பதிவு செய்த நாள்
04 அக்2019
23:18
புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த செப்டம்பரில், 48.7 புள்ளிகளாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட மிக குறைந்த அளவாகும் இது.‘
நிக்கி – மார்க்கிட்’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:‘நிக்கி – ஐ.எச்.எஸ்., மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, செப்டம்பர் மாதத்தில், 48.7 புள்ளிகளாக சரிவடைந்துள்ளது.
இது கடந்த, 18 மாதங்களில் இல்லாத சரிவாகும். இது, ஆகஸ்ட் மாதத்தில், 52.4 புள்ளிகளாக இருந்தது.இது, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால் வளர்ச்சி என்றும், 50 புள்ளிகளுக்கு கீழ் இருந்தால் சரிவு என்றும் கருதப்படுகிறது.செப்டம்பர் மாதத்தில், புதிய வேலைகளுக்கான வாய்ப்பு சுருங்கியது, தேவைகள் குறைந்தது, போட்டியாளர்களிடையே இருந்த நியாயமற்ற விலை நிர்ணயம், மற்றும் பொருளாதார நிலை ஆகியவை காரணமாக இத்துறையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக, ‘சர்வே’ தெரிவிக்கிறது.
தனியார் துறை செயல்பாடுகளின் வளர்ச்சி செப்டம்பர் மாதத்தில் நின்று போய்விட்டது. இதனால், ஒன்றரை ஆண்டுகால தொடர் முன்னேற்றம் தடைபட்டுவிட்டது.உற்பத்தி மற்றும் சேவை ஆகிய இரண்டு துறைகளையும் சேர்த்த, பி.எம்.ஐ., குறியீடு ஆகஸ்டில், 52.6 புள்ளிகளாக இருந்தது. செப்டம்பரில், 49.8 புள்ளிகளாக குறைந்துள்ளது.இது மெதுவான உற்பத்தி துறை வளர்ச்சியையும் முற்றிலும் குறைந்துபோன சேவை துறை வளர்ச்சியையும் குறிக்கிறது.
சவாலான பொருளாதார நிலைமைகள், வணிக நம்பிக்கையை குறைத்துள்ளன. பொருட் களை தயாரிப்பவர்கள் மற்றும் சேவை வழங்குபவர்கள் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. மொத்த நம்பிக்கை, 31 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது.
இந்தியாவின் தனியார் துறை உற்பத்தி, 2018 பிப்ரவரிக்கு பிறகு, முதன் முறையாக சுருங்கி உள்ளது. இது விற்பனை வீழ்ச்சியை, வேலைவாய்ப்பு வளர்ச்சியின்மையை பிரதிபலிக்கிறது. வணிக நம்பிக்கை கவலைக்குரிய வகையில், 31 மாதங்களில் இல்லாத வகையில் சரிந்துள்ளது.
பாலியானா டி லிமா,
தலைமை பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்கிட்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|