பதிவு செய்த நாள்
09 செப்2019
00:18
கடன்களுக்கான வட்டி விகிதம், வெளிப்புற விகிதத்துடன் இணைக்கப்பட உள்ள நிலையில், கடன்தாரர்கள் செலுத்தும் மாதத்தவணையிலும், இது, தாக்கம் செலுத்தும்.
அக்டோபர் மாதம் முதல், வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்து வகை வங்கி கடன்களும், வெளிப்புற விகிதங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம், மூன்று மாத அல்லது ஆறு மாத கால அரசு பத்திரத்தின் பலன்மற்றும் ‘பைனான்சியல் பெஞ்ச்மார்க்ஸ்’ இந்தியா நிறுவனம் வெளியிடும் ஏதேனும் ஒரு சந்தை வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டு கணக்கிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் விகித முறை
வங்கிகள் தற்போது, எம்.சி.எல்.ஆர்., விகிதத்தில் கடன் வழங்கி வருகின்றன. அதற்கு முன் பேஸ்ரேட் விகிதத்தில் கடன் வழங்கப்பட்டன. கடன் விகித மாற்றத்தின் பலன் வாடிக்கையாளர்களுக்கு சென்றடைவ தில்லை என கருதப்பட்டதால், ரிசர்வ் வங்கி தொடர்ந்து மாற்றங்களை செய்து வருகிறது.
அண்மையில் பல்வேறு வங்கிகள், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், அக்டோபர் மாதம் முதல், அனைத்து வகை கடன்களும், ரெப்போ விகிதம் உள்ளிட்ட வெளிப்புற வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இதன் விளைவாக, அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், கடன்களை வெளிப்புற வட்டி விகிதத்துடன் இணைக்க வேண்டும். அனைத்து புதிய கடன்களுக்கும் இது பொருந்தும். ஏற்கனவே, எம்.சி.எல்.ஆர்., உள்ளிட்ட முறைகளில் பெறப்பட்ட கடன்களை பொருத்தவரை, அவை முடியும் காலம் வரை அதே முறை பொருந்தும். எனினும், வாடிக்கையாளர்கள் விரும்பினால், புதிய கடன் விகித முறைக்கு மாறிக்கொள்ளலாம். புதிய கடனுக்கான வட்டி விகிதம் வசூலிக்கப்படும்.
எனினும், வங்கிகள் குறிப்பிட்ட கடன் வகையில் சீரான வட்டி விகிதத்தை கடைப்பிடிக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால், கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. கடன்களுக்கான மாதத்தவணையை பொருத்தவரை, வட்டி விகிதம் ரிசெட் செய்யப்படுவதற்கு ஏற்ப அது அமையும்.
அதாவது வட்டி விகிதம் மாற்றப்படுவதற்கான கால அளவிற்கு ஏற்ப இது அமையும். வங்கிகள், குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் வட்டி விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வெளிப்புற வட்டி விகிதம் மாறினால், மூன்று மாத காலத்திற்குள் கடன் வட்டி விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
மாதத் தவணை மாற்றம்
ரிசர்வ் வங்கி உத்தரவு படி, வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுவதற்கான காலம், மூன்று மாதம் அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குள் ஒரு முறைக்கு மேலும் மாற்றி அமைக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படுவதற்கு ஏற்ப, கடனுக்கான மாத தவணை அமையும். அதே போல, கடன் மீதான, ‘ஸ்பிரெட்’ எனப்படும் கூடுதல் வட்டி விகிதத்தை வங்கிகளே நிர்ணயிக்கலாம்.
ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடனில், முன்கூட்டியே செலுத்துவதற்கு அபராதம் இல்லை என்பதால், கடன்தாரர், வட்டி விகிதம் அதிகமாக இருப்பதாக நினைத்தால், கடனை முன்கூட்டியே செலுத்தி வெளியேறலாம். இதற்காக குறைந்த வட்டி விகிதம் அளிக்கும் வேறு ஒரு வங்கியிலும் கடன் பெறலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|