பதிவு செய்த நாள்
05 அக்2019
23:52
புதுடில்லி:புதிய தொழில்துறை கொள்கை குறித்த வரையறைகளை தயாரிக்க, மத்திய அரசு செயற்குழு ஒன்றை அமைத்துள்ளது.
உலகளவில், இந்தியாவை ஒரு உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சியில், மத்திய அரசு
ஈடுபட்டுள்ளது. இதையடுத்து, புதிய தொழில்துறை கொள்கை ஒன்றை உருவாக்கவும் அரசு முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக, தற்போது புதிய தொழில்துறை கொள்கையின்
வரையறைகளை,தயாரிக்க, செயற்குழுவை அமைத்துள்ளது.
ஏழு மாநிலங்கள்
மத்திய அரசு, ஏழு மாநில அரசுகள் மற்றும் உள்நாட்டு தொழில்துறை ஆகியவற்றை சேர்ந்த உறுப்பினர்களை கொண்டதாக, இந்த செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவானது, தொழிற்துறையின் பிரச்னைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து கண்டறியும் என,
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது.
இந்த செயற்குழு, குறுகிய மற்றும் நடுத்தர காலத்திற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தீர்வுகளை வழங்கும். அத்துடன், தேசிய இலக்குகளை அடைவதில், தனியார் துறைக்கு இருக்கும் பங்குகளையும் வரையறுக்கும்.இந்த செயற்குழுவில், ஆந்திரா, அசாம், குஜராத், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஏழு மாநிலங்களைச் சேர்ந்த கூடுதல் தலைமை செயலர்கள் அல்லது தொழில்துறை பொறுப்பாளர்கள் இடம்பெறுகிறார்கள்.
மேலும், இந்திய தொழிலக கூட்டமைப்பு மற்றும் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின்
கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளிலிருந்தும் உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள்.இந்த செயற்குழுவில் வர்த்தகம், வருவாய், பொருளாதார விவகாரங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் என, ஆறு மத்திய அமைச்சகங்களை சேர்ந்த கூடுதல் செயலர் அல்லது இணை செயலர்கள் உறுப்பினர்களாக இடம்பெறுகிறார்கள்.
புதிய பரிந்துரை
தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை, ஏற்கனவே ஒரு கொள்கை வரைவை தயாரித்து, அமைச்சரவை யின் ஒப்புதலுக்காக அனுப்பி இருந்தது. இருப்பினும், கொள்கை தொடர்பாக மேலும் சில புதிய பரிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.புதிய தொழில் கொள்கையை உருவாக்கும் முயற்சியில், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை, மே 2017ல் இறங்கியது. இந்த புதிய கொள்கை, தேசிய உற்பத்தி கொள்கையை
உள்ளடக்கியதாகும்.
அடுத்த, 20 ஆண்டுகளுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது,வெளிநாட்டு தொழில் நுட்ப பரிமாற்றத்தை ஊக்குவிப்பது, ஆண்டுதோறும், 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பது ஆகியவற்றின் அடிப்படையில், புதிய தொழில் கொள்கை அமைவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் முதலாவது தொழிற்துறை கொள்கை, 1956ம் ஆண்டிலும், இரண்டாவது தொழிற்கொள்கை, 1991ம் ஆண்டிலும் உருவாக்கப்பட்டது. தற்போது, மூன்றாவதாக புதிய கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|