பதிவு செய்த நாள்
13 செப்2019
23:28
புதுடில்லி:தொழில் துறை உற்பத்தி குறைவு, பணவீக்க நிலை ஆகியவற்றின் காரணமாக, ரிசர்வ் வங்கி, மீண்டும் ஒரு முறை வட்டி குறைப்பை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி, வழக்கமாக அதன் நிதிக் கொள்கை கூட்டத்தின் முடிவில், வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிடும்.அந்த வகையில், வரும் அக்டோபர், 4ம் தேதியன்று, நிதிக் கொள்கை குழு கூடி, முடிவை அறிவிக்க இருக்கிறது. அதில், வட்டி விகிதத்தை குறைத்து அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
எதிர்பார்ப்பு
உலக மற்றும் உள்நாட்டு தரகு நிறுவனங்கள், மிதமான பணவீக்கம் மற்றும் தொழில் துறையில் உற்பத்தி குறைவு ஆகியவை காரணமாக, நிதிக் கொள்கை குழு இம்முடிவுக்கு வரும் என, கணித்துள்ளன.அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, ஆகஸ்ட் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், ஜூலை மாதத்திலிருந்து சிறிது அதிகரித்து உள்ளது.
ஜூலை மாதத்தில், 3.15 சதவீதமாக இருந்த சில்லரை விலை பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில், 3.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த உயர்வுக்கு, உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.இதேபோல், கடந்த ஜூலை மாதத்துக்கான தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 4.3 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது. இதற்கு, தயாரிப்பு துறையில் வளர்ச்சி குறைவு ஏற்பட்டதே முக்கிய காரணமாகியுள்ளது.
இது குறித்து, ஜப்பானைச் சேர்ந்த, நிதி சேவை நிறுவனமான, ‘நோமுரா’ கூறியுள்ளதாவது: கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம் மற்றும் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியில் காணப்பட்டு உள்ள சரிவு ஆகியவை காரணமாக, ரிசர்வ் வங்கி, அக்டோபரில் வட்டி விகிதத்தை குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.நாங்கள், 0.40 சதவீதம் அளவுக்கான வட்டி விகித குறைப்பை எதிர்பார்க்கிறோம்.
ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.9 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. ரிசர்வ் வங்கி, மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதை இது காட்டுகிறது.ஆனால், அக்டோபர், 4ல் நடைபெறும் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எதிர்பார்ப்பு, 6.9 சதவீதத்திலிருந்து மேலும் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.இவ்வாறு, நோமுரா கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கி, வட்டி விகித குறைப்பை அறிவிக்குமா என்பது குறித்து, ‘பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:வட்டி விகிதம்அக்டோபர், 4ல், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, 0.50 சதவீதம் வரை, ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.இவ்வாறு அது தெரிவித்துள்ளது.
உள்நாட்டு நிறுவனமான, ‘கோட்டக் செக்யூரிட்டீஸ்’ நிறுவனமும், ‘சில்லரை விலை பணவீக்கம் அண்மைக் காலத்திலும் பலவீனமாக இருக்கும் என்பதால் வளர்ச்சி குறையும். எனவே, நிதிக் கொள்கை குழுவினர், நடப்பு நிதியாண்டில், மீதமுள்ள காலத்தில், 0.75 சதவீதம் வரை வட்டி குறைப்பை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அக்டோபரில், 0.40 சதவீதம் அளவுக்கு வட்டி குறைப்பை, ரிசர்வ் வங்கி அறிவிக்கலாம்’ என, தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கி, ஏற்கனவே தொடர்ந்து நான்கு முறை, 1.10 சதவீதம் அளவுக்கு நடப்பு ஆண்டில் வட்டி குறைப்பை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டில், மீதமுள்ள காலத்தில், 0.75 சதவீதம் வரை வட்டி குறைப்பை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அக்டோபரில், 0.40 சதவீதம் வட்டி குறைப்பை அறிவிக்கலாம்
-கோட்டக் செக்யூரிட்டீஸ்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|