பதிவு செய்த நாள்
15 செப்2019
23:59
பொது துறை வங்கிகள் இணைப்பு, வாடிக்கையாளர் சேவை மீது எந்த வகையில் தாக்கம் செலுத்தும் என அறிந்து கொள்வது அவசியம்.
நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த சீர்திருத்தமான வங்கிகள் இணைப்பு செயல்வடிவம் பெற்று
உள்ளது. பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கை குறைக்கப்படும் என, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்த நிதியாண்டுக்குள், 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு, நான்கு பெரிய வங்கிகளாக உருவாக்கப்பட உள்ளன. இந்த இணைப்பு, வங்கிகளின் செயல்திறனை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகள் இணைப்பால் ஏற்படக்கூடிய தாக்கம், பலன்கள் தொடர்பாக தீவிர விவாதம்
நடைபெற்று வந்தாலும், சேவைகள் நோக்கில் எந்த வகையான தாக்கம் ஏற்படும் என்பதே, வாடிக்கையாளர்கள் மனதில் உள்ள கேள்வியாக இருக்கிறது.
புதிய கணக்கு எண்
இணைக்கப்பட உள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு, இந்த இணைப்பு நிச்சயம்
தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், இந்த தாக்கம் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என, வல்லுனர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இணைப்பால் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட வழிவகுத்தாலும், சேவையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இணைப்பில், எந்த வங்கியுடன் மற்ற வங்கிகள் இணைக்கப்படுகிறதோ அந்த வங்கி பிரதான வங்கி என கருதப்படும். அதனுடன் இணைபவை, இணைக்கப்படும் வங்கிகளாக கருதப்படும்.
இந்த வங்கிகளின் செயல்பாடுகள் பிரதான வங்கியிடம் வழங்கப்படும். இணையும்
வங்கியின் வாடிக்கையாளர்களுக்கே தாக்கம் அதிகமாக இருக்கும்.இணைப்பு காரணமாக, வாடிக்கையாளர்கள் உடனடியாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. எனினும், கணக்குகள் இணைக்கப்படுவதால், வருங்காலத்தில் புதிய கணக்கு எண் வழங்கப்படலாம்.
எனவே, இணைப்பு தொடங்கு வதற்கு முன், வங்கியிடம் சரியான தொடர்பு முகவரி மற்றும் ‘இ – மெயில்’ சமர்ப்பிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், பில் கட்டணம், முதலீடு தொகை போன்றவற்றுக்கான தானியங்கி வசதி தொடர்வதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வங்கி கணக்கு எண்ணுடன், ஐ.எப்.எஸ்.சி., குறியீடு எண் வழங்கப்பட்டிருக்கும். இணைப்புக்கு பின், புதிய குறியீடு வழங்கப்பட்டால், பரிவர்த்தனைகளில் அதை ‘அப்டேட்’ செய்ய வேண்டும். வருமான வரித்துறை துவங்கி, என்.பி.எஸ்., திட்ட முதலீடு வரை இதை, ‘அப்டேட்’ செய்ய வேண்டும்.
வட்டி விகிதம்
சில ஆண்டுகளுக்கு முன், ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்ட போது, 1,300 கிளைகளின் பெயர்கள் மற்றும் ஐ.எப்.எஸ்.சி., குறியீடு மாற்றப்பட்டன.
பழைய காசோலைகள் பயன்படுத்த, ஆறு மாதம் முதல், ஓராண்டு வரை அவகாசம்
அளிக்கப்படலாம். ‘கிரெடிட்’ அல்லது ‘டெபிட் கார்டு’களை ஒப்படைத்து புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளும் நிலை வரலாம்.
வங்கியில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களை பொறுத்தவரை, வட்டி விகிதம் உயர வாய்ப்பில்லை. ஏற்கனவே கடன் பெற்றுள்ள விகிதமே தொடரும். கடன் மாற்றப்பட்டு, தொடர்ந்து மாதத்தவணை செலுத்த வேண்டிஇருக்கும். வட்டி விகித மாற்றம் தொடர்பாக மேலும் தெளிவான புரிதல் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|