பதிவு செய்த நாள்
25 செப்2019
00:29
புதுடில்லி: மத்திய அரசு, ‘59 நிமிடங்களில் கடன்’ எனும் திட்டத்தை மேலும் பயனுள்ளதாக மாற்ற இருப்பதாக, மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவன துறை அமைச்சர், நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சிறு வணிகர்கள், 59 நிமிடங்களில் கடன் வழங்கும் திட்டத்தில் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை என, வங்கிகள் தரப்பு தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.மேலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடமும், இந்த கடன் திட்டம் குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படவில்லை எனவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், மத்திய அமைச்சர், நிதின் கட்கரியின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.‘ஆன்லைன்’ மூலமாக கடன் வழங்கும், நாட்டின் மிகப்பெரிய இந்த திட்டம், பிரதமர், நரேந்திர மோடியால், கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் வசதி பெறுவதை எளிதாக்கவும், வெளிப்படையான முறையில் அவர்களுக்கு கடன் வழங்கவும், இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு மாதங்களுக்குள், 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.கடந்த மார்ச், 31ம் தேதி நிலவரப்படி, 50 ஆயிரத்து, 706 கடன் திட்டங்களுக்கு, கொள்கை ரீதியிலான ஒப்புதல் கிடைத்துள்ளது. மேலும், 27 ஆயிரத்து, 893 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ், பிணையுடன் கூடிய அல்லது பிணையற்ற வணிகக் கடன்கள், 1 லட்சத்திலிருந்து, 5 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகின்றன.
சமீபத்தில், இந்த திட்டத்தின் கீழ், வீட்டுக் கடன் மற்றும் தனிநபர் கடன் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. 15 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் கடனுக்கான கொள்கை ஒப்புதலும், 10 கோடி ரூபாய் வரையிலான வீட்டுக் கடனுக்கான கொள்கை ரீதியான ஒப்புதல்களும் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.இருப்பினும், இது குறித்து மேலும் விழிப்புணர்வு தேவை என்றும், இந்த வெளிப்படையான திட்டத்தின் மூலம் கடன் பெறும் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், வங்கிகள் தெரிவித்து வந்தன.
இந்நிலையில், மத்திய அமைச்சர், நிதி கட்கரி, இந்த திட்டம் குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என கூறியுள்ளார்.மேலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்காக, பங்குச் சந்தை வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்ததாவது: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், நிதி திரட்ட, மூலதன சந்தையை பயன்படுத்த முன்வர வேண்டும். 20 நிறுவனங்கள், தேசிய பங்குச் சந்தையில் பதிவு செய்து, தேவையான நிதியை திரட்டி உள்ளன. எந்த ஒரு நிறுவனமும், மூலதன சந்தை மற்றும் பங்குச் சந்தைகளுக்கு வந்து, பங்குகளை அதிகரிப்பதாக இருந்தால், அதில், 10 சதவீதம் அரசின் பங்களிப்பாக இருப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
மேலும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் பொருட்களுக்கு, விரைவில் பணம் கிடைப்பதில்லை. இதை சரி செய்ய, நாங்கள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளோம். அவர்களுக்கு, 45 நாட்களுக்குள்ளாக பணம் கிடைப்பதற்கான வழிகள் குறித்து, ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|