பதிவு செய்த நாள்
23 செப்2019
06:19
இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த, நிதியமைச்சர் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தோமோ, அவற்றில் இரண்டு முக்கிய விஷயங்களை செய்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.
நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது; கடன்கள் கொடுப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன் பலன் எப்படி இருக்கும்?கடந்த நான்கு வாரங்களாக, பல்வேறு தொழில் துறையினர் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், எண்ணற்ற சலுகைகளையும், கொள்கை திருத்தங்களையும் அறிவித்து வந்தார் நிதியமைச்சர். ஆனாலும், ஒரு அவநம்பிக்கை தொடர்ந்து கொண்டே இருந்தது.
இந்த முயற்சிகள் போதுமா என்ற கேள்வி குடைந்தபடி இருந்தது.கடைசியாக, பொதுத் துறை வங்கிகளில் இருந்து, பல்வேறு கடன்களை கொடுப்பதற்கான முகாம்களை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்.இந்தியாவெங்கும் மொத்தம், 400 மாவட்டங்களில் கடன் முகாம்கள் நடத்தப்படும். தீபாவளி பண்டிகைக்கு முன், 200 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றன.தொழில் துறையினர், நுண், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், தனிநபர்கள், விவசாயிகள் என, அனைத்து தரப்பினருக்கும் இந்த முகாம்களில் கடன் கொடுக்கப்படும்.உடனே, இந்த முயற்சியை, ‘கடன் மேளா’க்கள் என்று கிண்டல் செய்பவர்கள் உண்டு.
ஆனால், இதன் பின்னே ஓர் அவசர அவசியம் இருக்கிறது.தேவைமேல்மட்டத்தில், பல்வேறு தொழில் பிரிவினர் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படலாம். ஆனால், கீழ்மட்டத்தில், பொருளாதார சுழற்சி மீண்டும் துவங்குவதற்கு நிதி ஆதாரம் வேண்டும்.அமெரிக்காவில் அதிபர்களாக இருந்த, புஷ்ஷும், ஒபாமாவும் தத்தமது ஆட்சிக்காலங்களில், அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் தலா, 600 டாலர் வழங்கினர். அதன் பயனாகத்தான், 10 ஆண்டுகள் கழித்து, இன்று அமெரிக்க பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது.நிதியமைச்சர் அறிவித்திருப்பது அசாதாரண நடவடிக்கை தான். இதனால், நம் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கப்போவதும் உறுதி. கார்ப்பரேட் வரியைக் குறைத்ததனாலும், கடன் முகாம்களாலும், தற்போது, 3.3 சதவீதமாக இருப்பதாக கருதப்படும் நிதிப் பற்றாக்குறை, 3.7 சதவீதம் அளவுக்கு உயரும் என்கின்றனர், நிதித்துறை நிபுணர்கள்.இன்னொரு செய்தியும் கசிந்திருக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகிகளோடு நிதியமைச்சர் நடத்திய கூட்டத்தின்போது, கடன் முகாம்கள் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. அதில் பங்கு பெற்ற இரண்டு மூத்த நிர்வாகிகள், ஒரு வாதத்தை முன்வைத்து உள்ளனர்.வங்கிகளிடம், கடன் கொடுப்பதற்கான நிதி ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன.
ஆனால், கடன் கேட்போர் இல்லை என, தெரிவித்து உள்ளனர்.நிதியமைச்சர் இந்த வாதத்தை ஏற்கவில்லை. மாறாக, ‘கடனே கிடைப்பதில்லை என்ற தவறான தோற்றம் சமூகத்தில் ஏற்பட்டுள்ளது; அதை, மாற்றியமைக்க வேண்டும். அதற்காகத் தான் கடன் முகாம்கள்’ என்று அவர் விளக்கம் சொன்னதாக தெரிவிக்கின்றனர், முகம் காட்ட விரும்பாத நிர்வாகிகள்.மூன்று அம்சங்கள்கடன் முகாம்கள் மூலம் எவ்வளவு தொகை வினியோகம் செய்யப்படும் என்பதற்கான கணக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகளுக்கு, 55 ஆயிரம் கோடி ரூபாய் மறுமுதலீட்டுத் தொகை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. அது தான், இப்படி கடன்களாக வினியோகமாகும் என்று கருதலாம்.அதேபோல், வட்டி விகிதங்களில் புதிய சலுகை இருக்குமா என்பதும் தெரிவிக்கப்படவில்லை. பொதுத் துறை வங்கிகளின், ‘பெரிய அண்ணன்’ எஸ்.பி.ஐ., தான். வீட்டுக் கடன்களுக்கான இதன் குறைந்தபட்ச வட்டி விகிதமே, 8.40 சதவீதம் தான்.
தற்போதைய நிலையிலேயே இந்த வட்டியில் கடன் கிடைக்கும் போது, எதற்கு கடன் முகாமுக்கு வாடிக்கையாளர்கள் வர வேண்டும்?அதனால், கடன் முகாம்களுக்கு என்று பல்வேறு பிரிவுகளில், சலுகை வட்டி விகிதத்தை வங்கிகள் அறிவித்தால் தான், வாடிக்கையாளர்களிடையே குதுாகலமும், உற்சாகமும் பீறிடும். அதேபோல், கொடுக்கப்படும் தொகையின் அளவும் உயர்த்தப்பட வேண்டும். முகாம் நெருக்கத்தில், இத்தகைய ஓர் அறிவிப்பு வரக்கூடும். இப்படிக் கொடுக்கப்படும் கடன்களில், பாதியளவுக்குத் திரும்பி வராது, அவை வாராக் கடன்களாக தேங்கிப் போய்விடும் என்பது தான் உண்மை.இந்த முயற்சியே, பொதுமக்கள் மத்தியில் நிதி சுழற்சியை அதிகப்படுத்தி, அதன் மூலம் உற்பத்தி மற்றும் பொருளாதார சுழற்சியை துாண்டிவிட வேண்டும் என்பதற்காக செய்யப்படுவது தானே!
அதனால், வாராக் கடன் பற்றி இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கழித்து யோசித்துக் கொள்ளலாம் என்று அரசு நினைத்திருக்கும்.உஷார்வாடிக்கையாளர்களாகிய நாம் தான் இங்கே உஷாராக இருக்க வேண்டும். குறைந்த வட்டியில் தனிநபர், வாகனம், வீட்டுக் கடன்கள் கிடைக்கின்றன என்று வாயை பிளந்துகொண்டு போய், கடன் எனும் படுகுழியில் விழுந்துவிட வேண்டாம்.
உண்மையிலேயே உங்களுக்கு ஒரு தேவை இருக்குமானால், அப்போது கடன் வாங்குங்கள். விரைவில் கட்டுவதற்கான தொலைநோக்கு திட்டத்தோடு, குறுகிய கால கடன்களை வாங்குங்கள்.கடனை திருப்பிச் செலுத்தும் சக்தி என்ன என்பதை வங்கிகள் கணக்கிட்டு சொல்வதைவிட, நீங்களே கணித்து கடன் வாங்குங்கள்.நாடு மூழ்கி விடக் கூடாது என்பதற்காக, அரசு கடன் கொடுக்கிறது. அந்த வெள்ளத்தில், வீடு மூழ்காமல் பார்த்துக் கொள்வது உங்கள் கடமை!-------------------ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்pattamvenkatesh@gmail.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|