பதிவு செய்த நாள்
30 செப்2019
02:16
பங்கு முதலீட்டிற்குள் சமீப காலத்தில் நுழைந்தவர்கள் பலரும் சலனம் அடைந்திருந்த நேரத்தில், அரசின் நேரடி வரி குறைப்பு அறிவிப்பு வந்தது.
நேரடி பங்கு மற்றும் மியூச்சுவல் பண்டு மூலம் முதலீடு செய்யும்போது, மதிப்பு கூடுவதும், குறைவதும் தொடர் நிகழ்வுகள் தான். என்றாலும், பழக்கப்படாத புதியவர்கள், இத்தகைய மாற்றங்களை புரிந்து ஏற்க, மிகவும் சிரமப்படுவர்.அப்படி சிரமப்படும் நேரங்களில், ஏதாவது மாற்றம் ஏற்பட்டு விடிவு வராதா என்று ஏக்கத்துடன் காத்திருப்பர். எந்த விடிவும் வராது என்று ஒருவித விரக்தி சூழல் அடிக்கடி ஏற்படுவதும் உண்டு.
இதையெல்லாம் கடந்து வெற்றி காண, அனுபவம் மிக முக்கியமான கருவி என்றாலும், அது சந்தையில் பெருவாரியானோர் வசம் இருக்காது. மிக அவசியம்அப்படி அனுபவம் குறைவாக உள்ள புதியவர் கள், அதிகம் பங்கேற்கும் சூழலில் தான், நம்முடைய சந்தை தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது.புதியவர்கள் எப்படி சந்தையின் மாறும் சூழலுக்கு ஏற்ப, தம்மை வழி நடத்துகின்றனர் என்பதை, அவர்கள் சந்தையில் தொடர்ந்து பங்கேற்பதையே தீர்மானிக்கும்.
இன்னும் சொல்லப் போனால், சந்தையின் நெடு நாள் ஆரோக்கியத்திற்கும் பொதுமக்களின் பரந்த பங்கேற்பு மிகவும் அவசியம் எனலாம்.இதற்கான முக்கிய தேவை, முதலீட்டாளர்களின் விரக்தி சீராக கையாளப்பட வேண்டும் என்பது தான். விரக்தி கூடி, உச்சத்தை தொடாத வண்ணம், சந்தை நிர்வகிக்கப்பட வேண்டும்.கிட்டத்தட்ட அத்தகைய சூழல் ஏற்பட்டுவிட்ட நேரத்தில் தான், அரசின் நடவடிக்கை பலருக்கும் இன்ப அதிர்ச்சி தந்தது. அறிவிப்பின் எதிரொலியாக, சந்தை கண்ட உடனடி உயர்வில், தங்களுடைய பங்கு முதலீடுகளும் பலன் அடைந்து பலம் பெரும் என்று பரவ லான எதிர்பார்ப்பு, அனைவரிடமும் தோன்றியது.கடந்த வார பங்கு வர்த்தகம், அந்த எதிர்பார்ப்பு சற்றே தடுமாறும் வகையில் அமைந்தது.
இதற்கு என்ன காரணம் என்பதை பலரும் உணர்ந்ததாக தெரிய வில்லை. இதற்கு சலுகைகள் சார்ந்த முதலீட்டாளர் புரிதலே காரணம்.எந்த அரசு கொள்கையும், எத்தகைய சலுகைகளும் பயனாளிகளின் தயார் நிலை சார்ந்து தான் மாற்றம் ஏற்படுத்தும். பயனாளிகள் யார் என்ற தெளிவான புரிதலும் சந்தைக்கு மிக அவசியம். இந்த வரி சலுகை, பெரு நிறுவனங்களுக்கும், புதிதாக நிறுவப்பட உள்ள நிறுவனங்களுக்கும் மட்டுமே நன்மை செய்யும்.சந்தை நகரும் சிறு நிறுவனங்கள் ஏற்கனவே இந்த பலன்களை பட்ஜெட்டில் பெற்றுவிட்ட சூழலில், அவர்களில் பெரும்பாலானோருக்கு, இந்த அறிவிப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
சந்தையில் பெரும்பாலான புது முதலீட்டாளர்கள், சிறு நிறுவன பங்குகளில் தான் அதிக முதலீடு செய்து காத்திருக்கும் சூழலில், அவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு இருப்பது தெரிகிறது. இதற்கு, ஒரு தீர்வு தான் உள்ளது. வரும் காலங்களில் பலன் அடைந்து, பலம் காணும் நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றில் முதலீடு செய்வது மட்டுமே பலன் தரும்.காலத்தோடு மாற்றி அமைத்துக் கொள்ளப்படும் முதலீடுகளால் மட்டுமே வெல்லும் சூழல் நோக்கி சந்தை நகரும். நாமும் சந்தையோடு நகர்வோம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|