பதிவு செய்த நாள்
16 செப்2019
00:22
கடந்த சில மாதங்களாகவே, இந்த வகை நிறுவன பங்குகள் வரலாறு காணாத அளவு சரிவை சந்தித்த சூழலில், பலர் நம்பிக்கை இழந்து விட்டனர். இனி இவற்றின் மதிப்பு, மீண்டு வர, பல காலம் ஆகும் என்ற நிலைமை தான் சந்தையில் இருந்தது.
பெருமுதலீட்டாளர்களே இந்த பங்குகளை விற்று, வெளியேறிய வண்ணம் இருந்தது தான் கள சூழ்நிலை.இப்படி இருந்த சூழலில், இந்த திடீர் விலை வளர்ச்சி ஆச்சரியத்தை தரும் வகையில் நடந்தேறியுள்ளது. பெரு முதலீட்டாளர்கள் விற்றாலும், வாங்க ஒரு கூட்டம் இருந்தது. சில்லரை முதலீட்டாளர்களே இதில் பெருவாரியாக இருந்தனர். சென்ற முறை எட்டிய உயர்ந்த மதிப்பீடுகளை, மீண்டும் அடைய வாய்ப்பு உண்டு என்பதே அவர்கள் நம்பிக்கை.
அதிகரிப்பு
ஆனால், அது பொதுவாக ஏற்கத் தகுந்த முதலீட்டு விதமா என்பது குறித்து பலரும் கேள்வி கேட்கத்தான் செய்தனர்.ஆனால், இவற்றின் சாதக பாதகங்களை அறியாதவர்கள் மட்டும், எஸ்.ஐ.பி., முறையில், தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர்.
கடந்த கால முதலீட்டு லாப வரலாறு, அவர்களின்நம்பிக்கையை வளர்க்கிறது.சிறு நிறுவனங்களை பற்றிய புரிதல், பலருக்கு அதிகம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், சிறு நிறுவனங்களின் மீதான முதலீட்டு ஆர்வம், சமீப ஆண்டுகளில் மிக அதிகமாக இருந்தது.
இவ்வளவு ஆர்வம் இருந்தும், ஏன் இந்த பங்குகள், மூன்றில் ஒரு பாகம் மதிப்பு இழந்தன? அவர்கள் மதிப்பை இழப்பதற்கு முன், எட்டிய உயரங்கள் நியாயப்படுத்த கூடியவை தானா?நிறுவனர்கள் தங்கள் மதிப்பு வெகுவாக உயர்ந்ததற்கு உரிய முக்கியத்துவமும், சரியான மரியாதையும், போதுமான மேலாண்மையும் தந்தனரா?
நிறுவன தலைமைகள் மதிப்பு பெருகிய நேரத்தில், அவர்கள் முதலீட்டாளர்களை நடத்திய விதம் எப்படி இருந்தது?மதிப்பு கூடியபோது, கண்ணியம், வெளிப்படைத் தன்மை, கார்ப்பரேட் கவர்னன்ஸ் ஆகியவை மேம்பட, என்ன செய்தனர்?இந்த கேள்விகளை யாரும் அதிகம் பொருட்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.
ஒரு பக்கம், நம்பிக்கையின் அடிப்படையில் மேலும் முதலீடு செய்ய முன்வந்த சில்லரை வர்த்தகர்கள், தொடர்ந்து பணம் செலுத்தினர். மறுபக்கம், நிறுவனங்கள் அவர்களை அதிகம் பொருட்படுத்தாதது போல் ஒரு ஆர்வமற்ற போக்கை கையெடுத்தனர்.இந்த நேரத்தில் தான் இந்த திடீர் மாற்றம் அமைந்திருக்கிறது.
பாதிக்கக் கூடாது
இந்த தருணத்தில், நாம் என்ன செய்ய வேண்டும்?பொருளாதார வளர்ச்சி குறைவான சூழலில், சிறு நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். சந்தையில் அவை பெறக்கூடிய மதிப்பு, 2017 – -18ல் இருந்தது போல் அமைய வாய்ப்பு இல்லை.இந்த சூழலில், எல்லா சிறு நிறுவனங்களையும் ஒருங்கே பொருத்தி, முதலீடு செய்யக் கூடாது.
மிகக் கவனமாக வரும் காலாண்டுகளில் ஆய்வு செய்து, நன்றாக வளர்ச்சி காணும் முதலீடுகளை மட்டும் வைத்துக் கொண்டு, தளர்வும், தொய்வும் அடையும் நிறுவன முதலீடுகளை விற்க வேண்டும்.கடந்த கால பங்கு விலைகள், நம் முதலீட்டு முடிவுகளை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிறு நிறுவன எதிர்காலம் நன்றாக அமைவது உறுதி என்றாலும், அது எப்போது நடக்கும் என்பது நமக்கு தெளிவாகத் தெரிய வேண்டும்.அந்த தெளிவில்லாமல் இருக்கும் முதலீடுகள், நீண்ட காலம் காக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முதலீட்டின் தனி தேவைகளை புரிந்து நடக்கும் காலகட்டம் நோக்கி நாம் நகர்கிறோம். உணர்ந்து முதலீடு செய்யுங்கள்.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
shyamsek@ithought.co.in
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|