பதிவு செய்த நாள்
16 செப்2019
00:06
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ கடந்த வாரம், 800 புள்ளிகள் உயர்ந்தும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண், ‘நிப்டி’ 300 புள்ளிகள் உயர்ந்தும் வர்த்தகமாகின.
கடந்த வாரம் ஆரம்பம் முதலே, பங்குச் சந்தைகள் உயர்ந்து வர்த்தகம் ஆகி வந்தன. இந்நிலையில், கடந்த வியாழன் அன்று, சில்லரை விலை பணவீக்க விகிதம் மற்றும் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி ஆகியவை குறித்த விபரங்கள் வெளியாகின. ஜூலை மாதத்தை விட, ஆகஸ்ட் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்து, 3.21 சதவீதமாக இருந்தது. மேலும், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, ஜூன் மாதத்தைக் காட்டிலும், ஜூலை மாதத்தில் குறைந்து, 4.3 சதவீதமாக இருந்தது.
இதையடுத்து, அன்று சந்தைகள் சரிந்து வர்த்தகம் ஆனபோதிலும், வார இறுதி நாளில், அடுத்த மாதம் நடைபெற உள்ள, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், வட்டி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவானதால், பங்குச் சந்தைகள் உயர்ந்தன.
அமெரிக்க – சீன நாடுகளுக்கு இடையே, சமீப காலமாக இருந்து வரும் வர்த்தக மோதல் குறித்து, இரு நாட்டு பிரதிநிதிகளும் சந்தித்து, பேச்சு நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. இதனால், சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் உயர்வு ஏற்பட்டது. இதுவும், இந்திய பங்குச் சந்தைகளுக்கு சாதகமாக அமைந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின், மத்திய வங்கி, தன் டெபாசிட் வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்தது. மேலும், அரசு கருவூலங்கள் மூலம், நவம்பர் மாதம் முதல், கொள்முதல் நடவடிக்கைகளை அதிகம் மேற்கொண்டு, பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் மத்திய வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாகவும், சர்வதேச சந்தைகளில் உயர்வு காணப்பட்டது.
டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த வாரம் உயர்ந்ததாலும், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாகவும், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டன.
மேலும், கடந்த வாரம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத் துறை வங்கிகளுக்கு மறுசீரமைப்புக்காக மூலதன உதவி வழங்கப்படும் என, அறிவித்திருந்தார். இதன் காரணமாக, வங்கி பங்குகள் உயர்ந்து வர்த்தகம் ஆகின.தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள, துறை சார்ந்த குறியீட்டு எண்கள் மொத்தம், 11. இவற்றில், 10 குறியீடுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ‘நிப்டி ரியாலிட்டி இன்டெக்ஸ்’ 1.5 சதவீதம் உயர்ந்திருந்தது.
கடந்த வாரம், பன்னாட்டு நிதியம், இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து, தன் கருத்துக்களை மாற்றி அறிவித்துள்ளது. அதாவது, கடந்த ஜூலையில், பன்னாட்டு நிதியம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில், 7 மற்றும் 7.2 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. இந்நிலையில் தற்போது, அந்த கணிப்பிலிருந்து, 0.3 சதவீதம் குறைத்து மதிப்பிட்டு அறிவித்துள்ளது.
மேலும், வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடு, சீனா என்றும், அதற்கு அடுத்தபடியாக, இந்தியா உள்ளதாகவும் பன்னாட்டு நிதியம் குறிப்பிட்டுள்ளது.அமெரிக்க மத்திய வங்கியின், வட்டி விகிதம் குறித்த கூட்டம், இந்த வாரம், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் வெளியாகும் அறிவிப்புகள், சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சரிந்து வரும் வாகன விற்பனை காரணமாக, வாகன துறை, கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக, அத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், வாகன தயாரிப்பாளர்கள், ஜி.எஸ்.டி., யை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.வரும், 20ம் தேதியன்று நடைபெற உள்ள, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி., குறித்த அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்த வாரம் நிப்டியை பொறுத்தவரை, அதன் ரெசிஸ்டென்ஸ், 11150. இதை கடக்கும் நிலையில், மேலும் உயர்ந்து, வர்த்தகமாக வாய்ப்புள்ளது. அடுத்த ரெசிஸ்டென்ஸ், 11190 மற்றும் 11250; சப்போர்ட் 11010 மற்றும் 10945.
முருகேஷ் குமார்
murukesh.kumar@choiceindia.com
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|