பதிவு செய்த நாள்
18 செப்2019
06:17
புதுடில்லி : இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள், கச்சா எண்ணெய் விலை மாற்றங்களால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின், ‘அராம்கோ’ நிறுவனத்தின் எண்ணெய் ஆலையில், கடந்த சனிக்கிழமை அன்று, ஆளில்லா விமான தாக்குதல் நடைபெற்றதை அடுத்து, கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து; விலை அதிகரித்துள்ளது.தேக்க நிலைஇந்நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, இந்தியா உள்ளிட்ட, வளரும் நாடுகளுக்கு மிகவும் பாதகமாக அமையும் என, ஜப்பானை சேர்ந்த நிதி சேவை நிறுவனமான, ‘நோமுரா’ தெரிவித்துள்ளது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நுகர்வோர் தேவை குறைந்திருக்கும் நிலையில், எண்ணெய் விலை அதிகரிப்பு, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தேக்க நிலையை ஏற்படுத்தக் கூடும்.மேலும், பெரிய எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கு, அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.இந்தியா, அதன் எண்ணெய் தேவைக்காக, 70 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்து வருவதால், இன்னும் அதிக தாக்கம் ஏற்படும்.பணவீக்கம்ஏற்றுமதி அதிகரிக்காத நிலையில், அதிக எண்ணெய் இறக்குமதி செலவு, நடப்பு கணக்கு நிலைகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும், லாப வரம்புகளும் சுருங்கிவிடும். அத்துடன் நிறுவனங்களின் உற்பத்தி செலவும் அதிகரிக்கும். இது, சில்லரை விலை பணவீக்க குறியீட்டை அதிகரிக்கும்.தேவை பலகீனமாக இருக்கும் நிலையில், அதிக எண்ணெய் விலை, அது தற்காலிகமாக இருந்தாலும், பொருளாதார தேக்க நிலையை ஏற்படுத்தும்.ஒரு பேரல், கச்சா எண்ணெய்க்கு, 10 அமெரிக்க டாலர் விலை அதிகரித்தால், அது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 0.2 சதவீதத்தை குறைத்துவிடும்.மேலும், எண்ணெய் விலை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பையும் குறைக்கும்.
ஒவ்வொரு, 5 சதவீத மதிப்பு குறைவும், பணவீக்கம், 20 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்க காரணமாக அமையும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2.72 லட்சம் கோடி ரூபாய் இழப்புகச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், கடந்த இரண்டு நாட்களில், 2.72 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர். மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், சென்செக்ஸில் உள்ள, 30 நிறுவனங்களில், 27 நிறுவனங்கள் விலை சரிவை கண்டன. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், நடப்பு கணக்கு மற்றும் நிதிப் பற்றாக்குறையில் பாதிப்பு ஏற்பட்டு, பொருளாதார தேக்கநிலை கூடும் என்ற கண்ணோட்டத்தில் சந்தைகள் சரிவை கண்டன.
எகிறிய பெட்ரோல் விலைசவுதி அரேபியாவின், ‘அராம்கோ’ தாக்குதலுக்கு ஆளான பின், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல், 14 காசு அதிகரித்து, 72.17 ரூபாயாகவும், டீசல் விலை, 15 காசு அதிகரித்து, 65.58 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.ஜூலை, 5ம் தேதி அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில், கலால் வரி அதிகரிக்கப்பட்டதை அடுத்து, ஒரு லிட்டருக்கு, கிட்டத்தட்ட 2.50 ரூபாய் வரை உயர்ந்தது. அதன் பின், ஒருநாளில் ஏற்பட்ட விலை அதிகரிப்பு இதுதான். தினசரி வர்த்தகத்தில், சர்வதேச எண்ணெய் விலை, 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|