக்கிய வகைகள்.
இவற்றில், வீடு மற்றும் நிலம் ஆகியவை தவிர்த்து, மற்ற சொத்துக்களை, நம்மால் எளிதில் பணமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்படி எப்போது வேண்டுமானாலும் பணமாக மாற்றக் கூடிய சொத்துக்களை அதிகம் வைத்திருப்பது எப்போதுமே நல்லது.இந்திய முதலீட்டாளர்கள் எளிதில் பணமாக மாற்றக்கூடிய சொத்துக்களாக அதிகம் வைத்திருப்பது, தங்கமும், வங்கி வைப்புக் கணக்கும் தான். இவ்விரண்டில், தங்கத்தின் மீதான முதலீடுகள் நல்ல லாபம் ஈட்டியுள்ளன. தற்போது, வரலாறு காணாத விலை வளர்ச்சியை, தங்க முதலீடுகள் கண்டு வருகின்றன.
ஆனால், இனி வரும் காலங்களில், வைப்புக் கணக்கு முதலீடுகள் அதிக வருவாய் தரக்கூடிய வாய்ப்புகள் குறைவு. பங்குகளும், மியூச்சுவல் பண்டு முதலீடுகளும் கடந்த, 17 மாதங்களாக லாபம் ஈட்டத் தவறிவிட்டன. இத்தகைய சூழலில், நம் முதலீட்டு ஆர்வம், லாபம் ஈட்டாத சொத்துக்களை தவிர்த்து, அதிக லாபம் தரும் சொத்துக்களில் மட்டும் முதலீடு செய்யத் துாண்டும்.
ஆனால், அது நல்ல சொத்து ஒதுக்கீடு வழி முறைகளுக்கு நேர் எதிரானது.நல்ல சொத்து ஒதுக்கீடு வழிமுறையை கடைப்பிடிப்பவர்கள், ஒவ்வொரு சொத்து வகையிலும், குறிப்பட்ட அளவு முதலீடு செய்து, எந்த ஒரு சொத்து வகையிலும் மிக அதிகமான அளவு ஒதுக்கீடு ஏற்படாத வகையில், முதலீடு களை சமமான முறையில் மேலாண்மை செய்வர்.அப்படிச் செய்வது, பிற்காலத்தில் எந்த ஒரு சொத்து வகையிலாவது ஏற்படும் வீழ்ச்சிகள் நம்மை அதிகம் பாதிக்காத வகையில் உதவும்.
பங்குச் சந்தை சரிந்து இருக்கும் நேரங்களில் தொடர்ந்து முதலீடு செய்யவும், சொத்து ஒதுக்கீடு முறைகள் பெரிதும் உதவும். இவற்றை புரிந்து கொண்டு முதலீடு செய்வதே, இப்போதைய முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
பங்கு சந்தை ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
shyamsek@ithought.co.in
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|